என் தேவதை - சைலஜா
சன்சிதா சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள் . காற்றுக்கு ஏற்றவாறு அவளுடைய கற்றைமுடி அவள் முகத்தில் வந்து அங்கும் இங்கும் அசைந்தாடியது. அவள் அணிந்திருந்த பிங்க் நிற உடையில் அவள் ஒரு தேவதை போல் காட்சி அளித்தாள். கையில் ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு வேறு ஏதோ ஆழ்ந்த யோசனையில், அவள் ஒரு தனி உலகத்தில் இருந்தாள்.
அப்போது உள்ளே நுழைந்தான் சுஷாந்த். சன்சிதாவை அங்கு கண்டதும் அந்த இடத்தை விட்டு நகராமல் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் நீல நிற கண்களும், கன்னக்குழி சிரிப்பும் முதல் முறை அவளை பார்த்த பொழுதே அவனை காதலில் விழச் செய்தது. அவன் இரண்டு வாரங்களுக்கு முன் தான் விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தான். அவன் அன்னை அவனை எத்தனை முறை அழைத்தும் அவன் வரவில்லை.எந்த பெண்ணும் தன்னை ஒரு பார்வையில் இப்படி புரட்டிபோடுவாள் என்று அவன் என்றும் எண்ணியதில்லை. அவளை தாண்டி அவன் கண்கள் வேறு ஒன்றை பார்க்க மறுத்தது.
அவளை பார்த்து கொண்டே முன்னேறி நடந்தான். எதிரில் சோபா இருப்பதை கவனிக்காமல் கால்கள் இடறி சன்சிதாவின் அருகில் விழுந்தான். இதை எல்லாம் ஓரக்கண்ணில் பார்த்த சன்சிதா, சுஷாந்தை பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்த்தாள். பின் சோபாவிலிருந்து எழுந்து வந்து அவள் மிருதுவான கைகளால் அவன் முழங்கால்களை தேய்த்தாள். அவனின் கண்கள் அவளை விட்டு அகலவில்லை. அவளை அப்படியே இழுத்து அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று எழுந்த ஆசையை அடக்கி கொண்டு அவளை பார்த்து "thank you " என்று சொல்லி மெல்ல எழுந்து நடந்தான்.
கொஞ்சம் தூரம் சென்று அவள் என்ன செய்கிறாள் என்று பார்பதற்காக திரும்பினான். அவள் மறுபடியும் சோபாவில் அமர்ந்து ஏதோ யோசித்து கொண்டிருந்தாள். இவன் திரும்பியதும் "வலிக்குதா" என்று கேட்டாள். அவ்வளவு தன ஓடிச் சென்று அவளைத் தூக்கி அவள் இரு கன்னங்களிலும் முத்தமழையை பொழிந்தான். அவளுக்கும் அது பிடித்து போனது அவனை பார்த்துச் சிரித்தாள்.
அவள் வேறு யாருமில்லை முதல் பார்வையிலேயே அவனை மயங்கச் செய்த மூன்று வயதே நிரம்பிய அவன் அண்ணன் சக்தியின் மகள்.
{kunena_discuss:785}