ஒ.. என் காதல் சகியே - கிருஷ்ண பாபு
தெரியாத்தனமா மாமனாரை கொஞ்சம் ஓவரா கிண்டல் பண்ணி பேசிட்டேன் என் அருமை மனைவி ஜானுவிடம்.
என்னா கோபம்! நாலு நாளாச்சு அவள் என்னிடம் பேசி…
ஹோட்டல் சாப்பாடு,மொட்டை மாடி உறக்கம்,அவ்வப்போது ஜாடைமாடை நக்கல்னு முதல் 3 நாள் ரொம்ப அமர்க்களமாதான் இருந்தது..
ஆனால் நேற்று உலகமே ரொம்ப ஸ்லோவா ஆனதுபோல் ஒரு ஃபீலிங்!
அவள் பேசும் வார்த்தைகளை கொஞ்சுகிறேன்.
அவள் கண்களை சந்திக்க கெஞ்சுகிறேன்.
விரல்களில் காதல் தேக்கி அவள் நிழலை மெல்ல தீண்டுகின்றேன்.
மனதோரம் பார்த்த மன்னிப்பு ஒத்திகைகளை அவசரமாய் ஒத்திப் போடுகிறேன் ஆணென்ற கர்வத்தால்!
இப்படி புலம்பி புலம்பி கவிதை எழுதி draftல் போட்டபடி தூங்கிப்போனேன் நேற்றிரவு!
அதிகாலை வானமும் பனியும் எழுப்பின! புறா ஜோடி ஒன்று என் அருகே தத்தி தத்தி விளையாண்டது..எழுந்து உட்கார்ந்தேன்.
எறும்புகள்,வண்ணத்துப் பூச்சிகள்,பூக்கள்,அணில்கள் என மொட்டைமாடி ஜீவராசிகள் அனைத்தும் ஜோடியாக என்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது.
இவைகளுக்கு எல்லாம் மாமனாரே கிடையாதா? எரிச்சலாக வந்தது எனக்கு…
வீட்டினுள் நுழைந்தேன்.
என் மகனும் மகளும் விளையாடிகொண்டிருந்தனர். அவர்களை நியூஸ்பேப்பர் எடுத்து வரச்சொன்னேன்.
ம்ஹூம்… ரெண்டும் திரும்பிக் கூட பார்க்கல!
'எடுத்துட்டு வர்றவங்கதான் அப்பாவோட செல்லமாம்! என் செல்போன் அவங்களுக்குதானாம்!' கொஞ்சினேன்.
ம்ஹூம்! அசையல…
இதை பார்துக்கொண்டிருந்த என் மனைவி ஜானுவின் நமட்டுச் சிரிப்பில் வெட்கம் வந்தது எனக்கு…
ஓரக்கண்ணால என்னை ஒரு லுக் விட்டுட்டு பந்தாவா சொன்னாள்.
'எடுத்துட்டு வர்றவங்கதான் அம்மாவோட செல்லமாம்!'
'படக்'குனு புத்தகத்தை கீழே வச்சுட்டு ஓட ஆரம்பிச்சதுக ரெண்டும்!
இந்த சான்சை மிஸ் பண்ணலாமா?
அதுகளுக்கு முன்னாடி நான் ஓடிப் போய் பேப்பரை எடுத்துட்டு வந்து நீட்டினேன்…
ஒருநிமிஷம் ஸ்டன் ஆகி என்னையே பார்த்தாள்…
சிரித்தாள்…
சிரித்தேன்…
சிரித்தோம்…
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கிருஷ்ணபாபு???
{kunena_discuss:785}