ஐஸ்கிரீம் சண்டே - வின்னி
சண்டே, பழம், கொட்டை முதலியன கொண்ட குளிர்ப்பாலேடு, யாருக்குத்தான் பிடிக்காது?.
ஒவ்வொரு நாளும், அந்த ஹோட்டலை கடந்து பள்ளிக்கூடம் போகும்போது, அந்த ஹோட்டல் காபி ஷாப்பில் பலர் தமது பிள்ளைகளுடன் அமர்ந்து,விதவிதமான ஐஸ்கிரீம்களைச் சுவைத்து சாப்பிடுவதை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பாள் பத்து வயதான வித்யா.
அப்பா இருந்திருந்தால் தானும் அவருடனிருந்து ஐஸ்கிரீம் சுவைக்கலாமே! அப்பா இறந்து இரண்டு வருடங்கள்தான். அம்மாதான் கஷ்டப்பட்டு வேலை செய்து, வீட்டுச் செலவெல்லாம் பார்க்க வேணும். அம்மாவைக் கஷ்டப்படுத்த அவளுக்கு விருப்பமில்லை.
பாடசாலையில் பேச்சுப்போட்டி வித்யாதான் முதல் பரிசை வென்றாள்!
பிரதம அதிதியாக வந்த அந்த மேயருக்கு அவளுடைய பேச்சுத் திறமை நன்றாகப் பிடித்துவிட்டது. அவர் அவளுடைய சான்றிதழை வழங்கும்போது தனது சட்டைப்பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அவளிடம் கொடுத்தார். எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
நூறு ரூபாவை கவனமாக பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.
அந்த ஹோட்டல் காபி ஷாப்பை கடந்து போகும்போது வழமைபோல் அவளுக்கு ஐஸ்கிரீம் சண்டே ஆசை வந்தது.
கையில் காசிருந்தது! ஆனால், அம்மாவுக்கு இருக்கும் கடன் நினைவு வந்தது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள், வித்யா
அம்மாவிடம் காசைக் கொடுத்தாள்.
"அதை நீயே வைத்திரு அது உன்னுடைய காசு என்றாள்". "இல்லை எனக்கு ஐந்து ரூபா மாத்திரம் தாங்க ஐஸ்கிரீம் குடிக்க" என்று தயங்கித் தயங்கி கேட்டாள். அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது. தனது மகளின் ஒரு சிறிய ஆசையைக் கூடத் தன்னால் அறிந்துகொள்ள முடியவில்லையே என்று கலங்கினாள்.
உடனே ஐந்து ரூபாவை அவளுக்கு கொடுத்தாள்.
அடுத்த நாள் பள்ளிக்கூடம் விட்டதும் வித்தியா கையில் ஐந்து ரூபாயுடன் அந்த ஹோட்டல் காபி ஷாப்பில் நுழைந்து ஒரு ஆசனத்தில் அமர்கிறாள்.
சர்வர் தண்ணீரை மேசையில் வைத்து விட்டு. “என்ன சாப்பிடப் போகிறாய்?” என்று கேட்கிறாள்.
"ஒரு சண்டே ஐஸ் கிரீம் என்ன விலை?" "ஐந்து ரூபா".
“ஐஸ்கிரீம் மாத்திரம் என்ன விலை?"
"நாலு ரூபா" சர்வரின் அவசரம் தெரிந்தது வித்யாவுக்கு.
“ஒரு கப் ஐஸ் கிரீம் மாத்திரம் கொண்டு வாங்க".
சர்வர் ஐஸ்கிரீம் கொண்டு வந்தாள். வித்யா ஐஸ்கிரீமை சாப்பிட்டாள். சர்வர் பில்லை மேசையில் வைத்து விட்டு மற்ற வாடிக்கையாலர்களைக் கவனிக்கப் போய் விட்டாள். வித்யா காஷியரிடம் காசைக் கொடுத்து விட்டுப் போ ய்விட்டாள்.
திரும்பி வந்த சர்வருக்கு தனது கண்களை நம்ப முடியவில்லை.. அங்கே ஒரு ரூபா பில்லுக்கு மேல் இருந்தது.
ஒரு ரூபாய், அவளுக்கு வித்யாவின் சிறு அன்பளிப்பு!
அந்த சர்வரும் அவளுடைய தாய் போல மூன்று பிள்ளைகளை பராமரிக்கும் விதவை என்று அந்தச் சிறு பெண்ணுக்கு எப் படித் தெரிந்திருக்கமுடியும்?
{kunena_discuss:785}