குளித்துவிட்டு வந்தவன், பின் நித்யா குளிக்க தயாரானதும்,
"நான் ஆஃபிஸ்க்கு கால் பண்ணிட்டு அப்படியே ரெஸ்ட்டாரண்டில் என்ன மெனுன்னு விசாரிக்கிறேன்.. ட்ரைவரையும் கொஞ்ச நேரத்தில் வரச் சொல்லி கால் பண்றேன்.. நான் செக்கின் செஞ்சோமே ரிஸ்ப்ஷன் அதுக்கு பக்கத்தில் தான் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு.. ரூமை பூட்டிக்கிட்டு வா நித்தி.. இப்போ கதவை லாக் செஞ்சுக்கோ.." என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
அவன் சொன்னது போலவே குளித்து முடித்து தயாரானவள், அறையிலிருந்து வெளியே வந்து முதலில் அந்த அறைக்கதவை எப்படி பூட்டுவது என்று சிறிது நேரம் விழித்து, போராடி, ஒரு வழியாக கதவை பூட்டிக் கொண்டு வந்தவள், அப்போது தான் அங்கங்கே பாதைகள் பிரிந்து செல்வதை கவனித்தவள், எந்தப்பக்கம் ரிஸப்ஷனுக்கு செல்ல வேண்டும் என்பது புரியாமல் ஏதோ ஒரு பாதையில் நடக்கத் தொடங்கியவளுக்கு, அங்கு வரவேற்பறைக்கும் உணவுகூடத்திற்கும், அதேபோல் அந்தந்த அறைக்கான எண்களோடு அம்புக்குறி போட்டிருப்பதை கவனிக்காமல் எங்கே உணவகம் என்று தேடி அலைந்தாள்.
இங்கே அவளுக்காக காத்திருந்த கார்த்திக் அவள் இன்னும் வராததால் அவளைத் தேடி அறைக்குச் செல்ல, அறை பூட்டியிருப்பதை பார்த்து, மனைவியை காணவில்லை என்று ஒரு நொடி பதறியவன், அவளது அலைபேசிக்கு முயற்சித்தவன், அது அணைக்கப்படிருந்ததும் கோபம் கொண்டவன், ஒருவேளை வழி மாறி சென்றுவிட்டாளோ என்று யூகித்து அவளை தேடி செல்ல,
சிறிது நேர தேடலுக்கு பின்பு தான் அம்புக் குறியை கவனித்த நித்யா, உணவு கூடம் செல்வதற்கான அம்புக்குறியை பார்த்து நடந்தப்படியே உணவுக் கூடத்தை அடைந்தவள், அங்கே கார்த்திக் இல்லாததை பார்த்து பயம் கொண்டாள்.
கார்த்திக்கோ இன்னும் அவளை தேடிக் கொண்டிருந்தவன், பின் ஒருவேளை வழி கண்டுபிடித்து உணவுகூடத்திற்கு சென்றிருக்கலாம் என்று யூகித்து அங்கு வர, பதட்டத்துடன் நின்றிருந்த மனைவியை பார்த்து ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும், சற்று நேரத்தில் அவனை பரிதவிக்க விட்டதால்,
"ரூம்ல இருந்து ரெஸ்ட்டாரண்ட்க்கு வர வழி கூடவா தெரியாது நித்தி.. இங்க இருந்து ரூம்க்கு போகும் போது அப்படி என்னத்த பார்த்துக்கிட்டு வந்த.. இப்படி ஒன்னும் தெரியாமயே எவ்வளவு நாள் இருக்கறதா உத்தேசம்.. இப்படியே இருந்து என்னோட கழுத்தை அறுக்க முடிவு செஞ்சுட்டீயா?" என்று கோபத்தோடு கேட்டான்.
ஆனால் அவன் கேள்வியில் உண்மை இருந்தாலும், அவன் அதை கேட்ட விதம் அவளை மிகவுமே காயப்படுத்தியது.
தொடரும்..