ஏன் - விசயநரசிம்மன்
’மரணம் – முடிவல்ல தொடக்கம்…!?’
இதை நான் ஏன் எழுதினேன்? ஏதோ அர்த்தமற்ற வார்த்தைகள். ஆனால் என் வேதனை என்னை இவ்வாறு எழுதவைக்கிறது. ஏனோ தெரியவில்லை, அனைவரும் என்னை புறக்கணிப்பதாகவே தோன்றுகிறது. நான் தனிமையை விரும்பியவன்தான், ஆனால் அது சில நாட்களுக்கு முன்புவரை, இப்பொழுது தனிமை என்னை கொல்கிறது.
பலரும் என்னை தொந்திரவு செய்யும் பொழுது நான் தனிமையை வேண்டினேன், ஆனால் இப்பொழுது ஒருவரும் என்னிடம் பேசுவது கூட இல்லை, ஏன் நானாக வலியச் சென்று பேசினாலும் யாரும் கேட்பதாக இல்லை! அனைவரும் செவிடாகிவிட்டனரா? இல்லை நான்தான் என் குரலை இழந்துவிட்டேனா?
இதோ பக்கத்து வீட்டு நாயுடு சார்… ‘சௌக்கியமா சார்?’ காதுலயே வாங்காம போறாரு! எத்தனையோ நாள் போயா-னு தள்ளிவிட்டாலும் வலிய வந்து பேசுற மனுஷன், அவர்கூட என்னைக் கண்டுக்காம ஒதுங்கிப் போறாரு… அப்படி என்னதான் தப்பு பண்ணிட்டேன் நான்? ‘சார்… சாஆஆர்ர்ர்ர்…’
ஒவ்வொரு நொடியும் நரகமாய் நகர்ந்தது. கால் போன போக்கில் நடந்தேன்.
‘Dr. உலகநாதன், Psychiatrist’ பெயர் பலகையைப் பார்த்தவுடன் ஏதோ தோன்றியவனாக உள்ளே சென்றேன். ஒருவர் அமர்ந்து இருந்தார், எதையோ சிந்தித்தவாறே.
“டாக்டர் இருக்காரா?”
“யெஸ் யெஸ், நாந்தான்… வாங்க” என்றார் “என்ன பிரச்சனை?” அமரச்சொல்லிச் செய்கை செய்தவாரே கேட்டார்.
“எப்படிச் சொல்றதுன்னு தெரியல டாக்டர், ஏனோ எல்லாரும் என்னைப் புறக்கணிக்குற மாதிரி தோனுது, யாரும் என்கிட்ட பேச மாட்டேங்குறாங்க… இப்போதைக்கு என்கிட்ட பேசின ஒரே ஆள் நீங்கதான்!”
“ஆமா எத்தன நாளா இந்தப் பிரச்சனை இருக்கு?” என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கும் போழ்தே ஒருவர் உள்ளே நுழைந்து அவர்பாட்டுக்கு ஏதோ செய்யத் தொடங்கினார்,
“யார் டாக்டர் இவரு? அவர் பாட்டுக்கு உள்ள வந்து—”
“ஓ… இவருதான் டாக்டர் உலகநாதன்!”
“அப்ப நீங்க?”
“ஐ ஆம் டாக்டர் ரங்கநாதன், போன வாரம் ஒரு பிளேன் கிராஷ் ஆச்சே? அதுலதான் நானும்…”
{kunena_discuss:785}