தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 07 - ரவை
பகுதி 5 ல், இங்கர்சால் மருத்துவ மனையிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்தோம்
இங்கர்சால் தன் கால்கள் போன போக்கிலே நடந்தார்!
சாலையில் காணப்பட்ட மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும், அவற்றை உபயோகித்து கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வதையும் பார்த்து மகிழ்ந்தார்.
சாலையின் இரு புறத்திலும் எத்தனை கடைகள்! நகைக்கடை, துணிக்கடை, ஓட்டல்கள், அனைத்திலும் எத்தனை மக்கள் வெள்ளம்!
ஒரு எட்டு மாடிக் கட்டிடம்! கழுத்து வலிக்க வலிக்க, இங்கர்சால் அண்ணாந்து பார்த்தார்.
'பிரும்மாண்டம்'
அந்த கட்டிடத்துக்கள், மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு, நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தனர்.
அப்படியென்ன அங்கு இருக்கிறதென தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், இங்கர்சால் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார்!
நுழைந்ததுமே, இடது புறத்தில் இருந்த லிஃப்டில் மக்கள் கீழிருந்து மேலே சென்றனர். வலது புறத்தில் இருந்த லிஃப்டில், மக்கள் மேலிருந்து கீழே வந்து வெளியேறினர்!
இங்கர்சால், படியேறி ஒவ்வொரு தளமாக வேடிக்கை பார்த்தார்!
அப்பப்பா! ஒவ்வொரு தளத்தில், வெவ்வேறு பொருட்கள்!
அத்தனை தளங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் பொருட்களை வாங்கினர்.
ஆமாம், அப்படியானால், எல்லோரிடமும் தாராளமாக பணம் புழங்குகிறது என்றுதானே பொருள்!
மக்களின் முகங்களிலும் மகிழ்ச்சி வழிந்தது!
ஒரு மணி நேரத்திற்கு மேலாக வேடிக்கை பார்த்துவிட்டு, இங்கர்சால் கடைக்கு வெளியே வந்தார்.
கடை வாசலிலே சிறு கூட்டம்! எட்டிப் பார்த்தார்! ஒருவர் அழுது கொண்டிருந்தார்!
விசாரித்ததில், அவரிடமிருந்த பர்சை யாரோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான். அந்த பர்சில், அவர் தன் மகளின் திருமணத்திற்கு நகை வாங்க, ஆயிரக் கணக்கில் பணம் வைத்திருந்தாராம்!
இரண்டு நாட்களில் நடைபெறவிருக்கும் திருமணம் தடைப்பட்டுவிடுமாம்!
ஒருமுறை திருமணம் தடைப்பட்டுவிட்டால், அதையே பெண்ணுக்கு விரோதமாக காரணம் காட்டி, வேறுயாரும் அவளை கல்யாணம் செய்துகொள்ள முன் வரமாட்டார்களாம்!
இங்கர்சாலுக்கு பரிதாபமாக இருந்தது!