05. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா
பதறிக்கொண்டு எழுந்தமர்ந்தாள் அர்ச்சனா. கண்கள் அவசரமாய் அப்பாவை தேடின. தான் பெங்களூரில் இருக்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவளுக்கு.
தலைக்குள்ளே யாரோ பாராங்கல்லை வைத்து மூடிவிட்டது போல் ஒரு அழுத்தம்.
அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாயில் கவிழ்த்துக்கொண்டாள் அர்ச்சனா.
அந்த கனவு மறுபடியும் அவள் மனதில் ஓடியது.
"ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கிறார் அப்பா. அவரை நடுக்கூடத்தில் கிடத்துகிறார்கள். துடிக்கிறாள் அவள். நிலைதடுமாறி, கதறி, உடைந்து........ அப்போது ஒரு கரம் அவள் தோளை அணைத்து தேற்றுகிறது. அழுதுக்கொண்டே இருக்கிறாள். அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டுகிறது ஒரு கை.
அவ்வளவுதான். விழித்துகொண்டு விட்டிருந்தாள்.
கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
அந்த கனவில் அவள் கண்ணில் தெளிவாய் தெரிந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று அப்பாவின் முகம், இன்னொன்று தண்ணீர் பாட்டிலை நீட்டிய கையில் இருந்த கைக்கடிகாரம் .ஏனோ அந்த கைக்கடிகாரம் அவள் கவனத்தில் அப்படியே நின்றது.
அந்தக்கனவு பலித்து விடுமா?
மணி ஐந்தை தொட்டிருந்தது. அப்பாவை அழைத்து பேச வேண்டும் போல் இருந்தது. "நல்ல உறக்கத்தில் இருப்பாரே. சிறிது நேரம் போகட்டும்."
மறுபடி தலையணையில் முகத்தை புதைத்துகொண்டாள். மனம் அழுந்தியது. "அந்த கனவு பலிக்குமா?"
காலை ஆறரை மணிக்கு குளித்து முடித்து வெளியே வந்து அப்பாவை அழைத்தாள். அவரது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. 'நான்கைந்து முறை முயன்றும் அதே செய்தி 'switched off'
உள்ளம் பதற துவங்கியது நேற்று இரவு கூட அப்பாவுடன் பேசவில்லையே!
வீட்டு 'லேன்ட் லைன்' கிடைக்கவில்லை அதுவும். அவள் அங்கிருந்து கிளம்பிய நாளிலிருந்தே வேலை செய்ய வில்லையே அது.?
எட்டரை மணி வரை. முயன்றாகிவிட்டது. எந்தப்பயனுமில்லை
அவளது கைப்பேசி தனது சார்ஜை சுத்தமாய் இழந்து விட்டிருந்தது.
அலுவலகத்துக்கு செல்ல நேரமாகிவிட்டது. கையில் சார்ஜரையும் எடுத்துக்கொண்டு கீழேயிறங்கினாள்.
'அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்ககூடாதே' மனம் திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தது
வீட்டு வாசலில் காருடன் காத்திருந்தான் வசந்த்.
கார் நகர துவங்கியதுமே கேட்டான் ' ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?
'அப்பாகிட்டே பேசணும்.மொபைலும் switched off. லேண்ட்லைனும் வேலை செய்யலை" 'என்னமோ மனசே சரியில்லை'
'வேற நம்பர் எதுவுமே இல்லையா ?' என்றான் வசந்த்
அப்போதுதான் சட்டென நினைவுக்கு வந்தது. இன்னொரு கைப்பேசி இருக்கிறதே. அது அவள் முன்பு பயன்பபடுத்திக்கொண்டிருந்த எண்.
ஒரு நிமிஷம் ''உன் மொபைல் குடு வசந்த் ப்ளீஸ்'
அந்த எண்களை ஒற்றினாள். அடுத்த சில நொடிகளில் ஒலித்தது.
'இறைவா..........அப்பா எடுத்து விடவேண்டும்'.
எடுத்து விட்டிருந்தார் அப்பா. உயிர் திரும்பியது அவளுக்கு.
'அப்பா என்னாச்சுப்பா? காலைலேருந்து ட்ரை பண்றேன் உங்களுக்கு'?
''செல்லை தொலைச்சுட்டேன்மா நேத்து' என்றார் நிதானமாய்.
'அவ்வளவுதானேபா? உடம்புக்கு ஒண்ணுமில்லையே? நீங்க நல்லா இருக்கீங்க இல்ல? சாப்பிட்டீங்களாபா? என்னமோ மனசே சரியில்லைப்பா நீங்க நல்லா இருக்கீங்களாபா?' திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
மெல்ல திரும்பி அவளைப்பார்த்தான் வசந்த். 'அவள் முகத்தில் எத்தனை தவிப்பு? எத்தனை பாசம்?' அவள் அப்பாவின் மீது சின்னதாய் ஒரு பொறாமைக்கூட முளைத்தது.
'எல்லாவற்றுக்கும் கொடுத்துவைத்திருக்க வேண்டுமோ?'
'எனக்கு ஒண்ணுமில்லைமா, ஏன் இப்படி பதறிப்போறே? இப்பதான் இந்த மொபைலைத்தேடி எடுத்து சார்ஜ் போட்டேன்' என்றவர், கேட்டார் அடுத்தக்கேள்வியை,
'யார் நம்பர்லேருந்துமா பேசறே? புது நம்பரா இருக்கு?
திடுக்கென்றது அவளுக்கு.
எதிர்பார்க்கவில்லை அந்தகேள்வியை .பதற்றத்தில் அவன் கைப்பேசியிலிருந்து அழைத்தாகி விட்டது. இப்போது அப்பாவிடம் பொய் சொல்வதா?
"இல்.... இல்லப்பா இது ஆபீஸ்...இல்லப்பா இது friend நம்பர்பா '
'யாருமா? புது friendaa? பேரென்னமா?
'பேரு....அது.... அது வந்துப்பா... என் மொபைல்ல சார்ஜ் இல்லைப்பா போட்டுட்டு கூப்பிடறேன்' துண்டித்து விட்டாள் அர்ச்சனா.
கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா. 'ஏன் இப்படி தடுமாறுகிறாள் அர்ச்சனா?'
அழைப்பை துண்டித்து விட்டு, திரும்பி அவனிடம் கைப்பேசியை நீட்டிய போது.....
பகீரென்றது அவளுக்கு. அவன் கையில் இருந்தது அது. அந்த கைகடிகாரம். அவள் கனவில் வந்ததே அதே ...அதே போன்றதொரு கைக்கடிகாரம்.
அதிர்ந்து நடுங்கியேப்போனாள் அர்ச்சனா. கனவில் கண்டது அப்படியே கண்முன்னால் வந்து நிற்கிறதே! அப்படியானால் என் கனவு பலித்துவிடுமா?
நாள் முழுவதும் அந்த வாட்ச்சே அர்ச்சனாவை படுத்திக்கொண்டிருந்தது. அவன் கையை பார்க்கும் போதெல்லாம் திடுக்கென்றது. மாலை காரில் வரும்போதும் குழப்பம். அவள் கண்கள் அந்த வாட்சின் மீதே இருந்தது.
'சொல்லலாமா வசந்திடம். அந்த வாட்சை கழற்றிவிடு என்று சொல்லிவிடலாமா?
'அபத்தமாக யோசிக்கிறேனே? தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். சாதாரண கனவு. அதற்கு ஏன் இத்தனை அலட்டிக்கொள்கிறேன்? 'என் அப்பாவின் உயிரென்ன அந்த வாட்சிலா இருக்கிறது?' கனவு பலிப்பதும், பலிக்காததும் அந்த வாட்சை வைத்தா இருக்கிறது?.
அறிவு சொல்வது எதையும் மனம் கேட்பதாக இல்லை. கண்கள் மறுபடியும் அந்த வாட்சின் மீதே சென்று நின்றது.
மாலை ஏழு மணி. அப்பா கைப்பேசியை எடுத்தார். காலை அர்ச்சனா அழைத்த எண்ணை மறுபடி பார்த்தார். அர்ச்சனா ஏன் அத்தனை தடுமாறினாள்?
சந்தேகம் பிறந்தது .ஒரு வேளை இது வசந்தின் எண்ணாக இருக்குமா? அழைத்து பார்த்துவிடலாமா?
அந்த எண்ணை அழுத்தினார் அர்ச்சனாவின் அப்பா.
திரையில் ஒளிர்ந்த எண்ணைக்கூட பார்க்காமல், தொலைக்காட்சியில் பார்வையை பதித்தபடியே 'ஹலோ' என்றான் வசந்த்.
கைப்பேசியில் காதில் வைத்தப்படியே மௌனமாய் அமர்ந்திருந்தார் அப்பா. ''அவன் குரல் தானே அது? அவன் குரலே தான் என்று தோன்றியது.