தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 36 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் காரை ஓட்டிய விக்கிராந்தின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. முகமே தெரியாத அந்த மனித மிருகத்தின் மீது அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. அவனை எல்லாம் மனிதன் என்று சொல்வதே மனித குலத்திற்கு இழுக்கு!
ப்ரியாவை நினைத்தவனின் மனம் அவளுக்காக உருகியது.
பார்க்கும் போதே மனதில் ஒரு மென்மை உணர்வை தருபவள் அவள். பூவை போன்ற மென்மையானவள்.
செடியில் அழகாக பூத்து நிற்கும் மலரை பறித்து பிய்த்து நாசமாக்கும் குரங்கை போல...
அதற்கு மேல் நினைத்துக் கூட பார்க்க முடியாமல் அவனிற்கு வலித்தது!
இத்தனையும் மனதில் பூட்டி வைத்து, புழுங்கி எப்படி துடித்திருப்பாள் அவள்!
நட்பு, உறவு என யாரிடமும் பேசாமல் ஒதுங்கி, தன்னந்தனியாக எத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கிறாள்? அந்த தனிமையே அவளை கொல்லாமல் கொன்றிருக்குமே!
நினைக்க நினைக்க கோபம், அன்பு, பரிவு என கலவையான உணர்ச்சிகள் அவனை தாக்கின.
ஏதேதோ நினைத்து மருகி, குழம்பி, பின் ஒருவாறு அவன் வீட்டை அடைந்தப் போது நேரம் நடுநிசியை தாண்டி இருந்தது.
அழைப்பு மணி ஸ்விட்சை அவன் அழுத்தும் முன்பே கதவு திறந்தது!
“என்ன விக்கி இது? எவ்வளவு நேரமா மொபைல்ல ரீச் செய்ய ட்ரை செய்றேன்? ஃபோனை எடுக்க கூடாதா?”
ராஜமிற்கு பதில் சொல்லாமல் அமைதியாக சென்று ஹாலில் இருந்த ஷோஃபாவில் அமர்ந்தான் விக்கிராந்த்.