"அடப்பாவி"
"சரி சாக்லேட் விஷயத்துக்கு வருவோம். கதையை யோசிச்சிட்டியா?"
"யோசிக்கணும்டா. கொஞ்ச நேரம் என்னை தனியா விடு"
வசந்த் தனிமையில் கதையை சிந்திக்கத் தொடங்கினான். கற்பனைகள் நாலாபுறமும் ஓடின. கதை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
டைரக்டர் ஷூட்டிங்கிற்கு தயாராகிக்கொண்டிருந்தார்.
"சார்"
"சொல்லு வசந்த்"
"கதையை யோசிச்சிட்டேன்"
"அப்படியா? சூட் முடியட்டும். அப்புறம் கேக்குறேன்"
"ஓகே சார்"
ஷூட்டிங் ஆரம்பமானது. வசந்தின் சிந்தனை முழுவதும் சாக்லேட் விளம்பரத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தது.
"என்னடா கதையை தயார் செஞ்சிட்டியா?" ஜான் கேட்டான்.
"ம்"
"கதையை சொல்லு"
"நோ நோ முதல்ல டைரக்டர் கிட்ட தான் சொல்லுவேன்"
"ஏன்?"
"அவரு ராசியான ஆளு"
"நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்னு சொல்லுறியா?"
"புரிஞ்சா சரி"
"காத்து ஒரு பக்கமாவே அடிக்காதுடா. திசை மாறும்போது திரும்பி இந்த இடத்துக்கே வந்து விழுவ"
"சாரி உன்கிட்ட பேச எனக்கு நேரமில்லை. நான் யோசிக்கணும்" என்று அங்கிருந்து கிளம்பிய வசந்த் டைரக்டரிடம் சென்றான்.
சூட் முடிந்திருந்தது.
"சார், கதையை சொல்லட்டுமா?"
"தாராளமா சொல்லு"
வசந்த் கதையை சொல்லத் துவங்கினான். அக் காட்சியை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஜான். வசந்த் கூறும் கதை டைரக்டருக்கு பிடிக்கவில்லை என்று அவர் முகபாவனையை வைத்தே ஜானால் ஊகிக்க முடிந்தது.
"இவன் என்ன கதை சொல்லுறான்? அந்த ஆளு பைல்ஸ் பேஷண்ட் போல நெளியிறான். விட்டா இந்த இடத்தை விட்டே ஓடிடுவான் போல இருக்கே"
"வசந்த் வசந்த் கொஞ்சம் நிறுத்து" என்றார் டைரக்டர்.
"என்ன சார்?"
"இந்த கதை ஏனோ மனசுக்கு பிடிக்கல"
வசந்தின் முகம் வாடிப் போனது. "கதை இன்னும் முழுசா முடியல சார்"
"இல்லை வசந்த், நீ வேற கதையை தயார்பண்ணு. இரண்டு மூணு நாள் கூட எடுத்துக்க. கடைசி ஸீன் மட்டும் பாலன்ஸ் இருக்கு. அதை எடுத்துட்டா ஷூட்டிங் முடிஞ்சிடும்"
"சரிங்க சார்" என வசந்த் எழுந்து சென்றான். அவன் முகம் சோகத்தில் மூழ்கியிருந்தது. தான் சொன்ன கதை வித்தியாசமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் என எண்ணியிருந்தான் வசந்த். மீண்டும் ஜானிடம் சென்றான்.
"ஜான்"
"யாரு? வசந்தா? இந்நேரம் நீ டைரக்டர் ஆகி ஷூட்டிங் கிளம்பியிருப்பேன்னு நினைச்சேன்"
"கிண்டல் வேண்டாம். நான் கதை சொல்லுறேன். எப்படியிருக்குன்னு சொல்லு"
"இந்த அதிர்ஷ்டம் இல்லாதவன்கிட்ட கதை சொல்லி என்ன பிரயோஜனம்"
"ஐயோ கொஞ்சம் கதையை கேட்டு தொலையேண்டா"
"சரி சொல்லித் தொலை"
"வயசானவர் ஒருத்தர் சாகோமில்க் சாக்லேட்டை சாப்பிட விரும்புறாரு. அவருக்கு சுகர், பல் சொத்தை வேற"
"இப்போ புரியது"
"என்ன?"
"அந்த டைரக்டர் ஏன் நெருப்புல உட்கார்ந்தது போல நெளிஞ்சிட்டு இருந்தான்னு. ஏண்டா, சின்ன பசங்க சாப்பிடுற சாக்லேட்டை வயசானவன் சுகர் பேஷண்ட் பொக்க வாய்னு சொல்லிட்டு இருக்க. இரண்டு காதலர்கள் சண்டை போட்டு பிரிஞ்சு வாழுறாங்க. ரொம்பவே வருத்தப்படுறாங்க. காதலன் சாக்லேட் கொடுத்து அவளை சமாதானப்படுத்துறான். இரண்டு பேரும் பச்சக் பச்சக் னு முத்தம் கொடுக்குறாங்கன்னு விளம்பரம் எடு. மெகா ஹிட் ஆகும்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் ஜான்.
வசந்த் தலையில் கைவைத்தபடி அமர்ந்தான். தான் கதை சொல்லும் பாணியில் ஏதோ தவறு இருக்கிறது. கேட்பவர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற பயத்தாலேயே கதை சொல்வதில் தடுமாற்றம் இருக்கிறது என்று எண்ணிய வசந்த், இதற்கு என்ன தீர்வு என்று சிந்தித்தான். அவன் நினைவில் சட்டென அமேலியாவின் ஓவியம் வந்தது.
அவன் கண்கள் அமேலியாவைத் தேடின. ஷூட்டிங் நடக்கும் இடத்தில் ஓர் ஓரமாக நின்றுகொண்டு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். வசந்த் அங்கே சென்றான்.
ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. கடைசி சீனை டைரக்டர் எடுத்துக்கொண்டிருந்தார். காதலன் காதலியிடம் ஐ லவ் யூ என்று சொல்லி அணைத்துக்கொள்கிறான்.
'ஐ லவ் யூ" என்ற அந்த வார்த்தைகளைக் கேட்டதும் மூளையில் ஏதோ பளிச்சிட்டது அமேலியாவிற்கு. ஆம்! அதற்கான அர்த்தம் கிட்டத்தட்ட அமேலியாவிற்கு புரிந்துவிட்டது. காதலன் காதலியிடம் சொல்லும் வார்த்தை அது!
ஷூட்டிங் முடிந்துவிட்ட சந்தோஷத்தில் எல்லோரும் கைகளைத் தட்ட, அமேலியாவும் வசந்தும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
தொடரும்...
{kunena_discuss:983}