05. சிறகுகள் - பாலா
“அம்மா பேசறேன் டா செல்லம். அம்மா சொல்லு” என்றாள் தேன்மொழி.
“ஹீம் ஹீம் ஹா” என்று ஏதேதோ பேசியது அந்த குழந்தை.
“நிலா” என்றவளுக்கு சக்தி இருந்தால் இந்த நிமிடமே அங்கு சென்று விடுவாள்.
“ஹான்”
“நிலா செல்லம் எப்படி டா இருக்க. அம்மா சீக்கிரம் வருவேன் சரியா.” என்று அந்த குழந்தைக்கு புரிந்ததோ இல்லையோ ஏதேதோ பேசினாள் தேன்மொழி.
அவள் சொன்னதற்கெல்லாம் அந்த குழந்தையும் ஹூம் ஹான் என்று ஏதோ தெரிந்தாற்போல் பதில் கூறியது.
“கவிதா நிலாவை பார்த்துக்கோங்க ப்ளீஸ்”
“நான் பார்த்துக்கறேங்க. நிலாக்கு அடுத்த மாசம் முதல் பிறந்த நாள் வருது நியாபகம் இருக்குங்களா” என்றாள் கவிதா.
“முதல் பிறந்த நாள். ஆமாம். ஆமாம்” என்றாள் தேன்மொழி.
“இங்க வருவீங்களா. இங்க வர சூழ்நிலை இருக்கா அங்க”
“தெரியலை. வரணும்.”
“சரி பார்த்துக்கோங்க. அதுக்குள்ளே நிலா இன்னும் நிறைய பேச ஆரம்பிச்சிடுவா”
“ம்ம்ம். சரி. நான் வச்சிடறேன், அப்பறம் பேசறேன் கவிதா”
“சரிங்க”
படுத்து உறங்க முயன்றவள் எவ்வளவு முயன்றும் முடியாமல் போகவே எழுந்து மாடிக்கு சென்றாள்.
ஏதேதோ எண்ணிக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியோ அமர்ந்திருந்தாலோ மலர் வந்து சில முறை அழைத்த பின்பு தான் சிந்தனையில் இருந்து வெளி வந்தாள்.
“என்ன என்ன மலர். கூப்பிட்டியா”
தடுமாற்றத்துடன் பேசிய அக்காவை உற்றுப் பார்த்தாள் மலர்.
கண்களில் கண்ணீர் கோடுகளோடு அமர்ந்திருந்தவளை “நீ இன்னும் அவரை விரும்பறியா அக்கா” என்றாள் மலர்.
(அந்த வார்த்தைகளை ஒரு உருவம் கேட்டதையோ, அங்கே இருக்கலாமா கூடாதா என்று குழம்பி பின்பு அங்கிருந்து அகன்றதையோ அவர்கள் அறியவில்லை.)
“மலர்”
“சொல்லுக்கா”
“ “
பின்பு மலர் ஏதேதோ கேட்டும் தேன்மொழி ஏதும் பேசவில்லை. தங்கையையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
கடைசியாக தங்கையின் கண்ணில் கண்ணீரை பார்க்கவும் “ரொம்ப யோசிக்காத மலர். நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள்.
“இப்படி தனியா வந்து அழுதுட்டு இருந்தா நான் என்னக்கா நினைக்கறது”
“அழுதேனா நானா”
“ஆமா நீ தான் பாரு. நீ அழுத தடம் தெரியுது”
அப்போது தான் அழுதேனோ என்பதை உணர்ந்தவள்,
“நிலா பத்தி நினைச்சிட்டு இருந்தேன் டா. நிலாக்கு அடுத்த மாசம் ஒரு வயசு ஆகப் போகுது. நிலாவை பார்க்கணும் போல இருக்கு” என்று சொல்லும் போதே கண்ணீர் துளிகள் அவள் கண்ணில் இருந்து எட்டிப் பார்த்தது.
தேன்மொழியின் கண்களில் சில கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க, மலர் விழியின் கண்களிலோ கண்ணீர் சாரம் சாரமாய் கொட்டியது.
பின்னே எப்போதும் உணர்ச்சிகளை கட்டுப்பாடாக வைத்திருக்கும் அவள் அக்காவே கண்ணில் கண்ணீர் துளிகளோடு இருந்தால் அவள் என்ன செய்வாள்?
சில நொடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டவள் “என்ன அழுமூஞ்சி இப்ப என்ன ஆகிடுச்சின்னு இப்ப அழற” என்றாள்.
“இங்க பாரு. நீ சின்ன வயசுல இருந்தே இப்படி அழுமூஞ்சி தான். நீ அழறதுக்கு எல்லாம் என்னை ரீசனா சொல்லிட்டு அழாத, ஓகே வா” என்றாள்.
அப்போதும் கண்ணில் கண்ணீரோடு இருந்தவளை அனைத்துக் கொண்டு தன் கவலையை மறந்து அவளை சமாதானப் படுத்துவதற்குள் ஒரு வழியாகி விட்டாள் தேன்மொழி.
அடுத்த நாள் இன்ஸ்டிடியூட்டிற்கு சென்ற போதும் அவளின் மூட் சரியாகவில்லை. எனினும் அதை இழுத்துப் பிடித்து வேலை செய்து கொண்டிருந்தாள்.
லஞ்ச் பிரேக்கிலும் அவளின் மனம் ஒரு நிலையில் இல்லை.
அவளின் மனநிலையை அறியாத கௌதம் வழக்கமான கலகலப்போடு பேசிக் கொண்டிருக்க அவளும் முயற்சி செய்து பேசிக் கொண்டு தான் இருந்தாள்.
ஆனால் அவ்வப்போது அவள் மனம் அந்த இடத்தில் இல்லாமல் ஏதேதோ எண்ணிக் கொண்டிருக்க அவளின் சிந்தனை இங்கில்லாதது அங்கிருந்த அனைவருக்குமே தெரிந்தது.
கௌதம் ஏதோ பேசி விட்டு அவளின் பதிலுக்காக எதிர்ப்பார்த்திருக்க அவள் கவனித்திருந்தால் தானே பதில் சொல்வதற்கு, ஜமுனா தான் தேன்மொழியின் கைத் தொட்டு அவளின் சிந்தனையை கலைத்தாள்.
தேன்மொழி என்ன என்பது போல பார்க்க, “கௌதம் உன் பதிலுக்காக வெயிட் செய்யறார்” என்றாள்.
பின்பு திரும்ப கௌதமிடம் என்னவென்று கேட்டு விட்டு பதில் கூறினாள். ஆனால் பின்பும் இரண்டு முறை இது போல நடக்க கௌதம் முகம் மாறினான்.
கடைசியாக இப்படி நடக்க கௌதம் எழுந்து விட்டான்.
“கௌதம் என்ன பாதி சாப்பாடுல எந்திரிச்சிட்ட” என்ற தௌலத்தின் குரலில் கலைந்த தேன்மொழியும் என்னவென்று கேட்க,
“பேச பிடிக்கலைன்னா பேசாத. அதை விட்டுட்டு பேசறதுக்கு பதில் பேசாம ஏதோ யோசிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்றான்.
“கௌதம். சாரி” என்று பேச வந்தவளை நிறுத்தி விட்டு,
“வேண்டாம். நீ பேச வேண்டாம்” என்றதோடு சென்று விட்டான் அவன்.
அங்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை தேன்மொழியால்.
‘என்ன ஆயிற்று இவனுக்கு. இது ஒரு சிறிய விஷயம். இதற்காகவா இவன் இப்படி நடந்து கொள்கிறான்’ என்று எண்ணியவளுக்கும் கோபம் தான் வந்தது.
அதோடு அவனிடம் பேச முயற்சிக்கவில்லை அவள்.