நான் என் செய்வேன்? - ஜான்சி
என் செய்வேன்...
வெகு நாளாய்
எவர் முகமும் காண,
எனக்குள்
இத்தனை
ஆர்வம் துளிர்த்ததில்லை.
வெகு சில நாளாய்
உன் முகம் கண்டிடவே
முகமும்
அகமும்
மலர்கின்றது.
ஆண் என்றாலே அதட்டல் தான்
காரணமில்லா அரட்டல் தான்
என்று பதிவிட்டிருந்த என் மனதோடு
உந்தன் கருத்துக்கள் தவறென்று
சொல்லிச் சென்றது உன் வருகை.
அரங்கம் நடுவில் நீ நின்று
உந்தன் கருத்தைப் பகிர்கையிலே,
அவை அதிராத மென்மையில்
உன் பேச்சும்,
அதனினும் மெலிதாய்
புன்னகையும் கொண்டே
என் உள்ளத்தில்
பிரளயம் வர வழைத்தாய்.
நீ இங்கே வந்தது சில நாட்கள் தங்க
நீ சென்ற பின் எவ்வாறு
நான் உனை காண்க?
மீண்டும் சந்திப்பது
வாழ்வில் உண்டோ இல்லையோ?
என்றொரு புறம்
மனம் அங்கலாய்க்க
நாளை வருவதை நாளைப் பார்ப்போம்.
இன்று இருப்பதில்
நிறைவுக் கொள்வோம்.
என்னும் வெட்கம் கெட்ட எந்தன் மனது
உன் முகம் காணவே மலர்ந்திடுதே
உனை நோக்கியே மயங்கிடுதே
என் செய்வேன்.
நான் என் செய்வேன்?.....
கையில் கிடைத்த பழுப்புக் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தவளுக்கு சந்தேகம் என்றுக் கேட்கவந்த டீம் மெம்பர் வந்தவுடனே தான் தாம் ஆஃபீஸில் இருப்பதே ஞாபகம் வந்தது. தாளை மடித்து கை வாக்கில் எங்கோ வைத்து விட்டு வேலைகளை கவனிக்கச் சென்றேன்.
ஹலோ பொறுங்க நான் என்னை இண்ட்ரோ செஞ்சுக்கிறேன் என் பெயர் ஆலிஸ்.இதோ இந்த நிறுவனத்தில டீம் லீடா இருக்கிறேன். வயசு 27 அம்மா அப்பா இல்லை ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு இருக்கிறேன்.அப்போ உனக்கு இன்னும் கல்யாணம்னு கேட்கிறீங்களா...பொறுப்பா எடுத்துச் செய்ய யாருமில்ல, நகைப் பணம், சொத்தில்ல.......என்னையெல்லாம் யாருங்க கல்யாணம் செஞ்சுப்பாங்க......இப்போ வேற வயசு முப்பதாக போகுது, இனிமே எதுக்கு வேண்டான்னு நானே முடிவெடுத்துக் கிட்டேன்.
எனக்கு வீடு ஆபீஸ் ரெண்டுமே இது தான், வேலையில் மூழ்கிட்டா நேரமே தெரியாது. ஆபீஸில இருக்கிறவங்க தான் ரிலேடிவ்ஸ், பிரண்ட்ஸ் எல்லாமே.வேலை செய்றது கொஞ்சம் அதிரடியா இருக்கும். அமைதியா அப்படின்னா என்tனன்னு கேட்கிறது நம்ம ஸ்டைல்.யாரோ நீ எருமை மாட்டைத் தான் மேய்ப்பன்னு எப்பவோ சாபம் விட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் 20 பேர், என் மேலாளரைச் சேர்த்து 21 பேரை........சமாளிக்கிறதுன்னு சொல்றேங்க.