தெய்வம் தந்த தேவதை – ஜெனிட்டா
This is entry #77 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே…அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை..ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள். பெற்றவர்கள் பேசி திருமணத்திற்க்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள். இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே.இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்…ச்சேச்சே..அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது…அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள்…அது அவளே தான்….!
அபிகேல்!
ஒரு நிமிடம் மனம் திக்கென்றிருந்தது..! அவள் முன்னால் இருக்கும் நபர் யாராக இருக்கும்?.
“அவ எங்கே போனாலும் கார்லதான் போவா. உங்க ரெண்டு பேருக்கும் எது பொருந்துதோ இல்லையோ..வேகமா வண்டி ஓட்டுறதுல மட்டும் ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தம் இருக்கு.நேற்றைக்கு சர்ச்சுக்கு போய்ட்டு உனக்காக வெய்ட் பண்ணிட்டிருந்தப்ப அவளும் சர்ச்சுக்கு வந்திருந்தா.நீ கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னப்ப அவ தான் “நான் கொண்டு விடுறேன்,நீங்க போன் பண்ணி அவங்கள வர வேணடாம்னு சொல்லுங்கனு” சொன்னாள். அப்பப்பா…என்ன வேகமா வண்டி ஓட்டுறா..நான் கொஞ்சம் வேகத்த குறைம்மானு சொன்னதும் குறைச்சுட்டா.” இன்று காலை உணவின் போது அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.
அம்மாவுக்கு எப்போதும் அவளைப் பற்றிய பேச்சு தான்.ஆரம்பத்தில், இந்த சம்பந்தம் அம்மாவுக்கு தெரிந்த பொண்ணு என்று அம்மா முடிவு பண்ணினதுனால அவன் மனதில் அவளை அவனுக்கு பிடிக்க வைக்கும் வேண்டும் என்பதற்காக அவளைப் பற்றி எப்போதும் பேசுகிறார்கள் என்று நினைத்தான்.ஆனால் நாளடைவில் அம்மா இன்று அவளைப் பற்றி என்ன சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு வந்துவிட்டது.!
நான்கு வருடங்களாக திருமணம் வேண்டாம் என்று சொல்லி கண்டிப்புடன் இருந்தவனை எப்படி எல்லாமோ அவன் தாய் பேசி சம்மதித்து இதோ திருமணம் நடைபெற இன்னும் ஏழு நாட்கள் தான் இருக்கிறது.
அவன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி ஒரு மாதம் தான் ஆகிறது.சம்மதம் சொன்ன மறு வாரமே இரு வீட்டு பெரியவர்களும் ,சகோதரர்கள் மட்டுக் கூடி ஆடம்பரமில்லாமல் நிச்ச்யதார்த்தமும் நடத்தியாகிவிட்டது. ஆடம்பரமில்லா நிச்ச்யதார்த்தத்திற்குக் காரணம் ..”எனக்கு எந்த சம்பிரதாயங்களும் பண்ண வேண்டாம். பொண்ண கூட நேர்ல பார்க்கணும்னு அவசியம் இல்ல, கல்யாணத் தேதி குறிச்சிடுங்க. தாலி கட்டுற நாள்ல சர்ச்சுல வந்து உங்க விருப்பப்படி நான் தாலி கட்டுடறேன்.”
அதற்கு அவன் அம்மா “டேய் ஜொஷ்வா,என்ன பேசுற..நாலு வருஷம் கழிச்சு எப்படியோ இந்த பொண்ணு போட்டோ பார்த்த பிறகு கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்ட. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குன்னு தெரியுமா…அதுக்காக ஒரு சின்ன நிச்சயதார்த்தம் கூட வைக்கலைனா பொண்ணு வீட்டுகாரங்க என்ன நினைப்பங்கனு கொஞ்சம் யோசிச்சு பாரடா.”
“சரி.ஆனா நிச்சயதார்தத்துக்கு ரெண்டு வீட்டுக்காரங்க மட்டும் தான் வரணும்.வேற யாரும் வரக்கூடாது. ஆடம்பரம் ஒண்ணும் வேண்டாம். முக்கியமா பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்மான்னு 100 தடவையாவது கேட்டு கன்பார்ம் பண்ணிக்கோங்க”.
“அதெல்லாம் கன்பார்ம் பண்ணனும்னு தேவையில்லபா. அவளுக்கு சம்மதம் தான்.நீ இன்னும் வேற கண்டீசன் ஏதும் போடாம இருந்தாலே போதும்.
மறு வாரமே இரு வீட்டு பெரியவர்களும், உடன் பிறப்புகளும் சூழ பெண் வீட்டில் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. நிச்சயத்தின் போது அவள் விரலில் மோதிரம் அணிவித்த போது கூட இவன் அவள் முகம் பார்க்கவில்லை. நிச்சயதார்த்தம் முடிந்து காரில் ஏறப்போகயில் சம்பிரதாயத்திற்காக எல்லோருடைய முகம் பார்த்து “ போயிட்டு வர்றேன் “ என்று சொல்லி சிறிதாக புன்னகை செய்யும் போது எல்லோருக்கும் பின்னால் அவள் நின்று அவனை பார்ப்பதைப் பார்த்தான். அந்த முகத்தில் தெரிந்தது என்ன? இப்போது நினத்தாலும் அந்த அமுத முகம் கண்ணுக்குள் நிலவாய் நின்று பிரகாசிக்கின்றது..! அவள் அலை பேசி எண் தெரியாது. இன்னும் ஏழு நாட்களில் திருமணம் .ஆனால் அவளிடம் இதுவரையில் பேசினது கூட இல்லை. திருமணமே வேண்டாம் என்றிருந்தவனுக்கு இப்போதெல்லாம் அப்படி தோன்றவில்லை. “ எது என்னை மாற்றிவிட்டது. “ கடைசியா இந்த போட்டோவை பார்த்திட்டு அப்புறம் பதில் சொல்லடா. ப்ளீஸ் எனக்காக பாரடா..” என்று அம்மா சொன்னபோது அவன் அம்மாவிற்காக அதை பார்த்தவனின் மனதிற்குள் அவள் நுழைந்துவிட்டாளா..? இதுவரை அவளிடம் பேசினதே இல்லை. பின் எப்படி அவளை எனக்கு பிடித்தது? அம்மா தினமும் அவளை பற்றி எதாவது பேசியதால் என் மனம் மாறிவிட்டதா? என்றெல்லாம் இப்போது அடிக்கடி யோசித்திருக்கிறான்.