05. கனியாதோ காதலென்பது! - Anna Sweety
ரக்க்ஷத்தின் அழைப்பில் உள்ளே வந்தாள் ஆரணி.
“என்ன மீதி சண்டையை நாளைக்கு போடலாம்னு முடிவு பண்ணியாச்சா?” என்றபடி.
“சண்டையா? நாங்க எங்க சண்டை போட்டோம்?” பட்டென வந்தது பதில் நிரல்யாவிடமிருந்து. சற்று முன் தோன்றியிருந்த சந்தோஷத்தின் பின்விளைவு.
ஆங்!! என ஒரு கணம் நின்ற ஆரணியோ தன் அண்ணனை நோக்கி “டேய் ரச்சு நீ ஆள் மயக்கின்னு எனக்கு தெரியும், இருந்தாலும் கல்யாணம் வேணாம்னு அழுதுட்டு இருந்த பொண்ண, ஆறே நிஷத்தில் கவுத்துவன்னு, கண்டிப்பா நான் எதிர் பார்க்கவே இல்லபா. ஓவர் ஸ்பீட் உடம்புக்கு ஆகாதுடா!” என்றவள் வேகமாக சென்று படுக்கையிலிருந்த நிரல்யாவை அணைத்துக்கொண்டாள்.
“என்ன பொண்ணு நீ, சம்மதம்னு சரண்டர் ஆகறதுக்கு முன்னாடி தங்கச்சிட்ட ஒரு வார்த்தை கேட்ப்போம்னு நினைக்கமாட்டியா....... அவன்பாட்டுக்கு நாளைக்கே கல்யாணம்னுட்டான்னா நடக்க போற கல்யாணத்துக்காக நல்லதா நாலு டிரஸ் மணிஷ் மல்ஹோத்ராட்ட டிசைன் செய்து வாங்கனும்னு நான் போட்ட ப்ளான் ஊத்திகிடாதா....... இதே இது, அப்ளிகேஷன் அண்டர் கன்ஸிடரேஷன்னு சொல்லியிருந்தன்னு வச்சுக்கோ இந்த ரச்சுவை பஞ்சு மிட்டயாக்கி பாக்கெட் போட்டிருக்கலாம் தெரியுமா?”
வார்த்தையில் குறை சொல்லுதல் இருந்தாலும் குரலில் குதுகலம் கொண்டாட்டம். வார்த்தைகளில் ஒருமை. அதிதீதமாய் உணர்ச்சி வசப்படும் போது ஒருமைக்கு தாவுவாள் போலும்.
தன் பதில் இப்படியாக ஆரணிக்கு புரியுமென நிரல்யா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. மண ஏற்பாட்டின் மறுப்பை காண்பிக்கமாட்டேன் என்ற உடன்படிக்கையின் சரத்து ஞாபகம் வர பரிதபமாக ரக்க்ஷத்தை பார்த்தாள்.
குறும்பு சிரிப்புடன் நடப்பதை ரசித்துக் கொண்டிருந்தவன் “ஆக அவளுக்கு அப்ளிகேஷன் அண்டர் கன்சிடரேஷன் ஐடியா கொடுத்த கரப்பான் பூச்சி நீ தானா? கட்சி மாறி கோல் அடிச்சிருக்க, இரு கவனிச்சுகிறேன்...” என்றபடி தன் மனம் கவர்ந்தவளுக்கு உதவிக்கு வந்தான்.
“சூப்பர் சூப்பர், சில விஷயத்தில நீ சின்ன பிள்ளையா இருந்தாலும் பல விஷயத்தில் பார்ட்டி படு உஷார் தான்” என்றபடி ஆரணி நிரல்யாவின் கையை பிடித்துக் கொண்டாள்.
பேச்சை திசை திருப்ப எண்ணினாள் நிரல்யா “எனக்கு ஹாஸ்பிட்டல்ல இருக்க பிடிக்கல, இப்பவே வீட்டுக்கு போக போறேன், நீ என் கூட தங்குவல்ல ஆரு?” கவனத்தை தன் தேவையின் புறமாக திருப்பினாள்.
நிரல்யாவின் கேள்வி காதில் விழுந்த நொடி ஆரணியின் முகத்தில் தோன்றியது பீதி!.பெரும் பயம். மறு நொடி முகத்தை இயல்பிற்க்கு மாற்றிக் கொண்டாள். பின்னிருந்த ரக்க்ஷத்துக்கு தெரியாவிட்டாலும் எதிரிலிருந்த நிரலின் கண்களுக்கு அது தப்பவில்லை.
“நானெல்லாம் என் அண்ணங்க இல்லாத இடத்தில தங்க மாட்டேன்பா....” சிரித்தபடி வெகு இயல்பாகத்தான் சொன்னாள் ஆரணி. அவள் எதையோ மறைப்பது நிரல்யாவிற்கு புரிந்தது.
“அன்னைக்கு வந்து தங்கினேயே.....” ‘அன்று தங்கிய போது ஏதும் ஆரணி பயப்படும்படி நடந்து விட்டதோ? இப்பொழுது அதை சொல்லமட்டாளா?’. துருவினாள் நிரல்யா.
“அது....அடுத்த ரூமில் எக்ஸ் பி.எம். கரண்ட் எதிர்கட்சி தலைவர். எத்தனை செக்யூரிட்டி....அதான்” அவள் உண்மையை சொல்வதாகத்தான் தெரிந்தது.
ஆச்சர்யமாக பார்த்திருந்தான் ரக்க்ஷத்.
“ஏய் ஆணி இங்கயும் ஃபுல் செக்யூரிட்டி இருக்குமே?” அவனுக்கும் அன்று தன் தங்கை நிரல்யாவுடன் தங்குவதுதான் நல்லது என பட்டது.
“உனக்கு கொஞ்சமும் விஷயம் தெரியலை ரச்சு, தனியா இருக்க பயந்துபோய்தான் நிரு உன்னை கன்ஸிடர் பண்றதே! இப்படி நீ துணைக்கு ஆள் அரேஞ் பண்ணு, அவங்க கல்யாணத்துக்கு சம்மதிச்ச மாதிரிதான்......”
“அப்படிங்கிற” யோசனையாய் பார்த்தான் ரக்க்ஷத்.
அன்று நிரல்யா மருத்துவமனையில் தனியாய் தங்கிக்கொள்வது என ஏற்பாடாயிற்று.
மறுநாளிலிருந்து பொழுது இலகுவாக கழிந்தது. காரணம் நிச்சயம் ரக்க்ஷத்தான். பகல் முழுவதும் இணைந்து புரியும் பணிநேரம். இதம்.
இரவில் மனம் சோரும் நேரம் அவனே தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிடுவான். காதல், கல்யாணம் இப்படி எந்த கசந்த விஷயங்களும் இருவரின் உரையாடல்களில் இடம் பெறவேயில்லை. தூய நட்புக்கு உரிய சுத்தமான சுவாரஸ்ய பேச்சுகள்.
பிரதி செவ்வாய் அவன் வீட்டில் நடக்கும் ஜெபகூட்டத்தில் இவள் கலந்து கொள்ளவேண்டும். அதுவே வியாழன்தோறூம் இவள் வீட்டில் நடைபெற வேண்டும். அவனும் ஆரணியும் அன்று அங்கு வருவார்கள் என்றதொரு ஏற்பாடு. ஆவிக்குரிய ஜீவிதம், நட்ப்பு, நம்பிக்கை எல்லாம் நலமாய் வளர்ந்தது. முழு மாதம் முடிந்திருந்தது.
அப்படி அவள் சென்ற அந்த செவ்வாயன்றும் சரி, அவர்கள் இவள் வீடு வந்த அடுத்த வியாழனன்றும் சரி, ஆரணி அவளாக இல்லை. மொத்த கூட்டத்தில் அவள் யாரிடமும் பேசவில்லை. நிரல்யாவின் கயை இறுக்க பிடித்தபடி, படு பிஸியாக இருந்த தன் அண்ணண் முகம் தவிர எதையும் கண்ணோக்காமல் அமர்ந்திருந்த ஆரணி இதுவரை நிரல்யா காணாத விஷயம். வழக்கமாய், விருந்தோம்பல் பெண்ணாய் பிறந்தால் ஆரணி உருதான் அது கொண்டிருக்கும் என்பதாய் உலா வருபவள், ஆணி அடித்தது போல் அமர்ந்திருந்தவிதம் ஆழ குழப்பியது நிரல்யாவை.
அடுத்த ஞாயிறு சர்ச்சில், தன் அண்ணனுக்கும், அவனுக்கு மனைவியாக போகிறவளாக தான் நம்பிக்கொண்டிருக்கும் நிரல்யாவிற்கும் நடுவில் அமர்ந்து கொண்ட ஆரணி, சபை கூட்டம் முடியும் வரை கூட, தன் நட்ப்பின் கையை விடவேயில்லை.
ஆனால் அன்று மதிய உணவு அவர்கள் வீட்டில் என இவர்கள் மூவருக்குமான விருந்து ஏற்பாடு. அதை தட புடல் படுத்தியதுமன்றி அவள் அடித்த லூட்டியில், ‘சர்ச்சில் பார்த்த ஆரணியை அங்கேயே விட்டுட்டு வந்துட்டமோ, இது அவளோட குணம் ஒத்துபோகாத க்ளோன் காபியான்னு’, நிஜமாகவே நினைத்தாள் நிரல்யா.
அன்று இரவு படுக்கையில் படுத்திருந்த நிரல்யாவின் சிந்தனையை அரசாண்டதும் ஆட்டிபடைத்ததும் ஆரணிதான். அவள் பற்றிய இவளறிந்த அனைத்தையும் மனதில் சிலமுறை திரையிட்டாள். பல விஷயம் உறுத்தியது.
ரக்க்ஷத் மேல் உயிரையே வைத்திருக்கும் ஆரணி அவனிடம் மறுப்பு தெரிவிக்கும் இவளிடம் இளகியிருக்கிறாள். ஏன்??????
‘நிரல்யாவிற்கு பெரிய ப்ரச்சனை இல்லைனு நினைக்கிறேன்’ என்ற அவளது ஜெபம் இப்பொழுது வேறு மாதிரி புரிந்தது. அதாவது ஆரணிக்கு பெரிய ப்ரச்சனை இருக்கிறது.
ஆரணியின் திருமணத்தை பற்றி அவளது அண்ணண்மார் பேசியதும் சாப்பாட்டைவிட்டு எழுந்துவிட்ட ஆரணி.
இரவில் இவளுடன் தங்க பயந்த ஆரணி.
பாதுகாப்பு பலமாக இருந்தால் மட்டும் தங்குவேன் என்று சொன்ன ஆரணி.
எதற்கெடுத்தாலும் ஜெபிக்கும் ஆரணி, ஜெப கூட்டங்களில் மட்டும் பயபடுகிறாள் என்றால்?????..........
ஜெபகூட்டத்திற்கு வருகிற யாரையோ குறித்து பயப்படுகிறாள். அந்த நபருக்கும் ஆரணியின் பெரிய ப்ரச்சனைக்கும், அவளது கல்யாண வெறுப்பிற்கும் ஏதோ சம்பந்தமிருக்கலாம். உள்ளுணர்வு ஆமோதித்தாலும், அறிவு இது வெறும் கற்பனையாகவும் இருக்கலாம் என அடிகோடிட்டது.
இதை நேரடியாக ஆரணியிடம் கேட்க்கலாம்தான். ஆனால் ஒத்துக்கொள்வாளா? மனம் திறப்பாளா? அல்லது ஒரேடியாய் ஓட்டிற்குள் சுருளும் நத்தையாவாளா?
பார்க்கலாம்.....
ஜாஷின் நினைவு வந்தது. எப்பொழுதும் எல்லாவற்றையும் கவனித்து அதை அலசி ஆராய்ந்து தீர்வு காணும் அவனது வழி முறையை பின் பற்ற வேண்டியதுதான். ஜெபித்து கொண்டாள் ஆரணிக்காக.
மறுநாளே வழி கிடைத்ததுபோல் ஒரு செய்தி.