கவிதைத் தொடர்கதை - அவ்விடம் எப்படியோ ? - தொலைதூர தொடுவானமானவன் – 03 - புவனேஸ்வரி கலைச்செல்வி
கொலை செய்யும் எண்ணத்தில்
அலைப்பேசி மின்னும்!
போகாத தூரமெல்லாம்
இவள் கற்பனைகள் துள்ளும்!
உறங்கிட வாழ்த்துரைத்தவன்,
மீண்டும் பேசுகிறான்!
“தூங்க போறீங்களா?”
ஆம் என்றால் தாலாட்டுவானா?
இல்லை என்றால் சீராட்டுவானா?
துடுக்காய் துடித்த நாக்கினை
அடக்கு அடக்கென உரைக்கிறது நெஞ்சம்!
“இல்லை தூங்கனும்..”
முதல் பாதி பதில் சொன்னேன்..
“ஆனா தூக்கம் வரல இன்னும்”
மறுபாதியில் பேச சொன்னேன்!
மனம் புரிந்திருப்பானோ? இதழில்
மென்னகை புரிந்திருப்பானோ?
அதுவோ இதுவோ ?
மதுவென மயங்கியது மனமோ?
“உங்கள பத்தி சொல்லுங்க!” - அவன்
சொல்லவா?
சாதாரண யுவதி,,
உன்னால் உணர்கிறேன் அவதி!
மதிகெட்டு போய் சிரிக்கும்,
தறிகெட்ட மனதின் கடிவாளம் பிடித்தவள்,
கொஞ்சம் உன்னையும் படிக்க பிடித்தவள்!
யாரென தெரியாதவன்மீது ஈர்ப்பு,
அதற்காக கொஞ்சம் காத்திருப்பு,
இப்படி தனக்கென திருப்புமுனை செதுக்கும்
ஓயாத எண்ணங்கள் கொண்ட சிற்பி!
எதையும் உறைக்காமல்,
பெற்றோர் வைத்த பெயரில் தொடங்கி,
நேற்று ரசித்த பாடல் வரை
அருவியென மொழிகிறேன்
பொறுமையாய் கேட்கிறான்!
பேச்சின் ஊடே,
“ரொம்ப பேசுறேனா?” என்று கேட்கிறேன்
“என்னை மிஞ்சிட முடியாது, முயற்சிக்காதே” என
ஒருமையில் தாவினான்..
உரிமையை நாட்டினான்!
யார் வந்து உரிமை கொண்டாடினாலும்
சேர் என வருவதில்லை அமைதி,
பிடித்தவர்களிடம் மட்டுமே
பிடிவாதம் கூட பிரசன்னமாகும்!
அவனை பற்றி கேட்டேன்!
பேச்சில் எனை மிஞ்சுபவன் தான்!
ஓயாத வேற்றுமைகளில்
ஓரிரு ஒற்றுமைகள்!
சிரிப்புக்கும் சிலிர்ப்புக்கும் இடையில்,
பிணைப்பொன்று எட்டி பார்க்கிறது!
என்னை அறிகிற ஆர்வம் அவனுக்குள்
அவனை புரிகிற தேடல் எனக்குள்!
ஆர்வமும் தேடலும் சங்கமித்தால்?
நீண்ட நாட்களுக்குபின்
இதழோர சிரிப்புடன் கண்ணுறக்கம்!
அவ்விடம் எப்படியோ?
தொடரும்...
{kunena_discuss:1171}