தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 23 - முகில் தினகரன்
ஒரு வாரத்திற்கும் மேலாய் பத்திரிக்கைகள் அனைத்தும் அந்தக் கோரச் சம்பவத்தைப் பற்றித் தத்தம் கற்பனைக்கேற்ப செய்திகளை வரிந்து தள்ளி ஓய்ந்திருந்த வேளையில்
சாம்பசிவமும் ஏ.சி.தீனதயாளும் நம்பூதிரியுடன் “விஸ்வா டவர்ஸ்” காம்ப்ளக்ஸின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தனர்.
வெளியேயிருந்த ரிசப்ஷன் சோபாவில் ராதிகா சோகமே வடிவாய் அமர்ந்திருந்தாள்.
“என்ன சாம்பசிவம் சார்...நீங்க அழைத்து வந்த நம்பூதிரி அய்யாவோட பேச்சுல உங்களுக்கே நம்பிக்கை வரலைன்னா எப்படி?” ஏ.சி.தீனதயாள் கேட்டார்.
“அப்படியில்லை...ஆனாலும்...” என்று சாம்பசிவம் இழுத்தார்.
“வேண்டாம் உங்க மனசுல இனி துளியும் அந்தப் பயம் வேண்டாம்!...எல்லா ஆவிகளும் தங்கள் காரியத்தை முடித்து விட்டு, ஆவியுலகம் நோக்கிப் பறந்து விட்டன!...சவங்களின் தவங்கள் முற்றுப் பெற்று விட்டன!....இனி இங்கு எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காது!...நான் உறுதி தருகிறேன்!” நம்பூதிரியே தன் வாயால் சொல்ல
அதைக் கேட்ட பின்னர் லேசாய் தைரியமடைந்த சாம்பசிவம் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார்.
சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த ஏ.சி.தீனதயாள் மெல்லக் கேட்டார் “ஆமாம்!...எங்கே...உங்க அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் பொண்ணு?..இன்னிக்கு லீவா?”
“அது...வந்து...அந்தப் பொண்ணு வேலையை விட்டு நின்னிடுச்சு சார்!”
“அடடே...ஏன்..பயந்திடுச்சா?”
“அதேதான் சார்!...தொடர்ந்து பல அசம்பாவிதங்கள் நடந்திட்டே இருந்ததுல அந்தப் பொண்ணு ரொம்பவே பயந்து போச்சு சார்!...அதான் ஒரேயடியாப் போயே போயிடுச்சு!”
சொல்லும் போது சாம்பசிவத்தின் முகத்தில் தெரிந்தது பீதியா?....இல்லை தர்ம சங்கடமா? புரியாமல் யோசித்த ஏ.சி. மெல்லக் கேட்டார்
“அந்தப் பொண்ணு பேரு என்ன சொன்னிங்க?”
“கல்பனா சார்!’
“ஊரு?”
“கேரளா!”ன்னு மட்டும் தெரியும் சார்...அதுக்கு மேலே எதுவும் தெரியாது!” என்ற சாம்பசிவம் சட்டென்று அந்தப் பேச்சை மாற்றும் விதமாய் “வர்ற புதன் கிழமை இந்த காம்ப்ளக்ஸ்ல ஒரு யாகம் நடத்த ஏற்பாடு பண்ணியிருக்கோம் சார்!...நம்ம நம்பூதிரி அய்யாதான் நடத்தப் போறார்...அதுல நீங்க கட்டாயம் வந்து கலந்துக்கணும் சார்!”