“பட்டிக்காட்டனுக்கு இங்க என்னடா வேலை?”
“ முடியை பாரேன்..எண்ணெய் வழியுது ஒரு பக்கம்.. இதுல டை அடிக்கிறேன்னு நெத்தியிலையும் அடிச்சு வைச்சுருக்குறதை பாரு" இப்படி சில மாணவர்கள் கேலி செய்யவும் அந்த இடத்தை விட்டு சென்று விடலாம் என்று தான் நினைத்தார் விசித்திரமைந்தன்.
“ நான் ராகமதியின் அப்பா” என்று சொன்னால் தனது மகளையும் கேலி செய்வார்களோ என்று தவித்தது அந்த தந்தையின் உள்ளம். வந்த வழி திரும்பி நடந்தவரை “ பளார்” என்ற சத்தம் அதிர வைத்தது. தனத தந்தையை கேலி பேசியவர்களில் ஒருவனை பளார் என்று அறைந்திருந்தாள் ராகமதி.
“ யார வம்பு பண்ணுற? அவர் என் அப்பாடா ! அப்பா வயசுல இருக்குறவங்களை கேலி பண்ணுறியே வெட்கமா இல்லையா? நீ என்ன ஷாருக்கானா? நீ இப்படி பேசினது உன் அப்பாக்கிட்ட சொல்லுடா.. காரி துப்புவார்! என் அப்பா மாதிரி உன்னால ஒரு மகளை வளர்த்திட முடியுமாடா? எல்லா பொண்ணுக்குமே அவ பெரிய மனுஷி ஆனப்பிறகு அம்மா ரொம்பவே அவசியம்.. ஆனா என் அப்பாவே எனக்கு அம்மாவுமாய் இருந்து என்னை வளர்த்தாரு தெரியுமா உனக்கு ? வெள்ளையா இருந்தா அழகு, கருப்பா இருந்த அசிங்கம்னு நினைக்கிற உனக்கெல்லாம் அழகை பத்தி பேசுறதுக்கு உரிமையே இல்லை..” என்று ஆவேசமாய் பேசியவள் மீண்டும் அவன் கன்னத்தில் அறைய அவளைத் தடுத்தார் விசித்திரமைந்தன்.
அதற்குள் ராகமதியின் தோழர்களை, அந்த கூட்டத்தை விலக்கிவிட்டு ராகமதியிடம் சென்றனர்.
“அப்பா” என்றபடி அவரை கட்டியணைத்திருந்தாள் அவள். அவள் பின்னே ஓடி வந்த நண்பர்கள், விசித்திரமைந்தனின் கைகளில் இருந்த பையை வாங்கிக் கொண்டு அப்படியே நின்றனர்.
“சாரிப்பா”
“ விடு பாப்பா.. நீ ஏன் மன்னிப்பு கேட்குற? என்னாலதானே உனக்கு அவமானம் ? அப்படி ஏதும் நடக்க கூடாதுன்னு தான் நான் திரும்பி போனேன்.. ஆனா நீ வந்துட்ட.. இனிமே இப்படி நடக்காது பாப்பா” என்று அவர் விளக்கம் அளிக்கவும், அத்தனை நேரமாய் கேவிக்கொண்டு இருந்தவள் கோபமாய் நிமிர்ந்தாள்.
“ஓஹோ.. அப்போ இனி என்னை பார்க்க வர மாட்டீங்க.. அப்படித்தானேப்பா?”
“ பாப்பா… அது வந்து … நீதான் லீவ் விட்டா என்னை பார்க்க வருவியில்ல?”
“அப்போ நீங்க வர்றதா இல்லை? அப்படிதானேப்பா? என்னை விட எவனோ சொன்ன வார்த்தைகள் பெருசா?” என்று மகள் கோபமாய் கேட்கவும், பதில் பேசாமல் இருந்தார் விசித்திரமைந்தன்.
“ உங்க இஷ்டம்பா.. ஆனா நீ எப்போதெல்லாம் வரலையோ, அப்போதெல்லாம் நான் எக்சாம் ஒழுங்கா எழுத மாட்டேன்”
“பாப்பா!!”
“ என் பிடிவாதம் உங்களுக்கு தெரியுமேப்பா.. நான் என் முடிவை மாத்திக்க மாட்டேன்.. உங்களுக்கு நான் நல்லா படிக்கணும். சந்தோஷமா இருக்கணும்னு தோணிச்சுன்னா நீங்க வரணும்..அவ்வளவுதான் சொல்லிட்டேன்!” என்றாள் ராகமதி தீர்மானமாய். தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை பார்த்தபடி இருந்தனர் ராகமதியின் நண்பர்கள்.
அவர்களின் ஒருவனான கணேஷ், “ ஆமாம்பா.. ராகமதி பிடிவாதக்காரின்னு எங்களுக்கு தெரியும்.. ஆனா இந்த விஷயத்துல அவ சொல்றதுதான் சரி.. அவனுங்க வயசு அப்படி! புரியாமல் பேசுறானுங்க.. யாருக்காகவோ, நீங்க வராமல் இருக்குறது சரியில்லை!” என்றான். நண்பனை பார்த்து புன்னகைத்த ராகமதி கொஞ்சம் இயல்பாகினாள்.
“அப்பா இவங்க எல்லாரும் என் கூட படிக்கிறவங்க.. இவ மகேஷினி, இவ மதுரா, இவன் கணேஷ், இவன் கௌதம்” என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்களுடன் அறிமுகமாகிய விசித்திரமைந்தன் கொஞ்ச நேரத்திலேயே கவலை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அங்கிருந்து கிளம்பும்போது,
“எனக்கு உங்க எல்லாரையும் பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்.. என் பாப்பா நல்லா இருக்கான்னு நிம்மதியா இருக்கு.. கண்டிப்பா நான் அடிக்கடி காலேஜ் வருவேன்.. நீங்களும் லீவுக்கு நம்ம ஊருக்கு வரணும்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
அதன்பின் வந்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே கழிந்தன. ராகமதி கை நீட்டி அறைந்ததினால் அந்த மாணவன் மட்டும் துவேஷத்துடன் இருக்க, அவன் ராகமதியை நெருங்க முடியாத அளவிற்கு கணேஷும் கௌதமும் அவளை பார்த்துக் கொண்டனர். இதற்கிடையில் செமஸ்டர் விடுமுறை வந்தப்போது, ராகமதியின் தந்தையின் பேச்சுக்கு இணங்கி அவளது ஊருக்கு சென்றனர் அவளது நண்பர்கள்.
“ அட என்னப்பா நீ? உன் பொண்ணு மேல பாசம் வெச்சுருந்தாலும், இப்படியா பைத்தியக்காரனா இருப்ப? இப்படி ஆம்பள பசங்களை எல்லாம் வீட்டுல தங்க வைச்சா மதிக்கு தானே கெட்ட பேரு?” என்று கிராமத்தில் ஒருவர் கேட்கவும்,