03. கனியாதோ காதலென்பது! - Anna Sweety
இவள் கைபிடித்தவனோ இவள் சொன்னதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவித முகபாவத்துடன் அந்த வீட்டின் முகப்பை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். பீப் ஹோல் முன்பு இவளை நிறுத்தினான்.
“எதுவும் ப்ரச்சனையாயிராதே?!”
“இல்ல, ஆண்துணை இல்லாத வீடு, சமாளிச்சிடலாம்.”
“ஹான்!?............எப்படி கண்டுபிடிச்சீங்க?....”
“காய்றது எல்லாமே லேடிஃஸ் வியர். குழந்தைங்க இல்ல. பொண்ணுங்களும் அம்மாவும் இருப்பங்களா இருக்கும்.”
“அதெப்படி.............இனிமே அவங்க துணியை துவைப்பாங்களா இருக்கும், இல்லனா முன்னமே துவச்சிருப்பாங்களா இருக்கும்?”
அப்படி தனி தனியா துவைக்கிறவங்க இப்படி மொத்தமா இவ்ளவு துணி காயபோட்டிருக்க மாட்டாங்க. ஒரு வாரத்துக்குள்ளது காயுது. வீட்டு பொண்ணுங்க வேலைக்கு போறாங்களா இருக்கும்”
“அ...”
அடுத்த கேள்வி இவள் ஆரம்பிக்கும்போது....ஆள் நடமாட்டம் கதவருகில் கேட்க்க பேச்சை நிறுத்தினாள்.
உள்ளிருந்து ஏதோ ஒரு கேள்வி கேட்டது ஒரு பெண்குரல். இவன் இவள் காதில் எதையோ அந்த பாஷையில் முனுமுனுக்க அதை அப்படியே ஒப்புவித்தாள். அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டது.
திறந்த பெண்ணிண் முகத்தில் அவனையும் கண்டதும் திகைப்பு. அவனை எதிர்பார்க்கவில்லை போலும். அவன் ஏதோ நீளமாக சொல்ல அந்த பெண்முகம் இயல்பாகிவிட்டது. இவளிடமாக ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தாள்.
உள்ளே அழைத்து சென்று ‘குளிருக்கு இதமாக டீ சாப்பிடுங்கள்” என உபசரித்தவள் தன் மற்ற சகோதிரிகளையும், தாயையும் அறிமுகம் செய்துவித்தாள்.
உள்ளறை ஒன்றுக்கு அழைத்து சென்று தன் உடைகளை காண்பித்தாள் ”துரத்தினவங்களுக்கு அடையாளம் தெரியாதமாதிரி இதில் ஏதாவது போட்டுகோங்க” என்றவாறு.
கண்கள் இயல்பாக அவனை தேடின.’எது சரியாக வரும்?’
அந்த பெண்ணோ சிறு புன்னகையுடன் “எல்லாமே உங்களுக்கு உங்க ஹஃஸ்பெண்ட் தான் போல” என்றபடி வெளியே சென்று அவனை அழைத்தாள்.
உள்ளே வந்தவன் ஆடைகளின் மேல் தன் கண்களை ஓடவிட்டான், மறுநொடி ஒரு மஞ்சள் நிற டாப்ஃஸையும், பெரிது பெரிதாய் மஞ்சள் நிற பூக்கள் வரைந்திருந்த க்ரீம் நிற ஸ்கர்ட்டையும் அவளிடிடம் காண்பித்தவன்
“டேக் திஸ் பேபி” என்றான். நடிப்பு என தெரிந்தாலும் அவனது பேபி இனித்தது.
அவன் சொன்ன உடையை இவள் கை எடுத்தாலும், அடுத்தவர் உடையை எடுக்கிறோமே ஏதாவது அந்த பெண்ணிற்கு கொடுக்கவேண்டுமே என மனம் பரபரக்க அதற்கும் அவனைத்தான் பார்த்தாள்.
அவனோ இவளை ஆறுதலாக பார்த்தான். அதில் ஒரு மெச்சுதலும் தெரிந்தது. நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற செய்தியும் இருந்தது. ஒரு மேடை போட்டு யாரும் பாராட்டு விழா நடத்தியிருந்தால் கூட அப்படி மகிழ்ந்திருக்கமாட்டாள் நிரல்யா, மிகவும் மகிழ்ச்சியாகி போனாள் பெண்.
மற்றவர் வெளியேற இவள் அந்த உடைக்கு மாறி அவள் களைந்திருந்த உடையை அவன் பேக்கிற்குள் திணித்தாள். கதவை திறந்து இவள் வெளியே செல்ல எத்தனிக்க சட்டென உள்ளே வந்து கதவை தன் பின் அடைத்தவன் “இப்படியா வெளியே வருவ?” என கடிந்தான்.
அங்கிருந்த ஒரு மஞ்சள் வண்ண துப்பட்டாவை எடுத்து இவள் கண்கள் மாத்திரம் தெரியும்படி முகத்தை மறைத்து முக்காடிட்டு பின் செய்தான். “பின்னால எப்பவாவதுகூட இவங்களுக்கு உன்னை அடையாளம் தெரிய கூடாது.”
இவள் கை பிடித்து வெளியே அழைத்து வந்தவன், அவளுடன் அடுத்த அறையில் படுக்கையிலிருந்த ஒரு மூதாட்டியிடம் சென்று ஏதோ பேசினான், அவர் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம். இவன் கன்னத்தை தன் நடுங்கும் கரத்தால் தொட்டவர் ஏதோ சொன்னார். அவர் ஆசீர்வதிக்கிறார் என மொழி தடைகளை தாண்டி புரிந்தது நிரல்யாவுக்கு. பெருமிதமாக உணர்ந்தாள் அவள்.
நன்றி கூறி விடை பெறும் போது ஒரு கற்றை பணத்தை எடுத்து இவர்களிடம் சகஜமாக உரையாடிய பெண்ணிடம் கொடுத்தான். முதலில் மறுத்தாலும் இவன் வார்த்தையில் கண்களில் நீர் பளபளப்புடன் அவள் வாங்கிக் கொண்டாள்.
மீண்டும் நடைபயணம் தொடங்கியது.
“அவங்க அம்மாட்ட என்ன பேசினீங்க?”
திரும்பி இவளை இது கூட தெரியாதா?ங்கிற மாதிரி ஒரு பர்வை பார்த்தவன், என்ன நினைத்தானோ பதில் சொன்னான். “தனியா படுக்கையிலிருக்கும் பெரியவங்களுக்கு தேவையான முக்கிய மருந்து விசிட்டர்ஸ். அடுத்தபடியா சந்தோஷமான பேச்சு. என்னால முடிஞ்சதை செய்தேன்”
அவனை பற்றிய மதிப்பும் பிரமிப்பும் நொடிக்கு நொடி ஏறிக்கொண்டு போனது இவள் இதயத்துள். ‘இந்த தலைக்கு மேல் கத்தியுள்ள சூழலில் இவனால் இப்படி எப்படி அடுத்தவர்களை பற்றி யோசிக்க முடிகிறது?’
“ம், உன்னால இப்ப அவன ஆராய்ச்சி பண்ணமுடியுதுல்ல அப்படிதான்..........” அறிவு அதன் கடமையை செய்தது.
‘ம்ஹும், இது பேச்சை இப்ப கேட்டா இருக்கும் நிம்மதி போயிடும்.’ கவனத்தை திசை திருப்பினாள்.
“என்ன சொல்லி சமாளிச்சீங்க?”
“நடந்து பீச்சுக்கு வந்தோம், திடீர்னு யாரோ துரத்துறாங்க, அவ ரொம்ப பெரிய இடத்து பொண்ணு, ரகசியமாத்தான் வந்தோம், இருந்தும் இப்ப ப்ரச்சனை, அதனால, அவ அடையாளம் தெரியாத மாதிரி டிரஃஸ் மாத்திகிட்டா பத்திரமா போயிடுவோம்னு சொன்னேன்.”
ஒரு கணம் அவன் பேச்சை ரசித்தாள். ஒரு வார்த்தை பொய்யில்லை ஆனால் இவர்கள் ரகசியம் படு பத்திரமாக இருக்கிறது.
“இதையா நம்பிட்டாங்க?”
“நம்புறது நம்பாத்துங்கிறதே இங்க விஷயம் கிடையாது. தன்ன மாதிரி ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி ப்ரச்சனைனா சராசரியான எந்த பொண்ணும் ஹெல்ப் பண்ணதான் செய்வாங்க. ரொம்ப யோசிக்கமாட்டாங்க. லேடிஃஸ், ரொம்ப உணர்ச்சி பூர்வமானவங்க, அவங்க எடுக்கும் முடிவுகள் உணர்ச்சி அடிப்படையில் தான் இருக்கும்.”
“அப்ப எங்களுக்கு அறிவில்லங்கிறீங்களா?” மிளகாய் கடித்தவள் முக பாவத்துடன் கேட்டாள்.
“நீ இதுக்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசபடுற? உனக்கு அறிவில்ல, எனக்கு உணர்ச்சி இல்ல அப்படின்னலாம் நான் சொல்லவேயில்லையே! ரெண்டு பேரும் ஒரு பிரச்சனையை அணுகும் விதம் வித்யாசமா இருக்கும். ஆனா ரெண்டு வித அணுகுமுறையும் அவசியம். அறிவு பாதுகாக்கும்னா உணர்வுதான் உயிர் நாடி ஒவ்வொரு குடும்பத்துக்கும். பொண்ணுங்க கையாலதான் கடவுளே குடும்பத்த கட்றாருங்கிறது என் நம்பிக்கை. அதனால என் கூட சண்ட போடுறதை விட்டுட்டு, கிளம்ப பாரு.”
மே............லே தூக்கி கீழே போடபட்டது போல் உணர்ந்தாள் நிரல்யா. ‘கிளம்பனுமா?’
“இப்ப என்ன செய்யனும்?” தளர்ந்து ஒலித்தது அவள் குரல்.
“உங்கப்பாவுக்கு நீ ஃபோன் செய்யனும்!”
“வாட்? பிறகு உங்கள பத்தி தெரிஞ்சிடாதா? நம்பரை டிரேஃஸ் பண்ணமாட்டாங்களா?”
“பார்த்துகிடலாம்” என்றவன் ஒரு இருளான இடத்தில் அவளோடு ஒதுங்கினான். தன்னிடமிருந்த ஒரு சிறு கையடக்க கருவியை கொடுத்தான். “இதிலருந்து உன் அப்பாகிட்ட பேசு, தமிழ்ழ பேசு. கடத்தி வந்தவன் என்னையும் சேர்த்து இழுத்துகிட்டு கடல்ல குதிச்சான், நான் தப்பிச்சிட்டேன். நான் இப்ப இந்த நாட்டு சீ ஷோரில் இருக்கேன். நம்ம எம்பசிக்கு போகவா, இல்ல கடலுக்குள்ள வந்துடுறேன், அங்கிருந்து கூட்டிட்டு போறீங்களான்னு கேளு, அவர் சொல்றதை செய்யலாம்.”