யாருக்கு வீடு? - வின்னி
தனதுஎண்பது வயதுத் தாய், அன்றைய வாரப் பத்திரிகையையின், ‘வீடு விற்பனைக்கு’ விளம்பரப் பகுதியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதை அவதானிக்கிறாள், மலர்.
அந்தப் பத்திரிகையில் அழகான வர்ணப் படங்களுடன் பல வகையான வீடுகள் விற்பனைக்கு இருக்கின்றன.
வீடு வாங்கும் யோசனையில் நாள் முழுவதையும் கழித்துவிடுவாள், அம்மா.
" அம்மா! என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்? "
அம்மா நிமிர்ந்துஅவளைப் பார்த்துப் புன்னைகைக்கிறாள்.
அவளுக்கு வயது போயும் இளமைப் பொலிவுடன் இருக்கிறாள். தலையில் ஐம்பது மயிர்கள்கூட நரைக்கவில்லை. ஒவ்வொரு பற்களும் அவளது சொந்தப் பற்கள். அம்மா இளமையில் எவ்வளவு அழகாக இருந்திருப்பாள்! தனது கண்ணே பட்டுவிடுமோ என்று மலர் யோசிக்கிறாள்!
“அந்த நேரம் எப்படியும் வரும் என்று எனக்குத் தெரியும்” “எல்லாத்துக்கும் காலமும் நேரமும் வரவேணும்”. அதுதான் அம்மா அடிக்கடி சொல்வது!
அவள் இன்னும் தன்னுடைய யாழ்ப்பாண வீட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறாள். முப்பது வருடங்களுக்குமுன் போரில் அழிந்துபோன வீடு, இராணுவத்தால் விடுவிக்கப்படாத காணிகள் எல்லாம், ஒரு நாள் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு.
“கனடாவில் எப்படியும் ஒரு வீடு வாங்க வேணும்!”. மீண்டும் அதே யோசனை அம்மாவுக்கு.
அவள் அருகில் அமர்ந்து, தாயின் கைகளைத் தனது கைகளில் எடுத்துத் தடவியபடி, "நீ வீடு வாங்குவது, கோடியில் ஒரு முறை தான் நடக்கும்அம்மா" என்றாள் மலர்.
"என்னோடு செல்லம் கொஞ்சுவதை விடு”, "நான் உன்னுடைய குட்டிநாய் இல்லை" என்று சொல்லி மலரின் கைகளைத் தட்டி விட்டாள் தாய்.
"சரி, நீ ஒவ்வொருநாளும் கனவு கண்டு ஏமாந்தபடியே இரு! எனக்கு என்ன?"
“இருந்து பார் நான் ஒரு நாளைக்கு கனடாவில் ஒரு பெரிய வீடு வாங்குவேன் அப்ப நீதான் முதலில், இந்த வாடகை அபார்ட்மெண்டை விட்டுட்டு, என்னிடம் ஓடி வருவாய்”.
"அம்மா, ஏன் என்னை இப்படிச் சித்திரவதை செய்கிறாய்?"
தனது ஒரு அறை வாடகை அபார்ட்மென்ட்டைக் கேலி செய்ததில், மலருக்கு நெஞ்சை எதோ செய்தது.
“நான் உன்னை நல்லாத்தானே வைத்திருக்கிறேன்?".
"உன்னிடம் ஒரு காசும் இல்லை. ஆனால் உனக்கு வீடு வாங்க ஆசை!".
“உன்னிடம் காசும் வீடும் இருந்தால்தான், உன்னை நான் இதைவிட நல்லா விரும்புவேன் என்று நினைக்கிறியா?”
"சிலவேளை"…….., அம்மாவும் விடவில்லை.
மலர் ஆத்திரத்தோடு கதிரையில் இருந்து எழும்பி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பாலை நோக்கி போகிறாள்.
"காசுக்காக உன்னை விரும்பும் உனது மகள் காப்பி போட்டுத் தந்தால் குடிப்பியா?"
"முட்டாள் மாதிரிக் கதைக்காதே, மலர்!"
"அப்படி என்றால் என்ன? காப்பி வேணுமா? இல்லையா? "
காப்பியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. மலரின் தாய் தலையைத் திருப்பி காப்பி போடும் மலரைப் பார்க்கிறாள்.
“ஆம்!,………. அது ஆம் தான்!".
"எனக்குத் தெரியும் நீ என்னை ஒரு அறிவில்லாதவள் என்று நினைக்கிறாய்"
"இல்லை! நான்அப்படி நினைக்கவில்லை, அம்மா!".
“நான் சொல்வதற்கு எதிராக எதாவது சொல்வதை நிறுத்தி விட்டு, நான் ஏன் வீடு வாங்கலாம் என்று அவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறேன் என்று கேள்!”
“மன்னிச்சுக்கொள் அம்மா!”
மலரைத் தொடர்ந்து பேச, அம்மா விடவில்லை.
அந்த குடிகாரப் புருஷன் செத்து ஆறு மாதம் ஆகவில்லை அவன் குடியில் விட்டுப்போன கடனெல்லாம் அடைத்து மிஞ்சியது ஒன்றுமில்லை. எதோ கிடைத்த ஒரு வேலையில், காலத்தைத் தள்ளிக் கொண்டு போகிறாள் மலர்.
அம்மாவும் இல்லாவிட்டால் அவளுக்கு யாரும் இல்லை!
அம்மா மலரின் கையிலிருந்து காப்பியை எடுத்துக்கொண்டு, “அந்த ஜோதிடன்….." என்றாள்.
“எந்த ஜோதிடன்?” மலர் கேட்டாள்”.
“எனக்கு பதினாறு வயது”
“ஊரில் குருநாதசுவாமி கோவில் தேர்த் திருவிழா, பக்தர்கள் ஆயிரக்கணக்கில் எங்கள் ஊரில் வந்து சேர்க்கிறார்கள்”.
“அந்தச் சிறு ஊரே நிறைந்துவிட்டது. ஒரே கொண்டாட்டம்”.
“அந்த ஜோதிடனும் அங்கே வந்திருந்தான்!”
அம்மா சொல்வதை நிறுத்திவிட்டு, ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாள்.