13. காதல் பயணம்... - Preethi
வாசலில் வாழை மரங்கள் கட்டி செழுமையாக உயர்ந்து நிற்க, நுழைவாயில் தாவணி பெண்கள் மலர்ந்த முகத்தோடு சந்தனம் குங்குமம் தந்து, பன்னீர் தெளித்து வரவேற்றனர். ஒரு பெண் பன்னீர் தெளிக்க, ஒரு பெண் சந்தனம் குங்குமம் தர, ஒரு பெண் வருவோரை வணங்கி வரவேற்க, இதை அனைத்தையும் அவ்வப்போது மேற் பார்வை இட்டார் அர்ஜுனின் தந்தை வெங்கட்.
வந்த விருந்தினர் எல்லாம் தங்களுக்குள் பேசியபடியே மேடையில் நடப்பவையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். திருமணத்திற்கு வந்த வாண்டு கூட்டமெல்லாம் திருமணத்தின் மூலம் கிடைத்த புது துணிகள், பள்ளியின் விடுமுறை போன்ற சந்தோஷத்தால் துள்ளி குதித்து ஆடினர். தன் வயதொத்தவரோடு சேர்ந்து வாண்டுகள் எல்லாம் ஆட, தாய்மார்கள் எல்லாம் தங்களுக்குள் பேசியபடியே ஓர கண்ணால் குழந்தைகளை கவனித்து கொண்டிருந்தனர். வெள்ளை வேட்டி சட்டையில் மடிப்பு கலையாமல் அமர்ந்திருக்கும் பெரியவர்கள் ஒருபுறம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்மணியின் நகைகளை ஓரகண்ணால் பார்த்துவிட்டு கழுத்தில் அணிந்திருக்கும் சங்கலியை வெளியே தெரியுமாறு எடுத்து விட்டுக்கொள்ளும் பெண்மணிகள் ஒருபுறம், தூரத்து சொந்தத்தில் கல்யாணம்... வந்து யாரை தெரியும் என்று வீட்டில் சண்டை போட்டு தோற்று போனாலும் அதன் மூலம் அடித்த அதிஷ்ட்டதால் மண்டபத்தில் உலாவும் பெண்களை தெரியாமல் சைட் அடிப்பதை மட்டும் விட்டுதராமல் அமர்ந்திருந்திருக்கும் இளம் ஆடவர்கள் ஒருபுறம் என்று பரபரப்பாக இருந்தது மண்டபம். எத்தனை வண்ண வண்ண புடவைகள்.... உலகில் இத்தனை நிறங்கள் உள்ளதா என்று நினைக்கவைக்கும் அளவிற்கு ஒவ்வரு ஆடையும் மிளிர்ந்தது.
மணமேடையில் அமர்ந்து அய்யர் தேவையான பொருள்களை எடுத்துவைத்து சரிபார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது யாரிடமாவது அதை எடுத்து வாங்க இது வேணும் என்று கேட்பதே வாடிக்கை ஆனது அவருக்கு... மண்டபமே பரபரப்பாக இருந்தது... சமையல் வேலையெல்லாம் ஒழுங்காக நடக்கின்றதா என்று ஒருவர் பார்க்க, மேடையில் நடக்கும் சடங்குகளுக்கு தேவையான பொருள்களை பார்த்து பார்த்து பதட்டமாக எடுத்துக்கொடுத்தார் துளசி... பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பரபரப்பாக இருப்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. அதுவும் துளசியின் முகமும் கண்ணனின் முகமும் எந்த குறையும் இல்லாமல் திருமணம் முடியவேணும் என்னும் பதட்டத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது. அஸ்வத் தன் பங்கிற்கு வேலைகளை பார்த்துக்கொண்டாலும் பெரும்பாலும் அவன் மாப்பிள்ளையுடனே இருக்கும்படி ஆனது.
“வாங்க வாங்க வாங்க பையனை கூட்டிட்டு வரலையா?”
“இல்லை அவனுக்கு எக்ஸாம் இருக்கு அதனால கூட்டிட்டு வர முடியலை”
“ஓ சரி சரி, பரவால்லை வாங்க” என்று மாற்றி மாற்றி ஒவ்வருவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்று அமரவைத்தனர் இருவீட்டாரும்.
“துளசி அஹல்யா ரெடி ஆகிட்டாளானு பாரு அய்யர் கூப்பிடுராறு” என்று கண்ணன் அவசரமாக கூறினார்.
மண்டபமே பம்பரமாக சுழன்று கொண்டிருக்க, இரு உள்ளங்களுக்கு மட்டும் காத்திருக்கும் நேரமெல்லாம் கஷ்ட்டப்பட்டு நகர்த்திக்கொண்டிருந்தனர்.
“இப்படி கைவைங்க “கிளிக்” ஹா அப்படிதான் கொஞ்சம் தலை சாயுங்க போதும் “கிளிக்”” என்று மணப்பெண்ணை மணமேடைக்கு வருவதற்கு முன் சில போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்தார் photographer... அஹல்யா வெட்கத்தோடு அவர் கூறியவண்ணம் செய்ய சுற்றி இருந்த வயது பெண்கள் எல்லாம் நகைத்து கிசுகிசுத்தனர்.
“அண்ணி சிரிங்க அண்ணி அண்ணனை பார்த்தாள் தான் சிரிப்பென்னு சொன்னாள் எப்படி” என்று கிண்டல் செய்தாள் அனு. அதற்கும் எதுவும் கூறாமல் மௌனமாக சிரித்தாள் மணப்பெண். இந்த பேச்சிருக்கு இடையே அங்கு வந்த துளசி தன் மகளின் அழகில் ஒரு நொடி மெய்மரந்தார். வட்ட முகம்... சிரித்தாள் கன்னக்குழி அழகாக தெரிய, வான் நீல நிறத்தில் அழகான பட்டுடுத்தி நீண்ட கூந்தலில் மல்லிகை சரம் வைத்து ஒரு தேவதையாய் நின்றாள் அஹல்யா... இந்த அழகிர்கெல்லாம் அழகு சேர்ப்பது போல் மனதில் உள்ள மகிழ்ச்சி அவளை இன்னும் அழகேற்றி காட்டியது.
அவளை பெருமிதமாக பார்த்தவர், திருஷ்டி எடுத்து தன் கண்மையால் அவள் பின்னங்கழுத்திலே திருஷ்டி பொட்டிட்டார். “அய்யர் கூப்பிடுறார் அழைச்சுட்டு வாங்க” என்று மற்றவர்களை பார்த்து கூறி முன்னே சென்றார். மணப்பெண் தோழியாக அனு நிற்பதா இல்லை அர்ச்சனா நிற்பதா என்று ஒரு சண்டையே நடக்க, கடைசியாக பெண்ணின் நாத்தனார் தான் இருக்கவேண்டும் என்பதால் முதல் தோழியாக அனுவும் இரண்டாவது தோழியாக அர்ச்சனாவும் வளைய வந்தார்கள். மணப்பெண் வந்து வணங்கி எழுந்து பெரியோர்கள் ஆசிர்வாதம் செய்து பின் முஹுர்த்த பட்டை தந்து கட்டிவர சொல்லி அனுப்பினர். மணப்பெண் சென்றதும் மணமகனுக்கு அழைப்பு வந்தது...
“டேய் டேய் போதும்டா தாங்கவே முடியலை” என்று கண்ணாடியின் முன் நின்று தன்னைத்தானே பலமுறை பார்த்துக்கொண்ட அர்ஜுனை பார்த்துக் கூறினான் நவீன்.. அப்போதும் அவன் கண்ணாடியை விட்டு நகராமல் இருக்க, அவனையே பார்த்துக்கொண்டிருந்த நவீன் பெருமூச்சுவிட்டான். அவனது செய்கையை கண்டு “ஏன்டா? இப்போ என்ன ஆச்சு?” என்று அர்ஜுன் கேட்க, “ம்ம்ம்ம் முறைப்படி பார்த்தால் நான் உன்னைவிட 10 நாள் மூத்தவன் எனக்கு தான் முதல கல்யாணம் ஆகி இருக்கணும், ஆனால் பாரு உனக்கு நடக்குது..” என்று அவன் சோகமாக கூற, அர்ஜுன் “அடப்பாவி 10 நாள் ஒரு வித்தியாசமாடா இதுக்கு இப்படி பொருமுர” என்று கூறிவிட்டு, “விடு அடுத்து உனக்கு தான் நடக்கும் மாப்ள...” என்று தேற்றினான். இவன் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அஸ்வத்திற்கு இது சிரிப்பாக இருந்தது. இருந்தாலும் “உனக்கு சீக்ரமே தான்டா கல்யாணம் ஆகுது...” என்று அவன் மீண்டும் பொருமிக்கொண்டே கூறினான். “அட ஏன்டா உனக்கு.... நடக்குறதை கெடுத்துடுவ போல உனக்கு நான் ஒரு வழி பண்ணுறேன்டா அது வரைக்கும் சும்மா இரு...” என்று அர்ஜுன் கெஞ்ச வாயை மூடினான் நவீன்.
இவர்கள் பேசி கிண்டல் செய்துக்கொண்டிருக்க, மாப்பிள்ளை அழைக்க வெங்கட் வந்தார். அர்ஜுனை அழைத்துக்கொண்டு அஸ்வத் மாப்பிள்ளை தோழனாக அருகே நடக்க, அவனருகே நவீன் சென்றான். formal ஷர்ட் pant அணிந்து, மாலை அணிவித்து கல்யாண மாப்பிள்ளைக்கு உரிய மிடுக்குடன் வந்தான் அர்ஜுன். அர்ஜுனும் வந்து வணங்கி பட்டு வேஷ்ட்டி சட்டை வாங்கி செல்ல, சிறிது நேரத்திலேயே மணமக்களை தயாராகி வர சொன்னார் அய்யர்.
முஹுர்த்த நேரம் நெருங்கியது, மணமகனும் வந்து அமர்ந்தாயிற்று மணமகளை அழைத்தனர்... மஞ்சள் நிற காஞ்சீபுர பட்டுடுத்தி அழகாக அலங்கரிக்கப்பட்டு பெண்மைக்கே உரிய வெட்கத்தை ஏந்தி, மனம் முழுதும் எதிர்பார்போடு வந்த அஹல்யாவை தொடர்ந்தது மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனின் கண்கள். இத்தனை அழகாய் ஒரு பெண்ணினை தன்னவளாக ஏற்க போகிறோம் என்ற கர்வம் அர்ஜுனின் முகத்தில் குடியேறியது. அமைதியாய் குனிந்த தலையோடு வந்தாள் அஹல்யா.. அர்ஜுன் இவளை கண்ணெடுக்காமல் நேராக பார்க்க, மேடையில் அமர்ந்தால் நிமிர்ந்து கூட பார்க்க முடியாதோ என்று வரும் பொழுதே யாரும் காணாமல் லேசாக கண் உயர்த்தி தன் நெஞ்சில் நிறைந்த அர்ஜுனை கண்டாள் அஹல்யா..
இவர்கள் இருவரும் தனி கனவுழகத்தில் இருக்க, அஸ்வத்தின் விழிகள் அஹல்யாவை தொடர்ந்த அனுவின் மீது இருந்தது.. அனுவும் பார்க்காமல் அஸ்வத்தை பார்க்க நினைத்து, அவனது பார்வை தன் மீதே இருப்பதை உணர்ந்து கண்கள் தழைந்து வேறுபுறம் சென்றது அவள் விழிகள், இதழில் ஒரு புன்முறுவலுடன்.... அஸ்வத்தை அடுத்து நின்ற நவீன் ஒரு காதல் பார்வையை அர்ச்சனா மீது தொடுக்க, சென்ற அம்பு அவளது பார்வையில் வந்த வழியே மீண்டும் திரும்பி சென்றது.. மேடையில் சென்று அமர்ந்து மந்திரங்கள் சொல்ல ஆரம்பிக்க, நடப்பவையை அமைதியாக கவனித்தனர் சுற்றி இருப்போர். ஏதோ நினைவு வந்து அனு தேஜுவை தேட, நமது மணமகளின் 3வது தோழி மேடையில் ஏற முடியாமல் கீழேயே இருப்பது புரிந்தது... பெரியவர்கள் ஒருபுறம் தோழிகள் ஒரு புறம் என்று கூட்டமாக இருக்க, தேஜுவை அழைக்க முயற்சித்தாள் அனு. அனுவின் பார்வை தேஜுவை பார்க்க, அவளது பார்வை மேடையில் ஒரு ஓரமாய் இருந்தது இதழில் ஒரு வெட்க புன்னகையோடு, அவ்வப்போது வெட்கத்தில் கண்கள் தழைந்து நிலம் நோக்க, அதை புரியாமல் பார்த்தாள் அனு.
இவள் என்ன வெட்கப்படுறாள்?? இவள் ஆளு இங்கேயா இருக்கான்? என்று புரியாமல் அவள் பார்க்கும் திசையை பார்த்தாள், அனுவிற்கு அது பரிட்சயமான முகமாக தோன்றியது ஆனால் யாரென்று புரியவில்லை... எங்கு பார்த்தோம்? என்று யோசிக்கும் முன்னே அவளுக்கு அழைப்பு வர சரி பிறகு அவளிடமே கேட்டுகொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். அதற்குபின் அதன்மேல் மனம் செலுத்தமுடியாமல் போக, அன்றைய முக்கிய கதாபாத்திரமான தன் அண்ணன் அண்ணியை கவனிக்க துவங்கிவிட்டாள். மணமகனின் மூன்றாவது தோழனான நிரஞ்ஜனோ அஸ்வத் நவீனை அடுத்து நின்றுக்கொண்டிருந்தான். அவனது பார்வையும் தேஜுவையே பருகிக்கொண்டிருந்தது. என்னதான் பருகினாலும் அது தொடர்வது இல்லை, அவர்களால் அர்ஜுனை போன்று நினைத்த நேரமெல்லாம் தங்கள் காதலியை பார்க்க முடியவில்லை... அது கல்யாண மாப்பிள்ளைக்கே உரிய ஒரு சலுகை என்று நினைத்த மூவருமே கொஞ்சம் பொருமிதான் போனனர்.