மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 49 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“கிளம்பலாமா அஹல்யா?” சத்யா அஹல்யாவின் போர்ஷன் பக்கம் எட்டிப் பார்த்துக் கொண்டு கேட்டாள்!
நடந்து வந்த அஹல்யா வாட்சை பார்த்தாள். நேரம் ஏழு தாண்டி இருந்தது.
“போகலாம் சத்யா,” என்ற அஹல்யா கதவை தாளிட்டு பூட்டினாள்.
அஹல்யாவின் ஸ்கூட்டியில் இருவரும் பயணமானார்கள். அஹல்யாவிற்கு அந்த வீட்டிற்கு போவது பிடிக்கவில்லை. இரண்டாவது மொட்டைக் கடிதம் வந்ததில் இருந்தே அவளுக்கு மனதுள் பயமாக இருந்தது. யார் அவளை இப்படி பின்தொடர்த்து தொல்லை செய்வது, என்ற கேள்வி அவளை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது!
அபினவ் வேலையில் பிஸியாக இருந்ததால் அவளை பார்க்க வரவில்லை. அவனிடம் இரண்டாவது கடிதம் பற்றி சொல்லி அவனையும் குழப்புவதா வேண்டாமா என்று வேறு அவளுக்கு கவலையாக இருந்தது.
“என்ன அஹல்யா அமைதியா இருக்கீங்க? நீங்க எப்படி தான் டீச்சர் ஆனீங்கன்னு தெரியலை!” சத்யா அவர்கள் நடுவே நிலவிய அமைதியை உடைக்க கேட்டாள்!
அஹல்யா மெல்ல தலையை ஆட்டினாள்!
“நான் எங்கே டீச்சர் ஆகனும்னு நினைச்சேன். இந்த வேலை தான் கிடைச்சது!”
“வேற எந்த வேலை உங்களுக்கு பிடிக்கும்?”
நடிக்கப் போகிறேன் என்று அடம் பிடித்து சுற்றிய நாட்கள் அஹல்யாவின் நினைவிற்கு வந்து மனம் கசந்தது.
“என்னங்க டீச்சர் எந்த கேள்வி கேட்டாலும் இவ்வளவு நேரம் யோசிக்குறீங்க?”