மீண்டும் வருமா அந்த நாள் - ப்ரீத்தி
This is entry #89 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
உடல் சோர்ந்திருக்க மெல்லமாய் கண்ணை திறந்து பார்த்தார் பார்வதி. அருகிலேயே அவரது கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த இளமதியின் முகம் தாயின் முகத்தையே ஆவலாய் பார்த்தவண்ணம் இருந்தது. அவர் கண்ணை திறந்ததும். “என்ன அம்மா இது? இதுக்கு போய் பயந்துப் எங்களையும் பயமுடுத்துரிங்க!? ஒன்னும் இல்ல சீக்கரம் சரியாகிடும்.”
மகள் மனைவியிடம் பேசுவதையே அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தார் சிவம். அவரிடம் திரும்பியவள் “உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா. உங்க மனைவிக்கு ஒன்னும் இல்லை சரியா...” என்றதும் மகளுக்காக மெல்லிய முறுவல் தந்தார் தந்தை. மருத்துவமனையில் இருந்து வந்தாயிற்று. நேற்று முழுவதும் அங்கு இருந்தது அலுப்பாக இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறை வேலைகள் பார்க்க துவங்கினர், என்னதான் வேலைகள் செய்ய செய்ய நேரம் கடந்தாலும் தந்தை தாயின் முகம் இன்னமும் அதே நிலையில் இருப்பதை பார்த்துவிட்டு “சரி போதும் இன்னும் எவ்வளவு நேரம் இப்படி சோக கீதம் வாசிக்க போறீங்க...” என்று கூறிக்கொண்டு கையில் இருந்த காகிதத்தில் ஏதோ எழுத துவங்கினாள். எழுதி முடித்ததும் தந்தையிடம் நீட்டினாள். பார்த்தவர் புரியாமல் புருவம் உயர்த்தவும் “இன்னைக்கு எதுவும் சமைக்க வேண்டாம், எல்லாரும் கிளம்புங்க நம்ம இப்போவே வெளிய கிளம்புறோம் ம்ம்ம் ம்ம்ம் சீக்கரம்” என்று உந்தினாள்.
அவளது பேச்சுக்கு மறுபேச்சு இன்றி இருவரும் கிளம்பினர். முதலில் மூவரும் போனது ஒரு பூந்தோட்டத்திற்கு... என்ன வெயில் கொளுத்தியும் அங்கு பெரிதாக தெரியவில்லை, எல்லாம் மரங்களின் மாயமாக இருந்தது. என்ன மந்திரம் தான் கொண்டுள்ளது இந்த மரங்கள் என்பது போல இடமே பசுமையாக இருந்தது. அங்காங்கே ஜோடி ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். அதை பார்த்துக்கொண்டே வந்த சிவம் பார்வதி எதுவும் சொல்லாததே பெரும் ஆச்சர்யம் தான் இளமதிக்கு. இருவரையும் ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு சாப்பிட ஐஸ் கிரீம் வாங்கி வந்தாள்.
“அம்மா இப்படி பிடிங்க... அப்பாகூட சேர்ந்து நில்லுங்கம்மா...”
“அப்பா நீங்க கொஞ்சம் க்ளோஸ்ஸா வாங்கப்பா...”
“ம்ம்ம்ம் கரெக்ட் அப்படி தான்” என்று நிற்க சொல்லி புகைப்படம் எடுத்தாள். “ம்ம்ம் இப்போ இந்த மாதிரி அப்பறம் கையை பிடுச்சுக்கோங்கம்மா...”
இப்படி மாற்றி மாற்றி எடுத்தே நேரத்தை சில மணிகள் ஓட்டினாள். புகைப்படங்கள் எடுக்கும் பொழுது அன்னையின் முகத்தில் எட்டி பார்க்கும் வெட்கம் என்ன செய்து மறைத்தாலும் மாறுவதாக தெரியவில்லை. அதை சிலகணங்கள் ரசித்தவள் நினைவில் பின்னோக்கி சென்றாள்.
“உங்களுக்கு வேற வேலையே இல்லை எப்போ பார்த்தாலும் நீங்களே தப்பு செய்துட்டு அப்பறம் என்னாலதான் ஆச்சுன்னு சொல்றது...”
“ஆமாம் உண்மையை சொன்னால் உனக்கு கசக்குதா... நீ தாண்டி காரணம்.. ஒரு ஒழுங்கு இல்லை, எதுவுமே systematic ஆ செய்ய தெரிவது இல்ல..”
“நீங்க மட்டும் ஒழுங்கா...”
“எதித்து பேசாத, அப்படியே உன் குடும்ப புத்தி...”
இப்படியே தாய்க்கும் தந்தைக்கும் அடிக்கடி ஏற்படும் விவாதம் இது. இதை பார்க்கும் போதெல்லாம், எல்லா வீடும் எப்படி அமைதியாக இருக்கு இவங்களுக்கு மட்டும் எப்படி தான் சண்டை போட காரணம் கிடைக்குதோ என்று மனம் நொந்து போகும் மதிக்கு, அப்பா air force இல் பணி புரிந்தவர், பணிக்காலம் முடிந்தது. அவரால் வீட்டில் முழுநேரமும் இருக்க முடிவதில்லை. இருந்தும் பழக்கம் இல்லை. இப்படி வீட்டில் இருந்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேனும் செய்து தாயுடன் சண்டைப் போடுவது வழக்கமானது. கனவில் இருந்து வெளிவந்தவள் போல தற்போதைய சூழ்நிலைக்கு வந்தாள். கண்முன் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். மனம் திருப்தியாக இருந்தது.
பின்பு அங்கிருந்து கிளம்பி அவர்கள் அடுத்து சென்ற இடம் ஒரு ஜவுளிக்கடை. புரியாமல் விழித்த தாயை பார்த்து “என்னம்மா பார்க்குற, அப்பா தான் உனக்கு வாங்கி தரணும்னு கூட்டிட்டு வந்திருக்காங்க” என்று கூறவும் முகத்தில் அவ்வளவு பெருமிதம் பார்வதிக்கு, அவர் மெல்லிய புன்முறுவல் பரிசாக தர, மூவரும் உள்ளே சென்றனர்.
“அம்மா இந்த கலர், இது, இது...” இப்படி மாறி மாறி தாயின் மீது புடவையை வைத்து பார்த்தாள். கடல் நீல நிறத்தில் உடல் முழுவதும் இருக்க, அடர் நீலத்தில் பார்டர் வைத்து அழகிய வேலைப்பாடோடு ஒரு புடைவை தேர்ந்து எடுத்தார் பார்வதி. கடைபெண் தன் மீது புடவையை வைத்துக்காட்ட தானாக கண்கள் கணவனை தேடியது. அவரும் மெல்லமாக தலை அசைக்க, “அப்பப்பா.... என்ன ஒரு காதல்” என்று கிண்டல் செய்தாள் இளமதி.
“சும்மா இருடி...”
“ஆமாமா...” என்று கிண்டல் செய்தவண்ணம் அங்கு ஒருமணி நேரம் கடத்தினர். இவர்கள் கண்ணில் பேசும் பாஷையெல்லாம் பார்க்கும் பொழுது மதிக்கு பழையநினைவுகள் வந்தது.
“என்னங்க இந்த புடவை அழகா இருக்குல... நான் எடுத்துக்கவா...”
“உனக்கெதுக்கு இத்தனை புடவை... போன வாரம் தானே வாங்கின... காசை இப்படி புடவை நகைனே செலவு பண்ணு... கடைசியில் கையில் ஒன்னும் இருக்காது” என்று கணவன் கூறவும் மறுப்பேதும் கூறாமல் எடுத்த புடவையை மீண்டும் வைத்துவிடும் தாயின் நியாபகம் வந்தது மதிக்கு.