தொடர்கதை - நல்ல முடிவு - 16 - ரவை
மறுநாள் காலைப் பொழுது புலர்ந்தது. நிரஞ்சன் அன்று செய்யவேண்டிய வேலையைப் பற்றி யோசித்தான்.
ஆம், இன்று ஓனர்கள் விருப்பப்படி, அவர்களுக்கு அட்வான்ஸ் இருபது லட்சம் வாங்கித்தர வேண்டும்.
அடுத்து, செட்டியார் விரும்பிய த்ரீ பெட் ரூம் வீடு தேடியாக வேண்டும்.
இப்படி மனதளவில், வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தபோது, போன் சிணுங்கியது.
எடுத்துப் பேசினான். செட்டியார்!
என்ன காலை நேரத்தில் போன் செய்கிறார் என யோசித்தவாறே, பேசிய நிரஞ்சனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது!
" நிரஞ்சன்! நேற்றிரவு என் அப்பன்,உச்சிப் பிள்ளையார் என் கனவில் வந்து, என் கண்களை திறந்து விட்டார்.
அவர் கேட்டார், "திருச்சியிலும், மதுரையிலும் இருக்கிற கடைகள் மட்டும் போதாதா? எதற்கு சென்னை யில் இன்னுமொரு கடை? பிள்ளையா, குட்டியா? உடனே சென்னையில் கடை துவக்கும் திட்டத்தைகைவிடு, மனை வாங்காதே!
பிறகு, மதுரை கடை கவனித்துக்கொள்ள நீ அங்கு அடிக்கடி போய்வர வேண்டி யிருக்கு! அலைச்சலும் ஓட்டல் உணவும் உன் உடலை பாதிக்குது, இப்பவே! அதனால், அந்தக் கடையை விற்க ஆவன செய்!
மூன்றாவது, திருச்சி கடையை கவனித்துக்கொள்ள ஒரு நம்பகமான நபரை தயார் செய்! ஒரே வருஷத்தில் அந்த நபரிடம் பொறுப்பை தந்து விட்டு, நீயும் உன் மனைவியும் வாழ்க்கையை அனுபவிக்கத் துவங்குங்கள்!
நாலாவது, திருச்சி கடையை கவனித்துக் கொள்ள நம்பிக்கையான நபர் உன் நண்பன் நிரஞ்சன் தான்! அவனை குடும்பத்துடன் திருச்சிக்கு வரவழைத்துவிடு!
அவனுக்கு தன் வேலையை ராஜினாமா செய்யவும் அதேபோல கலா தன் வேலையை விடவும் துணிவு வர, இப்போதே அவர்கள் பெயரில் அவர்கள் கேட்கும் பணத்தை தந்து திருச்சியில் அவர்கள் வசிக்க ஒரு வீட்டையும் வாங்கிக் கொடு!
உன் மனைவிக்கு இது மிகவும் பிடிக்கும். ஏனெனில், அவள்தான் என்னிடம் இதை சொல்லி உன் சம்மதம் பெற என்னை அருளச் சொன்னாள்" என்று என் அப்பன் உச்சிப் பிள்ளையார் கூறிவிட்டு மறைந்துவிட்டார்.
அதனால், சென்னை மனை வாங்கும் அக்ரிமெண்ட் தேவையில்லை. ஆடிட்டரிடம் சொல்லிவிடுகிறேன். நீயும் அங்கே வக்கீலிடம் சொல்லி விடு!