தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 12 - வத்ஸலா
‘நண்பனின் மரணத்தை கூட தாங்கிக்க முடியும். நட்போட மரணத்தை தாங்கிக்க முடியாது நாயர்’ எதிர்நீச்சல் திரைப்படத்தில் முத்துராமனிடம் சொல்வார் நாகேஷ். அப்படி மரணித்து போன ஒரு நட்பின் வலி அவனுக்குள் மறைந்து கிடப்பது புரியாமல் இல்லை அனுவுக்கு.
அவனது நினைவு புள்ளியும் அங்கேதான் பதிந்திருக்கும் என அவனது இறுகிய முக பாவம் உணர்த்திக்கொண்டே இருந்தது அவளுக்கு.
அப்போது சென்னையில் ஹரிஷ் முதுகலை முதலாம் ஆண்டு சேர்ந்திருந்த காலகட்டம் அது. அனுராதா அவனை விட்டு விலகி சென்று ஓராண்டுக்கு மேல் ஆகி இருந்தது.
கிரிக்கெட் வீரர் ரகுநந்தன்! கிள்ளி எடுக்க சதை இல்லாத உயரமான உருவம், சுருட்டை கேசம், நிறைவேறாத ஏக்கம் பொருந்திய கண்கள். இதுவே ரகுநந்தன்.
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவது ஒன்றே அவரது லட்சியமாக இருந்தது.. ரஞ்சி கோப்பை வரையிலும் சென்று விளையாடிய போதிலும் இந்திய அணியில் மட்டும் அவருக்கு இடம் கிடைக்கவேயில்லை. அந்த ஏக்கமே அவரை இதய நோய் வரை கொண்டு சென்றிருந்தது..
அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற போதிலும் கிரிக்கெட் மீதான அவர் காதல் மட்டும் குறையவே இல்லை. அதனாலேயே இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாகக்கும் ஒரு கிரிக்கெட் பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார் அவர்..
இந்திய கிரிக்கெட் அணியில் இவன் சேருவதற்கு முன்னால் கிரிக்கெட் விளையாட இவன் பயிற்சி பெற்றது அவர் நடத்தி வந்த பயிற்சி பள்ளியில்தான். தனது இரண்டு மகள்கள் கீதாவும், ஸ்வேதாவுமே அவரது உலகம்.
கீதா கல்லூரியில் ஹரிஷுடனே படித்துக்கொண்டிருந்தாள். தனது குருவின் மகள் என்ற ரீதியில் அவள் மீது அவனுக்கு நிறைய மரியாதை இருந்தாலும் அவளிடமும் அதிகம் பேசியதில்லை அவன்.
அது ஏனோ ஸ்வேதாவை சந்திக்கும் சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை இவனுக்கு. இப்போது ரகுவின் மனைவியாக அவளை சந்திக்கும் சூழ்நிலை வரும் வரை அவள் முகமே அறிந்ததில்லையே இவன். ஆனால் கீதா???
ஹரிஷின் மீது நிறையவே பாசம் உண்டு ரகுநந்தனுக்கு அவனது விளையாட்டு திறமை மீதும் அளப்பறிய நம்பிக்கை அவருக்கு. ஹரிஷ் கண்டிப்பாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவான் என்ற உறுதியான எண்ணம் அவருக்கு உண்டு. அவனது தந்தை இவன் மீது கோபப்படும் நாட்களில் கூட இன்னொரு தந்தையாய் அவனுக்கு இருந்திருக்கிறார் ரகுநந்தன்.
எல்லாரும் பயிற்சி முடிந்து சென்ற பிறகும் தினமும் இவர்கள் இருவரும் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். இவன் இன்று வீசும் பந்துகளும் அதன் நுணுக்கங்கள் எல்லாமுமே அவருக்கே சமர்ப்பணம்.
‘செம செம செமடா டேய்..’ கூவுவார் இவன் பந்து வீசும் போதெல்லாம். அதென்னவோ, இவன் வீசும் பந்துகளில் ஆட்டம் இழப்பதில் அலாதி பிரியம் அவருக்கு என்றால் அவர் வீசும் பந்துகளை பௌண்டரிக்கு விளாசுவதில் மிகப்பெரிய பெருமை இவனுக்கு.
இப்படியே அழகாய் போய்க்கொண்டிருந்த நாட்களின் நடுவில்தான் வந்தது அந்த நாள். வந்திருக்கவே வேண்டாத நாள்.
அது ஒரு மாலை நேரம். வழக்கம் போல் எல்லாருடனும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார் மனிதர்.
‘எல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம். எனக்கு கிரிக்கெட் விளையாடிகிட்டே இருக்கும்போது போயிடணும்’ அடிக்கடி சொல்வார் அவர்.
தனது கல்லூரியிலிருந்து அப்பாவை வீட்டுக்கு அழைத்து செல்ல ஸ்வேதா வந்ததை அறியவில்லை இவன். ஒரு ஓரத்தில் சென்று நின்று அவள் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆட்டத்தை. அவர் பௌண்டரிக்கு விளாசிக்கொண்டிருந்தார் இவன் பந்துகளை. இவனது அந்த ஓவரின் கடைசி பந்து.
‘சார் நீங்க விளையாடும் போது ஹெல்மெட் போடுங்கன்னு நிறைய தடவை சொல்லி இருக்கேன். பால் தலையிலே பட்டா ஒரு நேரம் போலே இருக்காது சார்.’ எது செலுத்தியதோ சொன்னான் ஹரிஷ். கேட்கவில்லையே அவர்.
‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா. என்னை என்ன வயசானவன்னு நினைச்சியா? முதல்லே இந்த ஓவர்லே அவுட் ஆக்கிடுடா என்னை. நீ. அதுக்கு அப்புறம் நீ சொல்றது எல்லாம் கேட்கிறேன்’ சிரித்துக்கொண்டே சொன்னார் அவர்.
அவுட் ஆக்கி இருக்கலாம் அவன். அப்படி நடந்திருந்தால் எல்லாம் நல்லபடியாகவே இருந்திருக்குமே? முடியவில்லையே! இயலவில்லையே! இவன் பந்து வீச பேட்டில் பட்டு பறந்தது பந்து.
‘சிக்ஸர்’ கலகலகலவென சிரித்தார் ரகுநந்தன். அதுவே அவர் சிரித்து அவன் கேட்ட கடைசி சிரிப்பு.
‘அட போங்க சார்.. மணி ஆறாகிடுச்சு. நான் கிளம்பறேன். நாளைக்கு பார்ப்போம் பந்தை இன்னொருவனிடம் கொடுத்துவிட்டு இவன் சிரித்துக்கொண்டே நகர
‘ஹேய்.. ஹரிஷ்... இன்னும் ஒரே ஒரு ஓவர்...’
‘நோ....’ இவன் அணிந்திருந்த தொப்பியை கழற்றியபடியே தலை அசைத்தான்.