இருவர் - பார்த்தி கண்ணன்
This is entry #92 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவர்கள் இருவரும் கல்லூரியின் முதல் தளத்தில் நின்றிருந்தனர். கல்லூரி வளாகத்தை முழுமையாகக் காணமுடிந்தது.மாலை ஆறு மணி. அந்த அமைதியான மாலைப்பொழுது ரம்மியமாய் இருந்தது. தூரத்தில் தெரியும் கல்லூரியின் நுழைவாயிலிருந்து கல்லூரியின் பிரதான கட்டிடத்திற்கு வரும் பாதையின் இருபுறமும் மரங்கள் வளர்ந்து பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. பத்து வருடங்களுக்கு முன்னால் இளங்கன்றுகளாக நட்டு வைத்தவை இன்று கல்லூரி வளாகத்தைத் தம் அழகினால் ஒரு வண்ணப் பூஞ்சோலையாக மாற்றியிருந்தன. அவை வீசிய குளிர்க்காற்றும்,சிறு குருவிகள் எழுப்பும் ஒலியும் மனதிற்கு இதமளித்தன. ஆனாலும் இவற்றை மீறி அவர்கள் இருவருக்குமிடையே ஒரு இறுக்கம் நிலவியது.
சில நொடி மௌனத்திற்குப் பின் அவன் பேசினான்.
“எப்படி இருக்கீங்க?” அவன் பார்வை தூரத்தில் எங்கேயோ நிலைபெற்றிருந்தது
சில நொடிகள் மௌனம். பின் அவனைக் நோக்கித் திரும்பினாள்.
“நான்..நான் நல்ல இருக்கேன்.. எதுக்கு வாங்க போங்கனு பேசுற அருண்? “
அவன் இவள் முகத்தைப் பார்க்க முயன்றான். அதற்கான மன வலிமையின்றிப் போய் தலைகுனிந்து கொண்டான்.
“இல்ல..ரொம்ப வருஷம் ஆனதால..ஏதோ ஒரு .. சொல்லத் தெரியல..தயக்கம்"
அவள் முகத்தில் ஒரு போலிப் புன்னகை.
“பரவாயில்ல அருண்.. வருஷம் தான் மாறிடுச்சு..நான் ஒன்னும் பெருசா மாறல"
“ம்ம்ம்..உங்க ஹஸ்பன்ட் ? ...ஸாரி.உன்னோட ஹஸ்பன்ட்? குழந்தைங்க?”
“நல்லா இருக்காங்க.. இருக்கார்.. குழந்தைங்க இல்ல இன்னும்"
“ஓ..ஐ எம் வெரி ஸாரி.. எனக்குத் தெரியாது,,” முதல் முறையாய் தயக்கத்தோடு அவள் முகத்தைப் பார்த்தான்.
“ஸாரி எல்லாம் வேணாம் அருண். நீ என்னப் பார்க்குற தூரத்துலயோ, என்னப் பத்தி கேள்விப் படுற அளவுக்கு நம்ம பிரெண்ட்ஸ் கூட நெருக்கமாவோ நான் இல்ல.. ரொம்பவும் விலகிட்டேன்.. ஏதோ அதிர்ஷ்டம் .. ஈமெயில் பாத்தேன்.. அவருக்கும் தமிழ்நாட்டுல நெக்ஸ்ட் ஒன் வீக் வேலை இருந்ததால வர முடிஞ்சுது"
“ஹ்ம்ம்..எதிர்பார்க்கல உன்ன"
அவள் மௌனித்திருந்தாள்.
“எதுக்கு வந்த நீ அனிதா? ....நீ வரப்போறனு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்"
அவள் லேசாய்ப் புன்னகைத்தாள்.
“எனக்கு உன்னப் பார்க்கணும் போல இருந்துது அருண்.. உனக்கு என்னப் பார்க்கப் பிடிக்காதுனு தெரியும்.. இருந்தாலும் .. உன்னப் பாக்கணும்..ஐ வான்டட் டூ சீ யூ" குரல் தழுதழுக்க , அந்தப் புறம் திரும்பி கைக்குட்டையால் கண்களை ஒத்திக்கொண்டாள்.
பேச நாவெழாமல் தவித்துப்போய் நின்றான்.
பத்து வருடங்களுக்கு முன்னால் இதே இடத்தில் இருவரும் நின்றிருந்தார்கள்..
“எவ்ளோ தடவை சொன்னேன் ,,எக்ஸாம்க்கு முன்னாடி நாள் படத்துக்குப் போகாத போகாதனு..பாரு..ஒரு பேப்பர் அவுட்.. ஏன்டா இப்படிப் பண்ற?”
“ஐயோ..எதுக்கு இப்போ ஒரு பேப்பருக்கு இவ்ளோ சீன் போடுற நீ? என் கிளாஸ்ல அவனவன் பத்து பதினஞ்சு அரியர் வச்சுட்டு, அதுக்கு ட்ரீட் வேற வச்சிட்டு இருக்கான்.. இதெல்லாம் நெக்ஸ்ட் அட்டெம்ப்ட்ல தூக்கிருவேன் பாரு..இப்போ படத்தக்கு போலாமா? மத்தியானம் கிளாஸ் இல்ல தானே?”
“உதைக்கப் போறேன் உன்ன.. நானே உன் மேல எக்கச்சக்க டென்சன்ல இருக்கேன்..படிப்பு வராத மக்கா இருந்தாப் பரவாயில்ல,, நீ ப்ளஸ் டூல என்ன விட அதிக ஸ்கோர்..ஆனா இப்போ வெறும் சிக்ஸ்டி த்ரீ பர்சென்ட் வச்சிருக்க..இப்போ ஒரு அரியர் வேற..”
“ஐயோ தெய்வமே,,ஆள விடு.. உனக்காகவே அடுத்த தடவை ஆல் கிளியர் பண்றேன்..ஓகே?”
“ப்ராமிஸ்?”
“சத்தியமா"
“வெரி குட்..அப்போ சரி..இங்கயே இரு..ரெண்டே நிமிஷம்.. படத்துக்கு போலாம்" இவன் கன்னத்தை செல்லமாய் அறைந்துவிட்டு துள்ளிக்குதித்து ஓடினாள்.
இன்று..
“உன்ன இன்னிக்கு இவ்ளோ நல்ல நிலைமைல பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் நினைச்சத விட பெரிய ஆளா வந்துட்ட அருண்.. ”
“தேங்க்ஸ்"
“உன்னோட படம் எல்லாம் நானும் அவரும் மிஸ் பண்ணாம பார்ப்போம்.. “ அவன் தன்னைத் திரும்பிப் பார்த்து சகஜமாய் சிரித்துப் பேச மாட்டானா என ஏங்கினாள். அவன் தலை நிமிரவில்லை.
“கேட்க சந்தோசமா இருக்கு.. அவர் என்ன பண்றார் இப்போ?”
“டெல்லி கவர்மெண்ட்ல ரெவென்யூ இன்ஸ்பெக்டர்.. “
“நைஸ்.. நீயும் நல்லா இருக்கிறதப் பார்க்க ரொம்ப சந்தோசப்படுறேன் அனிதா" என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை கவனித்தான். பத்து வருடங்களில் அவள் கொஞ்சம் வாடியிருந்தாள். நிறம் கொஞ்சம் குறைந்து போய், கண்களுக்கு கீழ் சில சுருக்கங்கள் தோன்றியிருந்தன.