தொடர்கதை - நல்ல முடிவு - 02 - ரவை
நிரஞ்சன் தன் மனைவியிடம் புரோக்கர் பிரபா சொன்ன செய்தியை குதூகலத்துடன் பகிர்ந்து கொண்டார்.
" கலா! நம்மைத் தேடி திருமகள் வீட்டுக்கு வரப் போகிறாள். அவளை வரவேற்க, தயாராயிரு!"
" இதப் பாருங்க! இப்படி எதைப்பற்றியும் முழுதாகத் தெரியாமல், அவசரப்பட்டு ஆனந்தப்படறதோ, கோபம் கொள்வதோ உங்க குணம்! அதை மாற்றமுடியாது........" "நேரம் காலம் தெரியாம, நீயும் வழக்கம்போல, என் உற்சாகத்தை அணைக்கத் தண்ணீர் ஊற்றாதே! நாம கோடீச்வரனாகப் போறோம். சந்தோஷமா?"
" அப்படியா! சரி, எப்படி, எப்போ, எவ்வளவு கோடிக்கு அதிபதி ஆகப்போறோம்?"
" உட்கார்! நாமும் இந்த வீட்டை, ஐந்து வருஷமாக ஐம்பது லட்சத்துக்கு விற்க தலைகீழே நின்னோமில்லே, எவனாவது வந்தானா? இப்ப, கிடைக்கப் போறது, ஐம்பது லட்சமில்லே, மூணேகால் கோடி! நம்பமுடியுதா?"
நிரஞ்சன் கலாவிடம் பிரபா சொன்னதை விவரமா தெரிவித்தான்.
" இப்ப என்ன சொல்றே?"
" கேட்க நல்லாத்தான் இருக்கு, நடக்கணுமே நாம நினைக்கிறமாதிரி!"
" நடக்கும், நடக்க வைக்கணும், வைப்பேன்!"
" உங்களுக்கு இன்னமும் மனுஷங்களை எடைபோடத் தெரியலே! வெளுத்ததெலாம் பால்னு நினைக்கிறீங்க, அதே நிறத்திலே சுண்ணாம்பும் இருக்கே....."
" என்ன சொல்றே?" "நீங்க மாசம் ஒருமுறை போடற மீட்டிங்குக்கே, மூணு பேர் தான் வராங்க! இருபது பேரையும் ஒண்ணா கூட்டுறது சுலபமான காரியமா?"
" அதுக்கு என்ன செய்யப் போறேன்னு கேள்! எல்லா ஓனருக்கும் வாட்ஸ்அப்பிலே மெசேஜ் அனுப்பிட்டு கூடவே போனிலே பேசப்போறேன். என் எதிர்பார்ப்பு என்னென்னு சொல்றேன். இங்கேயே இருக்கும் பத்து ஓனர்களை நேரிலேயே சந்தித்துப் பேசி சம்மதம் வாங்கிடறேன். மற்ற பத்து பேரும் எப்ப பிளாட்டை விற்கப்போறோம்னு ரெடியா இருக்காங்க, ஏன்னா அவங்க பிளாட்லே குடியிருக்கிறவங்க படுத்தற பாடு சகிக்கலையாம் என்ன சிக்கல் அவங்களுக்கு வரும்னா, குடியிருக்கிறவனை காலி பண்ணவைக்கிறது, அது சமாளிக்கக்கூடியதுதான். ஒரு லட்சத்தை வீசினால், பொறுக்கிண்டு ஓடிடுவாங்க!" " மற்றவங்களுக்கு முன்பு, நீங்க வீட்டை விற்க ரெடியா? இந்த இடத்திலிருந்து உங்க ஆபீஸ், என் ஆபீஸ், நம்ம பிள்ளையின் காலேஜ், நம்ம மகளின் ஹைஸ்கூல், கடைக் குட்டியின் ஆரம்பப் பள்ளி, கறிகாய் மார்க்கெட், மெட்ரோ ரயில், பஸ் ஸ்டாண்ட், கடைகள் யாவும் அருகாமையில் இருக்கிறது, அதனாலே கார், ஸ்கூட்டர், சைக்கிள் எதுவும் வாங்காமல் சமாளிக்கிறோம்.