தோல்வி நிலை என நினைத்தால் - கிருஷ்ண பாபு
இரவுநேரக் கடற்கரை.
குப்பையோடு குப்பையாக நானும் என் லட்சியங்களும்.
இந்த நகரம் சுருட்டி வீசிய உயிர்க்காகிதங்கள்தான் என்போல் எத்தனை எத்தனை.
'இதுவும் கடந்து போகும்'
குரலாய் கடந்தார் ஒரு பெரியவர்.
இறுதிநேர முயற்சியா என் இறைவனே?
உப்பாய் சிரித்தேன்.
அலை அலையாய் சிரித்தபடி என்னை அள்ளிக்கொண்டு போகத் துடித்தது கடல்.
அவசரமென்ன அன்னையே நானே வருவேன்.
எவ்வளவு பிரம்மாண்ட நீலப்பூ…
எனக்கான ஆறடி இதில் எங்கோ தெரியவில்லை…
'உப்புப் போட்டுத்தான் சாப்பிடுறியா?'
எகத்தாளங்கள் நினைவில் நெஞ்சைக் கீறின.
உப்பை மட்டுமே இறுதியாக உண்ணப் போகிறது புழுபோல் நீங்கள் பார்த்த என்னுடல் இனிய விரோதிகளே!
இதோ இங்கே இறங்குகிறேன்…
எங்கே கரையேறுவேன் தெரியாது…
………………………
………………………
………………………
………………………
'தம்பி…தம்பி…கண்ணைத் திற'
'எல்லாரும் ஒதுங்கி நில்லுங்கப்பா'
'நீச்சல் தெரியாதவன் ஏன் ஆழத்துக்குப் போற?'
'சாகுறதுக்கு கூட விட மாட்டீங்களா இங்கே?'
'எதையும் சாதிக்க முயற்சிக்காத உன்னை அவளுக்குகூட பிடிக்கவில்லை போல'
கைநீட்டுகிறார் கடலை.
சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.
கோணிக் குப்பை சுமந்தபடி…
பானிபூரி வண்டி தள்ளியபடி…
சுண்டல் பேப்பர் சுருட்டியபடி…
பலூன்களில் கனவுகள் அடைத்தபடி…
அனைவரும் உயிர் ஓவியங்களாய்…
முடிவெடுத்தேன்.
இனி நான் காகிதமல்ல…
ஓவியம்…
தன்னைத் தானே தீட்டப் போகும் ஓவியம்.
'அண்ணே எனக்கும் ஒரு கோணி கிடைக்குமா?'..
{kunena_discuss:785}