யாதுமாகி நின்றாய் - சாந்தி ஆறுமுகசாமி
"நந்துவாம் நந்து,
ஒ சந்துல சிந்து பாடுவாராமா?
நந்து ஏதாவது பொந்தில் இருப்பாரோ?"
கேலியாக பேசிய பெண்ணை எரித்துவிட வேண்டும் போல் தோன்றியது. ஆனாலும் மனதை அடங்கு அடங்கு என்று அடக்கினான் நந்து என்ற நந்தகுமார். நடந்து முடிந்த தனது திருமணத்தை குறித்து எரிச்சலடைந்தான். நினைவுகளில் மூழ்கினான்.
நந்தகுமார், "மா! ஏன்மா இந்த கொலைவெறி. நான்தான் இப்போ கல்யாணம் வேண்டாம்னு தானே சொன்னேன் வேண்டவே வேண்டாம்னா சொன்னேன். ப்ளீஸ் மா!"
"நோ நந்து! உனக்கு நான் கொடுத்த டைம் ஓவர். இதுக்கு மேலையும் நீ என்னைய பொறுத்துக்க சொல்றது நியாயமில்லை" என்றாள் அகல்யா.
கடந்த ஒரு வருடமாக தள்ளி போட்டு வந்த கல்யாணத்தை இந்த வருடம் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பது அகல்யாவின் எண்ணம். அவளுக்கு தெரியும் நந்துவின் காதலை பற்றி அது முறிந்து போன விதமும். தன் மகன் தவிப்பை அவளால் பார்க்க முடியவில்லை. தந்தை வாசுதேவனுக்கு பிசினஸ் தான் முக்கியம். மனைவி, பிள்ளை மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
"மா! நான் ரொம்ப நொந்து போயிருக்கேன்."
"நந்து நான் ரொம்ப வெந்து போயிருக்கேன்."
"வேண்டாம்மா விளையாடாதீங்க. என் வேதனை உங்களுக்கு விளையாட்டா போச்சு இல்லை?"
"இல்லைடா கண்ணா உன் வேதனையை மாற்ற நினைக்கிறன்.
பாஸ்ட் ஸ் பாஸ்ட்,
பரி த பாஸ்ட்,
சியர் அப் மை டியர் சன்!!!
மடியில் படுத்த மகனின் தலையை வருடினாள். அவனுக்கு தெரியாமல் கண்ணில் தளிர்த்த நீரை சுண்டினாள்.
அஹா! அது அவள் கன்னத்தில் தெறித்த போது நந்து வேகமாக நிமிர்ந்தான்.
"மா, அழறீங்களா? நோ.......... பாஸ்ட் ஸ் பாஸ்ட் என்று நீங்க தான சொன்னீங்க. விடுங்கமா."
நந்தகுமார் ஒரு மெக்கனிக்கல் எஞ்சினியர். தன் நண்பனின் சகோதரியை விரும்பினான். பெரிதாக பார்க் பீச் என்று சுற்றவில்லை தான் இருந்தாலும் செல்போனில் மட்டுமே காதலை பரிமாறினார்கள். அவளுடைய திறமைகள் பலவற்றை கண்டு வியந்திருக்கிறான். பேச்சு ஆடல் பாடல் அத்தனை கலை நயங்களிலும் சிறந்து விளங்கினாள்.
ஆனால் அவளுக்குள் பல ஆசைகள் இருப்பதை அவன் அறியவில்லை. நந்துவிற்கு வெளிநாடு செல்வதில் ஆர்வமில்லை என்பது தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவள் வெளிநாடு நண்பனை வேக வேகமாக காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். உடைந்து போனான் நந்து, பெண்கள் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. அதை மறைக்க கல்யாணத்தை மறுத்தான்.
தாயின் மேல் உயிரை வைத்திருக்கும் நந்துவால் மறுக்கவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை. திணறினான். மனதை தேற்றுவதற்கு நேரமும் கேட்டான். கேட்ட நேரமும் முடிந்துவிட்டது. இந்த நேரத்தில் தான் தூரத்து சொந்தகாரர் தன் ஊர்காரர் பெண் ஒருத்தி நிச்சயதார்த்தம் முடிந்த பின் நின்று போன பெண்ணை தன் மகனுக்கு முடிக்க நினைத்தாள் அகல்யா. அவள் நினைக்க காரணம் இருந்தது. மிருதுளா மிகவும் அழகான பெண் மட்டுமல்ல. நல்ல குணவதியும் கூட என்பது அவள் எண்ணம். தன் மகனை அனுசரித்து போவாள் என்று நம்பினாள். ஏனெனில் முன்னொருமுறை மிருதுளா அண்ணன் கல்யாணத்திற்கு சென்ற போது அவள் கல்யாண வீட்டில் துரு துருவென்று அனைவரையும் வரவேற்று உபசரித்த விதம் அவளை கவர்ந்தது. தன் கணவரிடம் அதை பற்றி கூறினாள்.
"ஏங்க நம்ம நந்துவிற்கு இவள் நல்ல பொருத்தமா இருப்பாள். பார்க்க கண்ணுக்கு லட்சணம், சீக்கிரமா இவங்க அப்பா அம்மாவிடம் பேசிடனும் இல்லைன்னா யாராவது பெண்ணை கொத்திட்டு போய்டுவாங்க"
அகல்யா தீவிரமாக இருக்கும் பொழுதுதான் நந்துவின் காதல் அம்பலமானது. இதற்குள் இந்த பெண்ணை வேறொருவருடன் நிச்சயிக்க, அகல்யாவின் கனவு கலைந்தது. இப்பொழுது அந்த கனவை புதுப்பிக்க நினைத்தாள். இதனை மிருதுளாவின் குடும்பம் மனதார ஏற்று கொண்டார்கள். அதனால் பிடி ஆதாரமாக வைத்து கொண்டு முன்னேறினாள். நந்து முரண்டு பிடித்தான்.
"மா, நிச்சயமாகி நின்ற பெண்ணை என் தலையில் கட்ட பார்க்கறீங்க? நான் என்ன அவ்வளவு மோசமானவனா?"
"ஐயோ நந்து அப்படியில்லை. உனக்கு என்னடா குறைச்சல்! ராஜா மாதிரி இருக்க!"
"பின்னே என்னம்மா எனக்கு மட்டும் ஏன்மா இப்படி நடக்குது?"
"சரி வேண்டாம் விடு வேற பெண்ணை பார்க்கலாம். தரகர் சொன்ன மதுரை பெண்ணை போய் பார்க்கலாமா?"
"ஐயோ அம்மா மதுரையும் வேண்டாம் மும்பையும் வேண்டாம்."
"டேய் நந்து! உனக்கு என்ன வேண்டும் எது வேண்டாம் என்று எங்களுக்கு தெரியும். அம்மா சொல்ற பெண்ணை கட்டிக்க. அவ ராத்திரி எல்லாம் அழறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு மா... உங்க அம்மா சந்தோஷத்துக்காக சரின்னு சொல்லுடா."
தந்தையின் அதிகார குரல் இறங்கி கெஞ்சுவது கண்டு நந்து மனம் இளகினான்.
தாயிடம், "ஒகே மா உன் இஷ்டம்."
"போடா அப்படி சொல்ல கூடாது. இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். முழு மனதோடு சொல்லு அப்போதான் என்னால இதை செய்ய முடியும்.
"ஒகே மா ஒகே மா.. ஈ ஈ போதுமா", என்று நந்து சிரித்து காட்ட அகல்யா அளவில்லா ஆனந்தம் அடைந்தாள்.
நந்து நினைவுகளில் மீண்ட போது தன் திருமணம் முடிந்து விட்டது என்றும் தன்னை மணந்த பெண் தான் தன் பெயரை கிண்டல் செய்கிறாள் என்பதையும் உணர்ந்தான்.
"ஏய் என்ன சொன்னாய்?"
மிரண்டாள் மிருதுளா.. பயப்படுபவள் அல்ல ஆனாலும் எதிர்பாராத நேரத்தில் எதிரில் நின்றவனை கண்டு மிரண்டாள். திருமணம் முடிந்த மத்தியான வேளையில் தன் தோழிகளுடன் பேசிய மிருதுளா தன் வீட்டு தோட்டத்தில் அவனை எதிர்பார்க்கவில்லை.
நந்துவோ எதிர்பாராமல் தனக்கு பிடிக்காமல் நடந்த திருமணத்தை மனதில் நினைத்தவன் காலாற நடக்க நினைத்த போது தன் பெயர் அடிபடுவது கண்டு தோட்டத்திற்குள் நுழைந்தான்.
"ஏய் என்ன முழிக்கற?"
"என் பெயர் ஒன்னும் ஏய் இல்லை", என்று அங்கிருந்து மின்னலாய் மறைந்தாள்.
சே ! வரட்டும் கவனித்து கொள்கிறேன் என்று கருகியவள் அவனது எழிலான உருவம் அவளை சிறிது அசைத்தது கண்டு ஆச்சரியமடைந்தாள்.
இரவில் அலங்கார படுக்கையை கண்ட நந்து எரிச்சலடைந்தான். மிருதுளாவை கண்டதும் கூடுதல் கோபமும் ஆத்திரமும் அடைந்தான். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதை மறந்தான்.
"உன்னை யாரு வர சொன்னது?"
சிறிது அமைதி காத்த மிருதுளா, கண்ணை சிறிதாக உருட்டி
"அச்சச்சோ, எல்லா பெரியவங்களும் உள்ளே போம்மா போம்மா என்று விரட்டியதால் தானே வந்தேன். நான் போறேன் போங்க!"
"ஐயோ கடவுளே, நில்லு நில்லு போகாதே! போகாதே!" என்று பதறினான்.
"ஒகே ஒகே..." என்றவள் பால் செம்பை அவனிடம் கொடுத்தாள். அருகில் வர நினைத்த மிருதுளா மெதுவாக மிக மெதுவாக அவனருகே வந்த போதும் பதறி விலகினான். மிருதுளா கலகலவென்று சிரித்து விட்டாள்.