09. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ்
கீர்த்தி கன்னத்தில் கை வைத்துக் கண்மூடிக் கிடந்தாள்.கன்னத்தில் கண்ணீர்க் கோடு கோடாய் இறங்கிக் கொண்டிருந்தது. சுவரில் சாய்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தீபக். ரொம்பப் பயந்து விட்டிருந்தாள் கீர்த்தி.
“அதான் ஒண்ணும் பயப்பட வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டாங்கள்லே அப்புறம் ஏன் அழுதுக்கிட்டிருக்கீங்க?” என்றான் கீர்த்தியைப் பார்த்து.
கீர்த்தி மௌனமாக இருந்தாள். கொஞ்சம் சூழ்நிலையை லேசாக்க தீபக்
“ வாங்க கீழே போய் ஒரு கப் காபி குடித்து விட்டு வரலாம்……..இப்போ எனக்கு மயக்கம் வரும் போல டையர்டாக இருக்கு “ என்றான்.
கீர்த்திக்கும் ஏதாவது குடித்தால் நன்றாகயிருக்கும் போலிருந்தது. ஒன்றும் சொல்லாமல் எழுந்து கொண்டாள். மெதுவாக அம்மாவின் அறையை எட்டிப் பார்த்தாள்.
“அம்மாவை எப்படித் தனியாக விட்டுப் போவது…….நீங்க வாங்கிட்டு வர்றீங்களா?....நான் அம்மாகிட்டே இருக்கேன்……”
“ஒண்ணும் பிரச்னையில்லை …இதோ இப்போ வரேன்…..”
என்று நடந்தவன் அம்மாவுக்கு ஃபோன் பண்ணி நான் வீட்டுக்கு வர லேட்டாகும் என்று சொல்லி விடலாம்னு நினைத்தவன் ஃபோனை எடுக்கும் முன் மணியடித்தது…….சுபாக்காதான்.
“ என்ன தீபக்? இன்னும் வீட்டுக்கு வர்லை? அம்மா ரொம்ப நேரமா டென்ஷனாகிட்டு இருக்காங்க……”
“சுபாக்கா இங்கே ஒரு பிரச்னை………நான் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும்….அம்மாகிட்டே சொல்லிடுக்கா…..”
“என்னடா……. என்ன பிரச்னை?”
“ வீட்டுக்கு வந்து சொல்றேங்கா………”
என்றவாறு கீழே போனான். காபி வாங்கிட்டு வந்தவன் வாசலில் நின்று மெல்ல எட்டிப் பார்த்தான். கீர்த்தி அம்மாவின் தலையை நெஞ்சோடு வைத்துக் கொண்டு தலையைக் கோதி விட்டுக் கொண்டிருந்தாள்.
‘இந்தப் பெண்கள்தான் எப்படி இப்படிப் பாசத்தைக் கொட்டுகிறார்கள்…….அம்மாவுக்கு ஏதாவது ஆகியிருந்தால் இந்தப் பெண் என்ன ஆகியிருப்பாள் ……..மெல்ல அவள் கையை விலக்கி அம்மாவுக்கு ஒன்றுமில்லை….நீங்க கவலைப் படாதீங்க’ என்று கீர்த்தியின் கலைந்த முடிக் கற்றைகளை ஒதுக்கித் தலையைக் கோதிவிட வேண்டும் போலத் தோன்றியது.
‘சீ …என்ன இப்படியெல்லாம் நினைக்க ஆரம்பித்து விட்டேன்’ என்று தலைய உலுக்கி விட்டு …. “ அம்மாவைத் தூங்க விடுங்க……..நீங்க வாங்க….இந்தக் காபியைக் குடிங்க என்று கோப்பையை நீட்டித் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
ரெண்டு பேரும் ஒன்றும் பேசாமல் காபியைக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
“உங்களுக்குத் துணைக்கு யாரையாவது கூப்பிட்டிருக்கிறீர்களா?.....ராத்திரிக்குச் சாப்பாடு வாங்கிட்டு வந்துரவா?”
“இல்லிங்க நான் பார்த்துக்குறேன்…நீங்க கிளம்புங்க………கீழே கான்டீன்லே பார்த்துக்குறேன்.”
“யார் வர்றாங்க துணைக்கு….?”
கீர்த்தி மௌனமாக இருந்தாள்.
“அப்பா ஊர்லே இல்லியா?”
“அப்பா இல்லே……இறந்துட்டாங்க…இங்கே நானும் அம்மாவும்தான்…….சொந்தக் காரங்க எல்லாம் தூத்துக்குடியில் இருக்காங்க………..நான் பார்த்துக்கிறேன்…..நீங்க கிளம்புங்க….”
கீர்த்தி அவசரப் படுத்தவே …” இந்தாங்க என் நம்பர்…….வேறெ ஏதாவது உதவி வேனும்னா சொல்லுங்க…..அவசரம்னா இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க…….”
ரெண்டடி எடுத்து வைத்தவன் ஏதோ நினைவுக்கு வந்தவன் போல மெல்ல அருகில் வந்து
“கோவிலுக்குன்னு கிளம்பி வந்துருப்பீங்க………….பணம் வச்சுருக்கீங்களா…..”
“பணம் கொண்டு வரலை…கார்ட் இருக்கு……கொஞ்சம் அம்மாவைப் பார்த்துக்கிறீங்களா……நான் போய் ஏடி எம்மில் பணம் எடுத்து வந்து விடுகிறேன்…..”
“அய்யோ இந்த இருட்டுக்குள்ளே எப்பிடி நீங்க போய் ஏ டி எம் தேடிப் போய் எடுத்துக்கிட்டு வரப் போறிங்க?....கார்டைக் கொடுங்க நான் போய் எடுத்துக்கிட்டு வர்றேன்….என்றவன்……’முன்னே பின்னே தெரியாதவன் கிட்டே எப்பிடிக் கார்டைக் கொடுப்பாள் ‘ என நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டு
“கொஞ்சம் இருங்க…” என்று கொஞ்சம் தள்ளி நின்ற வார்ட் பையனிடம் போய் ஏதோ கேட்டுவிட்டு
“ கீழே இறங்கி மெயின் வாசலுக்குப் பக்கத்துலே இருக்கு ஏ டி எம்…….நீங்க போய் எடுத்துக்கிட்டு வாங்க…நான் அம்மாவைப் பார்த்துக்கிறேன்” என்றான்.
கீர்த்தி மெலிதான ஒரு புன்னகையுடன் வேகமாக அவன் காட்டிய திசை நோக்கி நடந்தாள். திரும்பி வரும் போது வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்தாள்.
“ஒண்ணும் பயப்பட வேண்டியதில்லை……டாக்டர் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லிருக்காங்க…….என்ன… இவ்வ்ளோ பதட்டமா இருக்கீங்க…நான் வேணா வீட்டுலேருந்து அக்காவைக் கூப்பிடட்டுமா…துணைக்கு?”
“இல்லை..இல்லை…..நான் பார்த்துக்கிறேன்” என்றாள் பதட்டம் அடங்காமலேயே.
திடீரென்று……..தீபக் கீர்த்தியின் கையை மெல்லப் பிடித்துக் கொண்டு
“நான் இருக்கேன்…ஏதாவது பிரச்னைன்னா கால் பண்ணுங்க…..” என்றவாறு கிளம்பினான்.
தீபக்குக்கு கீர்த்திக்குத் துணையாக அங்கேயே இருந்துவிடலாம் போலிருந்தது…..நான் துணைக்கு இருக்கட்டுமா என்று கேட்டால் அசடு வழியறானேன்னு நினைத்து விடுவாளே என்றுதான் கேட்கவில்லை.
கீர்த்திக்கு ‘என்ன இப்பிடி வீக் ஆக இருக்கிறோம்…..அம்மாவுக்கு எவ்வ்ளோ தைரியம் சொன்னவள் இன்னிக்கு இப்பிடி சமாளிக்க முடியாமல் திணறியதை நினைத்து வெட்கமாக இருந்தது. அட…… அவர் பேரைக் கூடத் தெரிஞ்சுக்கலை……ஒரு நன்றி கூடச் சொல்லத் தெரியாமல் இப்படி அசட்டுப் பிசட்டென்று இருந்திருக்கிறோமேயென்று நினைத்தாள் கீர்த்தி.
பொதுவாக ஆண்கள் இப்படியெல்லாம் அக்கறையுடன் இருப்பதைப் பார்த்ததில்லை கீர்த்தி. ஆண்களின் இயல்பே அடக்குவதுதானென்று நினைத்திருந்தாள் கீர்த்தி. இப்படிக் கூட ஒருவரால் உதவ முடியுமா?......என்று வியந்து கொண்டிருந்தாள் கீர்த்தி.
தீபக் ‘அம்மா தேடுவாங்களே என்ற நினைப்பில் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக ஓட்டிக் கொண்டு போகும் போதுதான் நினைவுக்கு வந்தது ‘அடப்பாவி அவங்க நம்பரைக் கூட வாங்கவில்லையே ….இனி எப்பிடிக் கனெக்ட் பண்ணுவது என்று தன் மீதே எரிச்சலாக வந்தது. அட அம்மா உடம்புக்கு நல்லாருக்கான்னு கூடக் கேட்க முடியாதே……………நாளைக்கு முதல் வேலையாக ஆஸ்பத்திரிக்குப் போய் அவங்க அம்மாவுக்கு எப்பிடி இருக்குன்னு கேட்டுவிட்டு நம்பர் வாங்கிர வேண்டியதுதான்’ என நினைத்துக் கொன்டான்.
‘எவ்வ்ளோ டீஸன்ட்…….உதவிக்கு தன் நம்பரைக் கொடுத்தவர்……என் நம்பரைக் கூட வாங்கிக்கலை…சே ………ஜெம் ஆஃப் அ பெர்சன். என நினைத்துக் கொண்டாள் கீர்த்தி.
கேட்டைத் திறக்கும் போதே சுபாக்கா, கௌஸி, அம்மா மூவரும் ‘என்ன பிரச்னையோ என வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தனர்.
தீபக் நடந்ததைச் சொல்லி முடித்தவுடன் ..”செய்யற வேலையைத் திருந்தச் செய்யக் கூடாதா தீபக் “ என்றார்கள் அம்மா.
“என்னம்மா”
“அந்தப் பொண்ணு யாருமில்லைன்னு சொன்னப்புறமும் இப்பிடி எனக்கென்னன்னு விட்டுட்டு வந்துருக்கியேடா……….ஃபோனைப் போடு…..அம்மாவைக் கொண்டு வந்து விடட்டுமான்னு கேளு”
“ப்ச்….அந்தப் பொண்ணுக்கு நம்பர் கொடுத்தேன்….நான் வாங்கிக்கலைம்மா……”
“நல்ல பிள்ளைதான் போ……”
“இனி அந்தப் பொண்ணு கூப்பிட்டாதான் உண்டு….”
ஏதோ பெரிய சாதனை செய்தது போல மனசு நிறைந்திருந்தது தீபக்குக்கு…..அது முகம் தெரியாதவர்களுக்கு உதவியதாலா……..அல்லது கீர்த்தி ஏற்படுத்திய அலைகளாலா என்பது புரியாமலேயே…………..தூங்கிப் போனான் தீபக்.
காலையில் விழித்தவுடன் நினைவுக்கு வந்த கீர்த்தியை உடனே பார்க்க வேண்டிய அவசரத்துடன் வேக வேகமாகக் கிளம்பிய தீபக்கைப் பார்த்து
“என்னடா இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமையும் ஆஃபீஸுக்குப் போகணுமா……என்ன….? “என்ற அம்மாவின் கேள்வி தீபக்கைச் சட்டென்று இந்த உலகத்துக்கு இழுத்து வந்தது.
‘அட ஞாயிற்றுக் கிழமையைக் கூட இப்படி மறக்கடிக்கும் படி அப்படி என்ன ஒரு ஈர்ப்பு அந்தப் பெண்ணிடம் என்று சே…..எனத் தலையில் தட்டிக் கொண்டான் தீபக்.
அம்மா பதிலுக்குக் காத்திருப்பது நினைவுக்கு வர “இல்லேம்மா ஒரு ஃப்ரெண்டைப் பார்க்கணும்மா……” என்றான்.
“டிங்க் “ என்ற ஒலியோடு வந்த செல் மெஸேஜைப் பார்த்தான் தீபக்.
“Sorry …did not even thank you yesterday.Mummy discharged.reached home.Thank you so much. Kirti”
நம்பர் கிடைச்சுதே என்று சந்தோஷப் படுவதா…….இல்லை கீர்த்தியை இப்போ பார்க்க முடியாதே என வருத்தப் படுவதா……என சோஃபாவில் படுத்தவனைப் பார்த்து
“என்னடா…ஃப்ரெண்டைப் பார்க்கப் போகலையா…….” என்றார்கள் அம்மா.
என்ன பதில் சொல்வதென்று அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான் தீபக்.
…
தொடரும்
{kunena_discuss:678}