யாரிவனோ? வந்தது எதற்காக? - அன்னா ஸ்வீட்டி
“ஹேய்...சமர்….” தன்னை யாரோ அழைப்பதைக் கேட்டு திரும்பிப் பார்க்கும்பொழுதுதான் முதன் முதலாக சமர்ப்பணா அவனைப் பார்த்தாள். அவள் கல்லூரி இறுதியாண்டு படிக்கிறாள். அவள் வகுப்பு மாணவியர் மட்டுமல்ல பிற டிபார்ட்மெண்டில் சிலரும் கூட அவளை சமர் என்று அழைப்பதுதான். ஆனால் இந்த சமர் ஆண்குரலில் வர சற்றே ஆச்சர்யத்தோடுதான் அவள் திரும்பிப் பார்த்தாள்.
அழைத்த நபர்தான் ஃபிஸிக்ஸ் ஹெச் ஓ டி பாலன் என ஞாபகம். நிச்சயமாக சொல்வதற்கில்லை. பயோஹெமிஸ்ட்ரி படிக்கும் இவளுக்கு இயற்பியல் துறை அறிமுகமற்றது. அவர் ஏன் இவளைக் கூப்பிடுகிறார் என எண்ண தேவையே இல்லாமல் அவர் பார்வை இவளுக்கு சற்று பின்னால் வந்து கொண்டிருந்த அடுத்த நபர் மீது நின்றிருந்தது.
ஆக அன்னிசையாக சமர்ப்பணாவின் கண்கள் அவன் மீது குடிபோயின. அப்படி ஒரு கண்கள் அவனுக்கு. ஒரு வித கூர்மை, அழுத்தம், தெளிவு , சலனமின்மை எல்லாம். ஒளிவீசிக் கொண்டிருந்தன அவை. மற்றவை எதுவும் அவள் கண்களில் படாததற்கு காரணம் முகம்மறைத்த அவன் தாடியோ?
“சமர் அந்த தாடிக்காரன் இவ்ளவு நேரம் உன்பின்னால தான் வந்தான்” கிசுகிசுத்தாள் அருகில் வந்த ப்ரபா.
அந்த பாலனைப் பார்த்து “ஹலோ…பாலன் சார்..” என்றபடி இவளுக்கு எதிர் திசையில் அவன் செல்ல அவனை திரும்பி பார்க்க கூடாது என்ற முடிவோடு தன் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள் இவள். அவன் பெயர் என்னதாக இருக்கும்? யார் அவன்?
சில நாட்கள் சென்றிருக்கும். அன்று வழக்கம் போல் காலை வந்தவுடன் போர்டின் மேல் முனையில் முந்திய நாள் எழுதியிருந்த குறளை அழித்துவிட்டு இந்த நாளுக்காக இவள் படித்து வந்திருந்த குறளை எழுதிக் கொண்டிருந்தாள். உள்ளுணர்வில் தோன்றியிருக்கும் போல அன்னிசையாய் திரும்பிப் பார்க்க, இவள் வகுப்பு வாசலில் நின்றிருந்தான் அவன், தன் மொத்தப் பார்வையும் இவள் மேல் பதித்து.
ஒரு ஸ்டீல் சேரை இழுத்துப் போர்டருகில் போட்டு அதன் மீது ஏறி நின்று எழுதிக் கொண்டிருந்தவள் அவன் பார்வையில் தடுமாறி சட்டென இறங்க முயல, கட்டியிருந்த தாவணியின் முந்தியில் இவளே மிதித்துவிட்டாள் போலும் மொத்தமாக வாரி விழுந்தாள் தரையில்.
“ஹேய்….”அவன் ஓர் எட்டு உள்ளே வைக்க, அதற்குள் சுதாரித்து எழுந்துவிட்ட சமர்ப்பணா அடிபட்ட கைமுட்டியை தேய்த்துக் கொண்டே அவமானமும் பரிதாபமுமாக அவனைப் பார்க்க அவன் விடு விடென்று சென்றுவிட்டான்.
பாவி வந்து விழவச்சு பார்த்துட்டு போறியே….போடா…
ஒல்லியாய் உயரமாய் நீண்ட முடியோடு இருக்கும் சமர்ப்பணாவிற்கு தாவணி படு அழகாய் இருக்கிறதென்பது வகுப்பு தோழிகள் கருத்து. ஆக ஒவ்வொரு வியாழனும் தலைக்கு ஷாம்பிட்டு குளித்து நீளமாய் சடை பின்னி, தாவணி, கை நிறைய வளையல்கள் என வருவது அவள் வழக்கம். அன்றுதான் லேப் கிடையாது இவர்களுக்கு.
இன்றும் அப்படி ஒரு வியாழக்கிழமை. அது இப்படி ஆகும் என இவள் நினைக்கவில்லை. சுண்டைக்காயாய் சுருங்கி இருந்த இவள் முகம் அன்று ப்ரபாவால் தான் சரியாகியது.
“உன்னைய எவ்ளவு நேரம் பார்த்துட்டு நின்னான் தெரியுமா அவன்…அங்க இருந்து பார்துட்டேதான் வந்தேன்…..உன் தாவணில அவன் விழுந்துட்டான் போ…” ப்ரபா இவளை ஓட்டித் தீர்த்துவிட்டாள்.
மறுமுறை சந்திப்பில்தான் அவன் யார் என தெரிந்தது சமர்ப்பணாவிற்கு…. அன்று இவர்கள் டிபார்ட்மென்ட் லெக்சரர் ஒருவருக்கு திருமணம். இவர்கள் துறை ஆசிரியர்கள் அனைவரும் திருமணத்திற்கு போயிருந்தனர் அனுமதியுடன்.
சில மாணவர்களும் விடுமுறை எடுத்து சென்றிருக்க, வகுப்பில் இருந்த மீதியுள்ளோர் பொழுது போகவென எதை எதையோ பேசி, ஒருவகையில் ஒரு அன் அஃபீஷியல் பட்டி மன்றம் போய்க் கொண்டு இருந்தது. இந்தியா அணுகுண்டு தயாரித்தது சரி எனவும் தவறு எனவும் வாதம்.
“அதை யூஃஸ் செய்ய கூடாது……ஆனா அது கண்டிப்பா வேணும்….நம்மட்ட பவர் இருக்கிறப்ப தான் மத்த நாடுங்க நம்மள எந்த விஷயத்துக்கு கம்பெல் செய்ய மாட்டாங்க…இல்லன்னா ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம அடுத்தவங்க சொல்றதுக்கு ஆட வேண்டி இருக்கும்….குறஞ்சபட்சம் எதாவது ஒரு பவர்ஃபுல் நேஷனுக்கு பின்னால ஒளிய வேண்டி இருக்கும்…..அப்புறம் அப்டியே போனா இந்தியா இந்தியாவா இருக்காது…அந்த நாடோட பினாமியாதான் இருக்கும்….தௌசண்ட்ஸ் ஆஃப் ஸ்னேக் வெரைட்டி இருக்குது உலகத்துல….ஆனா அதுல ரொம்ப சிலதுக்கு மட்டும் தான் விஷம் உண்டு…ஃஸ்டில் விஷம் உள்ளது இல்லாததுன்னு எல்லா பாம்பும் சீறும்…..அதப் பார்த்து அத்தனை பேரும் பயப்படுவோம்…அப்டிதான் நாமளும் கொத்தனும்னு அவசியம் இல்லை…பட் கண்டிப்பா சீறனும்…இல்லனா சட்னிதான்…..” இவள் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருக்க பாராட்டுதலாய் கை தட்டும் சத்தம். சட்டென இவள் பேச்சை நிறுத்த, கைதட்டியபடி வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான் அவன்.
படபடக்க ஆரம்பித்தது அவள் இதயம். “என்ன டைமிங்…. ஹீரோ என்றி செம…….” ப்ரபா கிசுகிசுக்க “ஷ்..சும்மா இரு நீ…” தலை குனிந்தபடி சொன்னவள் தன் முகத்தில் சிலீரென பாயும் ரத்தத்தை உணராமலில்லை.
மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“ஹாய் ஆல் ஐ’ம் சமர் ஜெயன்….கம்ப்யூட்டர் சைன்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டாஃப்….உங்க கூட டைம் ஃஸ்பெண்ட் செய்ய சொல்லிருக்காங்க….பைதவே நீங்க ஏற்கனவே யூஸ்ஃபுல்லாதான் டைம் ஸ்பெண்ட் செய்துட்டு இருக்கீங்க…குட்…அதையே கன்டின்யூ செய்யலாம்…லெட் அஸ் ஃஸ்பீக் அபவ்ட் சம்திங்…”
அவன் லெக்ச்சரர் என அப்போதுதான் தெரியும்.
அன்று அவன் பேசிய விஷயங்கள், அது காட்டிய அவன் அறிவின் ஆழ அகலம், பார்வை கோணம், யாரையும் புண்படுத்தாமல் தன் கருத்தையும் காயம் செய்யாது பேசும் பாங்கு, இடையோடிய நகைச்சுவை எல்லாம் அவன் மேல் மரியாதையைக் கொண்டு வந்தன எனில், ப்ரபாவின் வார்த்தைகள் அடிக்கடி பெண் முகத்தில் சிவப்பிட்டன.
அதன் பின் ஒருநாள் அவன் வகுப்பில் “இங்க கம்ப்யூட்டர்ஸ் மட்டும் தான் படிக்கனும்னு இல்லை…. எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ட்ரை செய்ங்க…..ஏன் டெய்லி ஒரு குறள் போர்டுல எழுதி வைங்க யாராவது….” தன் மாணவர்களை அவன் சொல்லிக் கொண்டிருப்பதை எதேச்சையாய் அந்த பக்கம் சென்ற இவள் கேட்க நேர்ந்தது.
“புதுசா சேர்ந்திருக்ற சமர் சார் ஒரு என்சைக்ளோ பீடியா….. உன்னை மாதிரியே…., ஜீனியஸ் அவர்…எங்க க்ளாஸ்ல அவருக்கு நிறைய ஃபேன்ஸ்…” அவன் வகுப்பு மாணவி தேவி இவளிடம் சொல்ல பெருமிதம் இவளுக்குள். பின்பு அந்த உன்னைப் போல ப்ரபாவிடம் எடுத்த அர்த்த ஆழங்கள் ரத்தநாளம் தொட்டன.
அன்று கல்லூரி ஆடிட்டோரியத்தில் கல்ச்சுரல்ஸ். இவளுக்கு பயங்கர தலைவலி. தாங்கமுடியாமல் எழுந்து தன் வகுப்பிற்கு வந்துவிட்டாள். இவள் மட்டும்தான் வகுப்பில். டெஸ்கில் முகம் கவிழ்த்து படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் தூக்கத்திற்குள் நுழைந்துவிட்டாள் போலும்.
சற்று நேரம் பின்பு ஏதோ ஒரு அரவம் உணர்ந்து தலை தூக்கிப் பார்த்தால் அவன் நின்று கொண்டிருந்தான். சமர். அவசர அவசரமாக எழுந்து நின்றாள். “கு…குட் ஆஃப்டர் நூண் சார்…”
“என்ன என்ன ஆச்சுமா…? எனி இஷ்யூ….?” கரிசனை இருந்தது அவன் குரலில். தூக்கத்தில் எழுந்தால் இவள் கண்கள் இப்படித்தான் சிவந்திருக்கும்.
“ந்…நோ சார்….ஜஸ்ட் ஹெட் ஏக்… அங்க நாய்ஸ்ல தாங்க முடியலை….அதான்…”
“”ஓ…” அவன் முகத்தில் சற்று இறுக்கம் வந்துவிட்டது. “உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் வரலையா? யார் கூடயாவது ஹாஃஸ்டல் போயிருக்கலாமே….” கோபம் வெளிப்பட்டது அவன் குரலில்.
“இங்க இப்டி தனியா இருக்கிறது சரியா….? மொத்த ஃப்ளோர்லயும் உங்கள தவிர யாரும் கிடையாது….” இப்பொழுது அவன் குரலில் கண்டனம் கொடிகட்டிப் பறந்தது. அறிவிருக்கா உனக்கு என்ற தொனி அப்பட்டம்.
உள்ளுக்குள் சிலீர் என்றது மங்கை மனம். அவன் அவள் மீது உரிமை எடுக்கிறானோ?
“கிளம்பி வாங்க….” அவன் எதற்கு அங்கு வந்தானோ ஆனால் இப்பொழுது இவள் பின் தொடர கல்லூரியின் மெடிக்கல் ரூம் சென்று அங்கிருந்து ஒரு க்ரோசின் எடுத்துக் கொடுத்தவன் “ரொம்ப முடியலைனா மட்டும் சாப்டுங்க” என்று அரைகட்டளையிட்ட பின் அங்கிருந்த பெண் அட்டென்டரை இவளை ஹாஸ்டலில் கொண்டுவிடச் சொல்லிப் பணித்தான்.
அதன் பின் விஷயம் அறிந்த ப்ரபா இது அக்மார்க் காதல்தான் என்று ஆணையிட்டுச் சொன்னாள்.