04. என் இனியவளே - பாலா
இளவரசனும் இனியாவும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இனியா தான் முதலில் அந்த மோன நிலையில் இருந்து வெளியே வந்தாள்.
அதே நேரத்தில் டாக்டர் ரவியும் அங்கு வந்து சேர்ந்தான். ரவி, “இளவரசன் இங்கு தான் இருக்கிறீர்களா, உங்கள் தம்பிக்கு போன் வந்துள்ளது. ரிஸப்சனில் கூறினார்கள். நீங்கள் அவரிடம் சொல்லி விடுகிறீர்களா” என கேட்டுவிட்டு சென்றான்.
இளவரசன் யோசனையில் ஆழ்ந்தான். இனியா இளவரசனிடம், “நான் அங்கு தான் செல்கிறேன். நான் சந்தரிடம் சொல்லிவிடட்டுமா? ” எனக் கேட்டாள்.
இளவரசன், “வேண்டாம்” என்றான்.
இனியா, “ஏன்” என வினவினாள்.
இளவரசன், “சந்துரு இங்கு மருத்துவமனையில் இருப்பது எனக்கு நெருங்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும், அவர்கள் யாருக்காவது சந்துருவிடம் பேச வேண்டும் என்றால் என் செல்போனில் பேசுவார்கள். அப்படியிருக்க மருத்துவமனை எண்ணிற்கு யார் அழைப்பது என்று யோசனையாக இருக்கிறது” என்றான்.
இனியாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. “யாராக இருந்தால் என்ன, போய் பேசினால் யார் என்று தெரிய போகிறது” என்றாள்.
“இல்லை இனியா. அப்படி விட முடியாது. சந்துருவின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணமோ அவள் தான் போனில் அழைக்கிறாள் என்று நான் நினைக்கிறேன்” என்றான்.
“ஓ அவர் காதலியாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா” எனக் கேட்டாள்.
அதற்குள் இளவரசன், “அவளை காதலி என்று கூறாதே, நச்சுப் பாம்பு என்று வேணுமானால்; அவளை கூறலாம்” என ஆவேசமாக கூறினான்.
“ஓ.கே. வாருங்கள். நாம் சந்தரின் அறைக்கு செல்லலாம். இல்லை வேறு யாரேனும் அங்கு சென்று போன் வந்துள்ளது என்று சொல்லிவிட போகிறார்கள்” எனக் கூறவே இருவரும் சந்தரின் அறைக்கு சென்றார்கள்.
இனியா சந்தரின் அறைக்கு சென்று சிறிது நேரம் அவள் தாயிடம் பேசிக் கொண்டிருந்தாள். இனியா கூறியபடியே ஒரு அட்டெண்டர் வந்து போன் வந்துள்ளதாக கூறினான்.
இதற்குள் சுதாரித்த இளவரசன் “ஆம் எனக்கு தான் இருக்கும். இதோ வருகிறேன்” எனக் கூறி சென்றான். இனியாவும் அவனை தொடர்ந்து சென்றாள்.
இளவரசன் ரிசப்ஸனிற்கு சென்று போனை எடுத்து யாரென்று வினவினான். ஆனால் அவனுக்கு பதில் கூறாமல் போன் வைக்கப்பட்டு விட்டது.
இளவரசனின் பின் வந்த இனியா என்னவென்று வினவினாள்.
“அவளாக தான் இருக்கும். என் தம்பியை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது அவளுக்கு போதவில்லை போலும். அதனால் தான் அவளுடைய நண்பர்களை அனுப்புகிறாள். இப்போது போன் செய்கிறாள். அவளை என்ன தான் செய்வதோ என பேசிக் கொண்டே போனவன், இனியாவிடம் சந்துருவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகலாம் தானே, ஏனெனில், இது பொது இடம், அவள் இங்கு நேராகவே வந்து விட்டாலும் ஒன்றும் செய்ய இயலாது. அவளை தடுக்க இயலாமல் போனாலும் போய் விடும். அதனால் தான் கூறுகிறேன்” என்றான்.
இனியாவும் யோசித்து விட்டு, “அழைத்துக் கொண்டு போங்கள். நேற்றைக்கு சந்தர் இன்று எவ்வளவோ நன்றாக உள்ளார். தற்கொலை செய்ய முயன்றோம் என்பதை மறந்து இலகுவாக பேச ஆரம்பித்து விட்டார். நல்ல முன்னேற்றமாக தான் உள்ளது” என்றாள்.
“சரி நான் போய் டாக்டர் ரவியிடம் சென்று டிஸ்சார்ஜ் செய்வதை பற்றி பேசிவிட்டு வருகிறேன்” என கூறி இளவரசன் சென்றான். இனியாவும் அவள் வேலையை பார்க்க சென்றாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் இளவரசன், சந்தர், அவர்களின் தாய் அனைவரும் இனியாவை பார்க்க அவள் அறைக்கே வந்து விட்டனர்.
சந்தர் தான் முதலில் பேச ஆரம்பித்தான். “நான் போய் வருகிறேன் மேடம், இனி நீங்கள் என் இடைஞ்சல் இல்லாமல் உங்கள் வேலையை கவனிக்கலாம்” எனக் கூறினான். இவ்வாறு சிறிது நேரம் வேடிக்கையாக பேசி விட்டு சென்றான்.
பின்பு இளவரசனும் இனியாவிடம், “சந்துரு மனதளவில் இவ்வளவு சீக்கிரம் இந்த அளவு முன்னேறியது உங்களால் தான். நாங்கள் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்” என கூறினான்.
இனியா, “என்ன இது ஏதேதோ பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசுகிறீர்கள். நான் என் வேலையை தான் செய்தேன். இதற்கு எதற்காக இவ்வளவு பெரிய வார்த்தைகளை எல்லாம் பேசுகிறீர்கள”; என கூறினாள்.
“நீங்கள் உங்கள் பெருந்தன்மையால் அவ்வாறு கூறுகிறீர்கள். நான் நேற்று உங்களிடம் நடந்து கொண்ட முறையையும் மறந்து எங்களுக்கு மிக பெரிய உதவி செய்திருக்கிறீர்கள். நான் நேற்று நடந்து கொண்ட முறைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்” எனக் கூறினான்.
“என்ன இது, ஏன் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள். நீங்கள் என்னை யாரோவென்று எண்ணி தானே திட்டினீர்கள். அதை நான் எப்போதோ மறந்து விட்டேன். தயவு செய்து நீங்களும் அதை மறந்து விடுங்கள்” எனக் கூறினாள்.
இளவரசனின் தாயாரோ இனியாவின் கையை பிடித்து நன்றி கூறி கண்கலங்கினார்.
இனியா, “என்னம்மா ஏன் இவ்வாறு கண் கலங்குகிறீர்கள்” எனக் கேட்டாள்.
“இல்லைம்மா கொஞ்ச நாளாகவே சந்துரு சரியில்லை, அவன் இப்படி மனம் விட்டு பேசி எவ்;வளவு நாளாகிறது தெரியுமா, எல்லாமே உன்னால் தான். ரொம்ப நன்றிம்மா” எனக் கூறினார்.
இனியா “அம்மா இப்படி எல்லாம் பேசாதீங்க. நீங்க எல்லாரும் ஒத்துக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், நான் என் கடமையை தான் செஞ்சேன். அதனால் எனக்கு தனியா நன்றி எல்லாம் சொல்லாதீங்க” என்று கூறினாள்.
“சரிம்மா, நாங்க கிளம்பறோம். உன்னால முடிஞ்சா அப்பப்ப எங்க வீட்டுக்கு வந்துட்டு போ. என் பையன் கிட்ட நீ கொஞ்சம் பேசிட்டு இருந்தா அவனும் கொஞ்சம் தெளிவான். எனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும”; என்று கூறிவிட்டு சென்றார்.