வாடகை கிளினிக் - கிருஷ்ண பாபு
சிட்டிநடுவில் சல்லிசான வாடகைக்கு கிளினிக் கிடைத்த சந்தோசத்தில் தன் முதல் பேஷண்டை அழைத்தார் டாக்டர்.
'டாக்டர்,எனக்கு சீக்கிரம் குணமாகுமா?'
'கண்டிப்பாக! உங்கள் பிரச்னை என்ன மேடம்?'
'ஒன்றா இரண்டா? நிறைய இருக்கு டாக்டர்!'
மனதிற்குள் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டார் டாக்டர்.
'நான் சுத்த சைவம்.ஆனால் சமீபமாக அசைவ மணம் என்னை சுண்டி இழுக்கிறது!'
'ம்.பிறகு?'
'நான் குனிந்ததலை நிமிராதவள்.ஆனால் சமீபமாய் திடகாத்திர இளைஞர்களை கண்டால் கட்டி அணைக்க துடிக்கிறது மனம்!'
மனசுக்குள் தலையிலடித்து கொண்டார்.
'ம்.ம்.பிறகு?'
'ஜீன்ஸ்,டிஷர்ட் தவிர எதுவும் பிடிக்காது எனக்கு. ஆனா சமீபமாய் சேலை மட்டும்தான் கொடுக்குறாங்க! அந்தக் கோபத்தில் யாரையாவது நாலு அறை அறையலாமா எனத் தோன்றுகிறது!'
பதறிப்போய் சேரை பின்னால் தள்ளிப் போட்டுக் கொண்டார்.
'ம்.ம்.இன்ட்ரெஸ்டிங்!பிறகு?'
'நான் தேவதை போல் அழகாகச் சிரிப்பேன்.சமீபமாக குமரிமுத்து சிரிப்புதான் வருகிறது!'
'த்ரோட் இன்பெக்ஷன் இருக்கலாம்.ஆமா, எப்ப இருந்து இந்த பிரச்னைகள் இருக்கு மேடம்?'
'இதோ இந்த பேன்ல நான் தொங்குனதுக்கு அப்புறம்தான் டாக்டர்!'
திடுக்கிட்டு நிமிர்ந்தார் டாக்டர்.
முன்னால் யாருமில்லை..
ஆனால் அறையெங்கும் எதிரொலித்தது குமரிமுத்து சிரிப்பு!
இஹஹஹஹஹஹஹஹஹா!!!
{kunena_discuss:785}