சாதனா எத்தனையோ முறை இதை மனதில் நினைத்திருக்கிறாள்! ஆனால், ஏனோ ப்ரியாவிடம் இதை நேராக சொல்ல முடிந்ததில்லை... இப்படி ஏதாவது சொன்னால் ப்ரியாவின் முகம் இன்னும் வாடிப் போகும்... ஏன் என்னவென்று புரியாமல் அவள் தான் மேலும் குழம்ப வேண்டி இருக்கும்... எதற்கு அந்த வம்பு?
ஆனாலும் பொட்டில்லாத அந்த நெற்றியும், ஒளி இல்லாத அந்த கண்களும் சாதனாவின் மனதை கொஞ்சம் அசைத்தது,
“தப்பா எடுத்துக்காதீங்க ப்ரியா... நேத்து இரண்டு ரோஸ் வாங்கினேன்... இன்னைக்கு வைக்கலைனா வேஸ்ட் ஆகிடும்... ஒன்னை நீங்க வச்சுக்குறீங்களா?”
ப்ரியாவின் முகம் சட்டென இருண்டது...
“உங்களுக்கு தான் தெரியுமே சாதனா... ப்ளீஸ் எனக்கு வேண்டாம்...”
ப்ரியா ஒரு விதவை என்பதற்கு மேல் சாதனாவிற்கு எதுவும் தெரியாது! ஆனால் இந்த காலத்திலும் இப்படி இளவயதிலேயே கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக, பொட்டு வைக்காமல், பூ வைக்காமல் இருக்கும் ப்ரியாவின் நடவடிக்கை சாதனாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை! ஆனால், அவளுக்கு ப்ரியாவிடம் அதை பற்றி விவாதிக்கவும் மனம் வரவில்லை... எனவே, அதற்கு மேல் ப்ரியாவை வற்புறுத்தாது, ஒரு போலி புன்னகையுடன் அங்கே இருந்து கிளம்பினாள் அவள்...!
சாதனா வெளியே சென்று விட்டதற்கான அறிகுறியாக கதவு திறந்து மூடும் ஓசை கேட்டது... தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்த இயலாமல் தடுமாறிய ப்ரியா, மொபைலில் சற்று முன் நிறுத்தி வைத்திருந்த இடத்திலிருந்து பாடலை பாட விட்டு விட்டு, நாற்காலியில் சாய்த்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்...
உயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள் ஒரு நாளாவது மகிழ்ந்திருப்பாள்,
உலவும் காற்றாய்ப் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பாள்,