உன்னோட கை காலாவது தேறுமான்னு பார்க்க வந்தேன்” முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு அவன் சொல்லவும், அவள் சிரித்து விட்டாள்.
“யாரு நீங்களா… நர மாமிசம் சாப்பிட போறீங்களாக்கும். ஒரு துண்டு கோழிக்கறிகூட சாப்பிட மாட்டீங்க. வேறு எதுக்கோ வந்துட்டு பொய் சொல்றீங்க”
“அதான் பொய்ணு தெரியும்துல்ல விட்டுட வேண்டியதுதானே”
“வேறு எதுக்கு…”
“இந்தாம்மா… சும்மா.. சும்மா கேட்டுகிட்டு… நான் எதையாவது உளறி வைக்க போறேன். கெட் லாஸ்ட்!”
“உளறலா… ம்… நான் அழகான கனவு கண்டுக்கிட்டு இருந்தேன் அதை கெடுத்துட்டு.” என்று புலம்பினாள். அவளே தொடர்ந்து,
“என்ன கனவு தெரியுமா? எங்கம்மா என்னோட தலைமாட்டில் உட்கார்ந்துகிட்டு என்னோட தலையை வருடிகிட்டு இருந்தாங்க. எவ்வளவு சுகமா இருந்திச்சு தெரியுமா?”
அடிப்பாவி அது கனவில்லை… நிஜம்… நிஜமாக அதுதான் நடந்துச்சு! அவனுக்கு இன்னொன்றும் சுருக்கென பட்டது. அது உண்மையில் அதிதியின் அம்மாவின் ஆவிதானா?
“இப்படி சந்தேகமா பார்த்தால்… நான் உண்மையதான் சொல்றேன். இந்த கனவு எனக்கு அடிக்கடி வரும். இங்கே இருக்கும்போது வரும். அதனால்தான் நான் இங்கேயே இருக்கணும்னு நினைக்கறேன்.”
இருந்திருக்கணும்… இருந்திருக்கலாமே! அவனுடைய வாழ்க்கை வரலாற்றில் அதிதி என்ற பெயரே வந்திருக்காதே! இப்படி நடு ராத்திரியில் பேயா.. பிசாசான்னு திகிலடைந்திருக்க மாட்டானே.
“அது சரி… உனக்குதான் உன்னோட அம்மாவை பிடிக்காதே.”
“எனக்கு என் அம்மா செஞ்சதுதான் பிடிக்காது. அம்மாவை பிடிக்கும். அவங்க நல்ல மனைவியாக இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் நல்ல அம்மா. அவ்வளவு பிரியமாக பார்த்துக்குவாங்க”
ரொம்ப நல்ல அம்மாதான்… பொசுக்குனு செத்து போயிட்டு… ஆவியாக வந்து அன்பு காட்டுறாங்களாக்கும்!
அதிரதனுக்கு ஒரு விசயம் புரிந்தது. அவனுடைய மூளை இந்த விசயத்தை ஒப்புக் கொள்ளவில்லை! ஆனால் மனம் அதை துளசி அத்தையின் ஆன்மாதான் என்று நினக்கிறது.
‘நோ… நோ… அப்படியெல்லாம் நம்பக் கூடாது… ஆவி எல்லோருடைய கண்களுக்கும் தெரியாது… ஆவிக்கு கதவை திறந்துட்டுதான் அறைக்குள்ளே போகணும்னு இல்லை! இது ஏதோ உருவம்! ஆராய்ந்து பார்க்கணும்!’ அவன் தீர்மானித்தான்!
தொடரும்