நேற்றுபோல் இன்று இல்லை – புவனேஸ்வரி கலைசெல்வி
கொட்டும் மழை சாரலை வாவென்று இன்முகம் காட்டி வரவேற்கவும் இப்பொழுதெல்லாம் பெரிய மனம் வேண்டும். மழைய பார்த்தா " வாவ் " ன்னு ரசிக்கிறவங்களை விட " ச்ச ..இந்த மழை இப்போதான் வரணுமா ?" அப்படின்னு நொந்து கொள்பவர்கள் அதிகம் நிறைந்த அந்த பரபரப்பான சாலையின் எதிரில் பிரதானமாய் தோற்றம் அளித்தது அந்த கலைக் கல்லூரி.. கல்லூரிக்கு அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் அனைவரும் மழையை நொந்து கொண்டு இருக்க, தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல மழையை இன்முகம் காட்டி வரவேற்றாள் ஜீவரதி ... !
" ஹே ஜீவா, போதும் டீ ..மானத்தை வாங்காதே ! பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி மழை வரும்போது எல்லாம் நீ பண்ணுற அலும்பல் தாங்களே.. உன்னோடு சேர்த்து எங்களையும் லூசுன்னு நினைக்க போறாங்க " என்று எரிச்சலாய் பேசினாள் அவளது தோழி சில்வியா....
" அடிபோடி .. பேரு மட்டும் சில்லுனு சில்ல்ல்ல்ல்ல்ல் வியான்னு வெச்சுகிட்டு மழையில் நனைய பயப்படுறியே " என்று தோழியுடன் நக்கலாய் பதில் அளித்தவள் மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டாள் ...
" மழைத்துளி வானம் நடத்தும் வேள்வியின் பயன்
மழைத்துளி தேவன் சிதறுகின்ற பொற்காசு
மழைத்துளி கொதிக்கும் இதயத்தை குளிர்விக்கும் அருவி
மழைத்துளி பூமியை முத்தமிடும் காதலன்
மழைத்துளி என் பெண்மையை சீண்டி பார்க்கும் கள்வன் ..
ஒவ்வோர் மழைத்துளியும் ஒவ்வோர் அழகு .. அது ஒவ்வோர் அதிசயம்.. ஒரு பையன் மழையில் நனைஞ்சா அதை அழகுன்னு சொல்ல , ம்ம்ம் ஹ்ம்ம் அதை அழகுன்னு ரசிக்க கூட யாருக்கும் மனம் வராது .. ஆனா ஒரு பெண் மழையில் நனைஞ்சா மட்டும் சீன் போடுறா , மழை ஸ்ரேயான்னு நெனப்பு, அடக்கமே இல்லை ன்னு விமர்சனம் செய்ய பலரும் அந்த பெண்ணை சதைமலராய் பார்க்க சிலரும் ஒன்னு கூடி விடுவாங்களே ...! ஆனா இதை பார்த்து நான் ஒதுங்கி நிற்க வேணுமா ? மழை என்ன சினிமா நடிகைகளின் சொத்தா .. அவங்க நனைஞ்சா அது அழகு நாங்க நனைஞ்சா அது அமிலமா ? " இப்படி கேள்விகளை மனதிற்குள் அடுக்கி கொண்டே போனாள் கேள்வியின் நாயகி ஜீவரதி ..
ஜீவரதி, ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் மாணவி. படிப்பு , விளையாட்டு , பேச்சு இப்படி அனைத்திலும் சுட்டி.. அவளை பொருத்தவரை அந்த கல்லூரியில் சீனியர் ஜுனீயர் என்று யாருமே இல்லை ..அனைவரையுமே தனது தோழர்களாய் பார்க்கும் மனம் படைத்தவள் .. காரணம் கேட்காமல் உதவி செய்யும் அவள் அனைத்து நண்பர்களின் அபிமானம் ! பேர் சொல்லும் பிள்ளை மாதிரி அவள் கல்லூரி பாராட்டும் முல்லை .. அதனாலோ என்னவோ அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் காலேஜ் முழுக்க பரவிவிடும்.. அவள் காதல் செய்தி உட்பட .. நட்பாய் பழகிய பலரின் பார்வை கூட இன்று பொறாமை தீயில் எறிவதற்கு காரணமே அவளது காதல் தான் .. இல்லை இல்லை .. அவளது காதலன் தான் .. ! அடடே காதலன்னு சொன்னதும் அவரே நம்ம அலைபாயுதே மேடி ஸ்டைலில் வந்துட்டார் பாருங்க !
மழையில் நனைந்து கொண்டு நின்றவளை பார்த்து பெரிதாய் புன்னகைத்தான் இளமாறன். பைக்கில் தன்னுடன் பின்னால் அமர்ந்த நண்பனிடம் ஏதோ கிசுகிசுத்தான் ..அது ஒன்றும் பெரிய ரகசியமில்லை
" மச்சான் ரதியை பிக் அப் பண்ணிக்க போறேன் ..ப்ளீஸ் இறங்கு டா " என்பதுதான் .. " போடா டேய் இதென்ன புதுசா ? லவ்வர் வந்தா நண்பனை கலட்டி விடுறது தான் உங்க வேலை .. ச்ச்ச இதுக்குதான் லவ் பண்றவனுக்கு நண்பனா இருக்க கூடாது .. போடா போ .. ஒரு நாள் உன்னை அவ விட்டுட்டு போவா அன்னைக்கு வெச்சுக்குறேன் " என்று அந்த நண்பன் காற்றில் தன் குரல் கரையும் வரை கத்தினான் ..
இளமாறனோ " தேங்க்ஸ் மச்சான் " என்று ஏதோ அவார்ட் வாங்கியது போல கை நீட்டி செய்கை காட்டிவிட்டு அவளை நோக்கி பறந்தான் .. மாறனை கண்டவுடன் முகம் எல்லாம் பூரிப்பில் விகாசிக்க மழையை ரசிப்பதை நிறுத்திவிட்டு அவனை ரசிக்க ஆரம்பித்தாள் ரதி .. அவனும் கண்களாலே காதல் கதை பேசிக்கொண்டு அவள் நிற்கும் இடத்தை சுற்றி வட்டமடித்தான் ...
" ரதி"
" ம்ம்ம்ம் "
" பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேணுமான்னு பாட எனக்கும் ஆசைதான் .. ஆனா நீ ரொம்ப மழையில் நனைஞ்சாச்சு .. காய்ச்சல் வந்திடும் .. வா உன்னை வீட்டில் விடுறேன் " என்றான் காதலுடன் .. மறுப்பேதும் சொல்லாமல் தோழியிடம் சொல்லிவிட்டு அவனுடன் சென்றாள் ஜீவரதி... அவர்கள் கடந்து சென்ற மாணவர்களில் பலரின் கண்களில் பொறாமைத்தீ , ஏக்கப் பெருமூச்சுத்த்தான்... அதே நேரம் அவர்கள் ரசிக்கும் ஜோடிகளும் உண்டு ...
" செம்ம ஜோடி " , " சூர்யா ஜோ மாதிரி " . " ஸ்னேஹா பிரசன்னா மாதிரி " , " படிப்பிலும் அழகிலும் ரெண்டு பேருமே ஜோடி " , " பேருல கூட ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ஜோடி பொருத்தம்", " ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும் பார்வையிலேயே அவ்வளவு காதல் இருக்கு " இப்படி பல பேர் அவர்களது செவியில் கேட்கும் அளவிற்கு பாராட்டியுள்ளனர்..
இவர்களை சுற்றி உள்ளவர்கள் இவர்களது காதல் கண்களுக்கு இதமாகவும் இருக்கு, உறுத்தலாகவும் இருக்கு .. ஆனா ரதி- மாறன் இவங்க ரெண்டு பெரும் அவங்க காதலை எப்படி உணருறாங்க ??? அதை தெரிஞ்சிக்கணும்னா சின்ன வயசுல இருந்த டைரி எழுதுற பழக்கத்தை கை விடாத அவங்க ரெண்டு பெயருடைய டைரியை தான் புரட்டிப் பார்க்கணும் .... வாங்க பார்ப்போம்..
12 மார்ச் 2014 ( ஜீவரதியின் டைரி )
நாங்க காதலிக்க ஆரம்பிச்சு இது இரண்டாவது வருஷம் .. சொல்லிப் பார்த்தா எனக்கே சிரிப்பு வருது ..எல்லாம் இந்த இளமாறன் குரங்கு பண்ண வேலை .. நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன் ? ம்ம்ஹ்ம்ம்ம் மாறனை விட நான் அழகில்லை .. ஹா ஹா இப்போ மட்டும் அவன் என் பக்கதுல இருந்தா என்ன சொல்லி இருப்பான்
" அழகு என்பது முகத்தில் இல்லை கண்மணி ...மனசில் தான் இருக்கு .. இந்த சின்ன வயசுலேயே நீ செய்யுற சோஷியல் சர்விசஸ், எல்லாருகிட்டயும் பாசமா பழகுறது , வெளுத்ததெல்லாம் பால் ன்னு நினைக்கிறஉன் குணம் இது எல்லாம் தான் என்னை உன்பக்கம் சாய்ச்சிடுச்சு ..நம்ம ஜெனரேஷன் உன்னை மாதிரி இன்னொரு பெண்ணை நான் பார்ப்பேனா தெரில பாஸ் .... விட்டா இந்த உலகத்துக்கே சொல்லுவேன் என் கண்மணி மாதிரி யாருமே இல்லைன்னு "
இப்படி சொல்லுவான் .. சோ ஸ்வீட் .. காதல் மீது நம்பிக்கை இல்லாத பொண்ணு நான் .. இன்னைக்கு காதலில் கசிந்துருகிட்டேன்னு சொன்னா என் வீட்டு பப்பி கூட சிரிக்கும்.. ஆனா இதுவும் ஒரு புதுவித உணர்வு..என்னை எனக்கே அறிமுகப்படுத்தியவன் இளமாறன். எனக்குள்ள இருக்குற குறையை கூட மாறன் தான் அழகாய் பார்க்க கற்றுகொடுத்து இருக்கான்..
காதல் எனக்கு நிறைய தன்னம்பிக்கை தருது..காதல் தான் வாழ்க்கைன்னு நான் சொல்ல மாட்டேன் ..ஆனா அழகான வாழ்க்கைக்கு காதல் நிச்சயம் ஒரு அடித்தளம் தான் .. நானும் மாறனும் சந்தோஷமான வாழ்க்கை வாழனும் .. எங்களால் முடிஞ்சா அளவுக்கு நம்ம சமுதாயத்துக்கும் உதவனும் ..
நாங்க இணைவோமா ? அப்படி ஒரு கேள்விக்கே இடமில்லை.. நம்பிக்கை இல்லாமல் காதலிச்சிட்டு கண்ணீர் வடிக்கிற பெண் நான் இல்லை .. எவ்வளோ எதிர்ப்பு வந்தாலும் என் வாழ்வு அவனோடுதான் ..அவன் என்னவன் ..அதை இந்த இந்த உலகத்துக்கு சொல்ல ஒரு நாள் வரும் ... எப்படி காதலிச்சு பிரியாமல் இருக்குறதுன்னு நாங்க தான் வருங்காலத்தில் டிப்ஸ் தர போகிறோம் .. ஹா ஹா ஹா ... ஐ மேட்லி லவ் யூ டா இளமாறா