“ எவன் பேசுவான் ? தைரியமிருந்தா என் முன்னாடி வந்து பேச சொல்லு.. அந்த புள்ளைங்களே மனசுல கள்ளம் கபடமில்லாமல் பழகுதுங்க.. அதைப் போயி சந்தேகப்பட்டுகிட்டு.. இதெல்லாம் தப்புய்யா.. நல்ல வளர்ப்பில் வளர்ந்த புள்ளைங்க தப்பு பண்ணாதுங்க.. என் பொண்ணு மேல மட்டுமில்ல, அந்த பசங்க மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. எல்லாரும் என் புள்ளைங்க தான்!” என்று வாயடைக்க வைத்தார் விசித்திரமைந்தன். அவரது பதிலை தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கணேஷ், கௌதம், மகேஷினி, மதுரா நால்வருக்குமே அவர் மீது மரியாதை கூடியது! ராகமதியின் அப்பா என்ற ஸ்தானத்தில் இருந்து “அப்பா” என்ற ஸ்தானத்தில் அவர்களது மனதில் குடியேறியிருந்தார் விசித்திரமைந்தன்.
ஒருவழியாய் கல்லூரி வாழ்க்கை முடிந்து கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக நல்ல வேலை பெற்றாள் ராகமதி. வாழ்க்கை அதன்போக்கில் சுமூகமாய் செல்லும்போதுதான், தன் மனதில் நீண்ட நாளாக இருந்த ஆசையை சொல்ல ஆரம்பித்தாள் ராகமதி.
“அப்பா..”
“என்ன பாப்பா?”
“உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும்பா!”
“ வா பாப்பா.. இங்க வந்து உட்காரு!” என்று கை காட்டினார் விசித்திரமைந்தன். தந்தையின் தோளில் சாய்ந்தபடி மொட்டை மாடியில் அமர்ந்திருந்தாள் ராகமதி.
“ என்னம்மா மனசு சரி இல்லையா?”
“ ச்ச..ச்ச உங்க கூட இருக்கும்போது எனக்கு என்னப்பா கவலை.. இது வேற விஷயம் ..”
“என்னம்மா யாரையாவது காதலிக்கிறியா?” என்று கனிவாய் கேட்டார் அவர்.
“ ஹா ஹா அப்பா நான் உங்க பொண்ணு… எனக்கு நல்ல மாப்பிள்ளையை பார்க்க வேண்டியது உங்க பொறுப்பு..அதில் நான் தலையிட மாட்டேன்” என்றாள் ராகமதி. மகளின் தலையை பாசமாக வருடிக் கொடுத்தார் அவர்.
“சொல்லும்மா.. வேறென்ன?”
“அப்பா .. நீங்க ஏன்பா என்னை படிக்க வைச்சீங்க?”
“இதென்னம்மா கேள்வி?”
“ப்ச்ச்.. பதில் சொல்லுங்கப்பா!”
“ பொண்ணுக்கு படிப்பு ரொம்ப அவசியம்மா.. எனக்கு நிறைய படிக்கனும்னு ஆசை.. ஆனா என் அப்பா இறந்து போயிட்டதுனால அம்மாவால என்னை படிக்க வைக்க முடியல.. பன்னிரண்டாவதோட நிறுத்திட்டேன்.. எனக்கும் சேர்த்து நீ நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டு நான் படிக்க வைச்சேன்மா!” என்றார் விசித்திரமைந்தன்.
“ அப்பா … இப்போ எனக்கொரு ஆசைப்பா”
“ என்ன பாப்பா?”
“ எனக்கு உங்களை படிக்க வைக்கணும்னு ஆசையா இருக்குப்பா!” என்றாள் ராகமதி. மகளையே ஆச்சர்யமாய் பார்த்தார் அவர்.
“இந்த வயசுல எப்படிம்மா?”
“ படிப்புக்கு வயசே கிடையாதுப்பா..”
“அட போ பாப்பா.. இந்த வயசுல புக்கு பரிட்சை, மனப்பாடம்..இதெல்லாம் என்னால முடியாது பாப்பா” என்று அவர் சிணுங்கவும் ஒரு அதட்டல் போட்டாள் ராகமதி.
“ என்ன பேச்சு இது ? எங்கப்பாவுக்கு ஒரு நல்லது செய்யனும்னா நான் யோசிக்காமலா செய்வேன்? நான் உங்களை டாக்டருக்கு படிங்க, இஞ்ஜினியருக்கு படிங்கன்னு சொல்லுறேனா?”
“பின்ன?”
“உங்களுக்கு தமிழ் பிடிக்குமேப்பா.. “Tamizh Literature” படிங்கப்பா.. நான் சப்போர்ட் பண்ணுறேன்..”
“..”
“நீங்க அப்பப்போ கவிதை எழுதுறதும், சின்ன சின்ன கதை எழுதி வெச்சுருக்குறதையும் நான் படிச்சேன்பா.. உங்ககிட்ட திறமை இருக்குப்பா.. அதை எனக்காக கொண்டுவாங்கப்பா..” . மகள் பேசிய இத்தனை வசனங்களில் “ எனக்காக” என்ற வார்த்தை மட்டும் விசித்திரமைந்தனின் மனதில் நின்றது.
“சரிம்மா” என்று ஒரே வார்த்தையில் சம்மதத்தை சொன்னார். அதன்பின், ராகமதி தனது தந்தையின் வளர்ச்சிக்கு காரணமாகினாள். புத்தகத்தில் இருந்து இணையத்தளம் வரை அனைத்திலும் விசித்திரமைந்தன் பரிட்சயமாவதற்கும் பயில்வதற்கும் ராகமதியே பக்கபலமாய் இருந்தாள்.
அண்மையில் “ தமிழன் இனி மெல்ல வாழ்வான்!” என்ற தலைப்பில், புத்தகம் ஒன்றை எழுதினார். தமிழின் சிறப்பும், அதை இன்னும் பாதுகாக்கும் வழியும், தமிழின் மேல் நமக்கிருக்கும் அறியாமையையும் மிக எளிதான தமிழில் எழுதி விருது பெற்றார் விசித்திரமைந்தன்.