அவனுக்கு முதல் காதல்… அவளுக்கும் தான் - பார்கவி
This is entry #69 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
“ப்ளீஸ் சுகா… ப்ளீஸ் டீ. நான் எவ்ளோ தூரம் வந்திருக்கேன்னு உனக்கு தெரியாதா? கொஞ்சம் மனசு வெச்சனா எல்லாம் நல்லா முடியும் டீ. ப்ளீஸ் சுகா”, தன் தோழி சுகௌரியின் கைகளை பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தான் முகுந்தன்.
“உனக்கு இவ்ளோ தூரம் ஹெல்ப் பன்னின குரு என்ன பன்றார் முகுந்த்? அவர் கிட்டவே ஹெல்ப் கேட்க வேண்டியதுதான”, முகத்தை திருப்பிக் கொண்டு முகுந்தன் அறியாதவாறு புன்னகைத்தாள் சுகௌரி.
“இப்போ அதெல்லாம் எதுக்கு? நான் புரிஞ்சுகிட்ட அளவு கூட நீ புரிஞ்சுக்கமாட்டியா சுகா? யாருனே தெரியாத ஒருத்தன் திடீர்னு உன்கிட்ட வந்து பேசினா நீயும் சிரிச்சு பேசிடுவ பாரு. அவ வர்ற டைம் ஆகிடுச்சு டீ. கடுப்பு பன்னாத சுகா. சொன்னா கேளு டீ.”
அது ஒரு வியாழக்கிழமை என்று பாராமலும் அடுத்த நாள் வேலையும் சேர்ந்து திங்கட்கிழமை பெரும் பாரமாக மாறக்கூடும் என்று எல்லாம் அவன் யோசிக்காமல் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு கிளம்பி வந்திருந்தான். அவன் தேடி வந்த தேவதையின் சம்மதம் மட்டும் கிடைத்தால் பல நாள் வேலையை கூட பாரமாக நினைக்க மாட்டான்.
“சரி சுகா. நீ அந்த பெஞ்ச்ல உட்காந்து ஒரு 10 நிமிஷம் நல்லா யோசி. எனக்கு இப்போ என்ன செய்யறதுனே தோனல. ஒரு பொக்கேயாச்சும் வாங்கிட்டு வரேன்.”
“ஹஹ்ஹா.. நீ இவ்ளோ ப்ரிப்பேர்டா வந்திருக்கறத பார்த்தா ஒரு ரிங்க் வாங்கிட்டு வந்திருப்பேன்னு நெனச்சேன்டா.”
“போடி…”
பூங்கொத்து ஒன்றை வாங்க அவசரமாகச் சென்றான் முகுந்தன்.
அழகான ஆரஞ்சு நிற ரோஜாப்பூக்களை தேர்ந்தெடுத்து பூங்கொத்து ஒன்றை வாங்கி சுகௌரியின் அருகில் வரவும் வாசுகி அவள் வேலை செய்யும் தனியார் ஐ.டி கம்பெனியின் பேருந்திலிருந்து இறங்கினாள்.
மாலை நேரம் என்ற போதும் கலைப்பு ஏதும் இன்றி எப்போதும் முகத்தோடு ஒட்டியிருக்கும் புன்னகையோடு நடந்து வந்தாள். அவர்களை நோக்கி வாசுகி வரவும் முகுந்தனுக்கு பதட்டம் எகிறியது. சுகௌரியிடம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில்… (இல்லை… இல்லை… கெஞ்சல் என்று சொன்னால் பொறுந்தும்…) இறங்கியிருந்தான்.
பார்ப்பவர்கள் இரண்டு காதலர்களுக்கு இடையே ஊடல் என்றே நினைத்துக் கொள்வார்கள். வாசுகியும் அப்படித்தான் நினைத்தாள் போலும். மெலிதாக சிரித்துக்கொண்டே அவர்களை கடந்து சென்றாள்.
முகுந்தனுக்கு ஒரு நொடியில் அவன் உயிர் அவனை விட்டுச் சென்றது போல இருந்தது. மிகவும் பிடித்த பொம்மையை உடைத்து விட்டு அதை நம்பவும் முடியாமல் அழவும் முடியாமல் விழிக்கும் குழந்தையைப் போல ஏங்கிப் போனான். சட்டென சுகௌரி ஒரு யோசனையை கூறிவிட்டு வாசுகியை தாண்டி வேகமாக நடந்தாள்.
வீடு செல்லும் வரை அங்குள்ள பூங்காவை ரசித்துக்கொண்டே நடப்பது வாசுகிக்கு வழக்கம். தினம் ஒரு புதுக்கதை சொல்லும் அப்பூங்கா. வாக்கிங்க் செல்லும் மக்கள், விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், அவர்களை மறந்து அரட்டையடிக்கும் அம்மாக்கள், நாசுக்காக காதல் கதை பேசும் ஜோடிகள் என வழி நெடுக வேடிக்கை பார்த்துக் கொண்டே நடப்பாள். அங்கு ஏதேனும் புதிதாக ஒரு பூ பூத்தால் கூட அதை கவனித்து விடுவாள்.
இன்று அவள் வழக்கத்தை தாண்டி முகுந்தன் சுகௌரியின் செய்கைகளில் அவள் நினைப்பு முழுதும் இருந்தது. சுகௌரி அவளைத் தாண்டிச் செல்லவும் ஏனோ ஒரு இனம் புரியாத சோகம் அவளுள் பரவியது.
“சுகி…” என்று உரத்த குரலில் அழைத்தான் முகுந்தன்.
சட்டென தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தாள் வாசுகி. தன் அம்மா மட்டுமே அவளை அவ்வாறு அழைப்பாள். அவள் திரும்பிய மறுநொடி அவள் காலடியில் இருந்தான் முகுந்தன். தன்னிடம் இருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.
மரியாதைக்காக அதை வாங்கிக்கொண்டாள். அவன் எதாவது பேசுவான் என்று எதிர்பார்த்தாள். அதே சமயம் அவன் முகம் அவளுக்கு பரிச்சயமான முகம் போல தோன்ற யோசித்துக் கொண்டே நின்றாள்.
‘ஐயோ சொதப்பறானே!’, நினைத்தவாறே அவர்களை நோக்கி வந்தாள் சுகௌரி.
“ஹாய் வாசுகி, என் பேரு முகுந்தன்”, வாசுகியை நோக்கி கையை நீட்டினான் முகுந்தன்.
“ஹாய்… என்னை… எ.. எப்படி உங்களுக்…கு தெரியும்?” தயக்கத்தோடும் குழப்பத்தோடும் கேட்டாள்.
“நீங்க அவனை அடிக்காத வரைக்கும் ரொம்ப சந்தோஷம். ஐ அம் சுகௌரி. என்ன ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சுகானு கூப்புடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்புடலாம்” கண்களை சிமிட்டிக் கொண்டே பேசினாள்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பம் தீராமல் நின்றிருந்தாள் வாசுகி.
“ஹேய் முகுந்த்.. சும்மாவே நிக்காத. டீசன்டா கடத்தல் பன்றாங்கனு நெனச்சுக்க போறாங்க. நீங்க வாங்க வாசுகி, உட்கார்ந்து பேசலாம்.”
“ஐ அம் சாரி. நீங்க ஏதோ தப்பா நெனச்சுட்டீங்க போல. என் பேரு வாசுகி தான். ஆனா நீங்க யாருன்னு தெரியாது. அன்ட்…. எனக்கு இப்போ டைம் இல்ல. ஐ ஹேவ் டு கோ. ஐ அம் சாரி.” பேசியவாறே பின்னோக்கி இரண்டு எட்டு வைத்தாள்.