11. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா
ஆமாம் உங்க அத்தை பையன் பேரென்ன? மேல்லகேட்டாள் அபர்ணா. 'விஷ்வா' என்று அவன் சொல்லிவிடக்கூடாதே என்ற ஒரு தவிப்பு அவளுக்குள் மெல்ல எழுந்தது.
மறுபடியும் கண்களில் கோபம் பரவ, 'ம்? ரா.....ஸ்...கல்.... அதுதான் அவன் பேரு'. பற்களை கடித்துக்கொண்டு சொன்னான் பரத்.
மனதிற்குள் அந்த கேள்வி அவளை மறுபடி உறுத்த 'இல்லைப்பா....' என்று மெல்ல தொடர முயன்றாள் அவள்.
அந்த நொடியில், சரியாய் அந்த நொடியில் ஒலித்தது அவன் கைப்பேசி. காரை செலுத்திக்கொண்டே அதை எடுத்து பார்த்தவனின் முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய துவங்கியது.
சின்னதாக ஏதோ ஒரு யோசனை அவன் கண்களில் ஓடி மறைந்து, இதழ்களில் சின்ன புன்னகை ஓட கைப்பேசியை அவளிடம் நீட்டினான்.
பேசு....
நானா?
நீதான் பேசு. எல்லாம் உனக்கு தெரிஞ்சவர்தான்.....
எனக்கு தெரிஞ்சவரா யாரு?...
அட! பேசு பொண்டாட்டி.. என்றான் பரத் புன்னகையுடன். நான் கார் ஓட்டிட்டு இருக்கேன்னு சொல்லு...
அவன் புன்னைகையிலும், அவன் 'பொண்டாட்டி' என்று அழைத்த விதத்திலும் கொஞ்சம் மகிழ்ந்துதான் போனாள் அபர்ணா.
புன்னகையுடனே கைப்பேசியை வாங்கியவள் அந்த திரையில் ஒளிர்ந்த பெயரைக்கூட கவனிக்காமல் கைப்பேசியை அழுத்தியவள் 'ஹலோ. மிஸஸ் பரத்வாஜ் ஹியர்' என்றாள் சட்டென.
பரத்தே இதை எதிர்ப்பார்க்கவில்லை. சின்ன திடுக்கிடலோடு திரும்பி புன்னகையுடன் அவளை ஏறிட்டான்.
எதிர்முனையில் இருந்தவருக்கு சட்டென புரையேறியது. அந்த குரலை அடையாளம் கண்டுக்கொண்டார் அவர்.
அவர் பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டவள் 'ஹலோ மிஸஸ் பரத்வாஜ் ஹியர்.... மே ஐ நோ ஹூ இஸ் ஆன் தி லைன்? என்றாள் அபர்ணா.
மெல்ல சிரித்தபடியே பார்வையை திருப்பிக்கொண்டான பரத்.
நான் திருச்சியிலிருந்து proffesor சந்திரசேகர் பேசறேன்.' என்றது மறுமுனை.
தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு. 'அய்யோ...... அப்.....பா... அ....ப்..பா சொல்லுங்கப்பா...' என்றபடியே அவனை பார்த்து முறைத்தாள் அபர்ணா.
என்னமா நீ? நான் தான் கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொன்னேனே அதுக்குள்ளே நீயே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அப்பாகிட்டே சொல்லவே இல்லையேமா' என்றார் குரலை பாவமாக மாற்றிக்கொண்டு..
'ஐயோ! அப்படியெல்லாம் இல்லைப்பா. நான் சும்மா விளையாட்டுக்கு..... அது... நான் ..வந்து.....அவர் கார் ஒட்டிட்டு இருக்கார் பா...' அவள் தட்டுத்தடுமாறி சொல்லி முடிப்பதற்குள் காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சிரித்தபடியே கைப்பேசியை வாங்கினான் அவன்.
ஒரு நொடி ஏதோ யோசித்தவன் 'சொல்லுங்க அங்கிள்... நான் பரத் பேசறேன்' என்றான் தெளிவான குரலில். அவன் அவரை வழக்கமாக அழைக்கும் சார்... மாறிவிட்டிருந்தது.
'என்னப்பா? என்றார் அவர். என் பொண்ணை இப்படி மாத்தி வெச்சிருக்கியே? கொஞ்ச நாளிலே என்னையே மறந்திடுவா போலிருக்கே?
மலர்ந்து சிரித்தான் பரத். 'அது எப்படி அங்கிள் உங்களை மறப்போம். நீங்க தான் எங்களுக்கு எல்லாம்'. என்றான் அவன்.
இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். நிமிடத்திற்கு ஒரு முறை கலகலவென்று சிரித்தவனை இமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தாள் அபர்ணா. சற்று முன் அவள் மனதை உறுத்திய கேள்வி மறந்தே போயிருந்து அவளுக்கு.
அவன் அப்படி மகிழ்ந்து, மனம் தறந்து சிரித்து இதுவரை அவள் பார்த்ததே இல்லை.
அழைப்பை துண்டிக்கும் முன் சொன்னான் 'கொஞ்சம் டைம் கொடுங்க அங்கிள். பெரியவங்க கிட்டே பேசிட்டு, அவங்களை கூட்டிட்டு திருச்சி வரேன்.'
பேசி முடித்து அழைப்பை துண்டித்து விட்டு அவள் பக்கம் திரும்பினான் பரத். இமைக்க மறந்து அவனை பருகிக்கொண்டிருந்த கண்களை அவன் கண்கள் சந்தித்தன.
,இருவரும் அப்படியே கரைந்துக்கொண்டிருப்பதை போன்ற ஒரு உணர்வில் சில நொடிகள் அமர்ந்திருந்தனர். பின்னர் அவன் விரல்கள் அவள் கையை நோக்கி மெல்ல வந்த நொடியில் சட்டென சுதாரித்து கையை விலக்கிக்கொண்டாள் அபர்ணா.
ஹேய்.... என்றான் அவன்.
ம்ஹூம்.....
என்ன ம்ஹூம்? எனக்கு ரெண்டு நிமிஷம் உன் கையை பிடிச்சுக்கணும் போலே இருக்கு அபர்ணா.
ஹை... நல்லா இருக்கே நீங்க நினைச்சவுடனே நாங்க கையை கொடுத்திடணுமா என்ன? அதெல்லாம் முடியாது. கண்களில் ஓடிய குறும்புடன் சொன்னாள் அவள்.
காரை எடுங்க. எனக்கு டைம் ஆச்சு.' என்றபடியே அவள் கண்கள் ஜன்னலுக்கு வெளியே பார்க்க, மழை தூற துவங்கியிருந்தது.
அதெல்லாம் கிடையாது. இப்போ. இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நாம அப்படியே எங்கேயாவது போலாம். உனக்கு என்ன பிடிக்கும் அபர்ணா? உனக்கு ஏதாவது வாங்கிகொடுக்கணும் போலே இருக்கு. அன்னைக்கு தாத்தா சொன்னாரே விளக்கேத்தின கைக்கு வளையல் போடணும் அப்படின்னு. வாங்கிடலாமா?
எதுக்கு என் கையை பிடிச்சு வளையல் போடவா? வாய்ப்பே இல்லை சார். என்றாள் சிரித்துக்கொண்டே.
போடி. ராட்சஸி. சரி. வேறென்ன பிடிக்கும்னு சொல்லு.
ம்? என்றவளின் கண்கள், கொஞ்சம் பெரிதாக தூற துவங்கி இருந்த மழையில் பதிந்து திரும்ப, 'மழை பிடிக்கும்' என்றாள். இந்த மழையிலே அப்படியே கார்லே வேகமா ஒரு ரைட் போலாமா?
நகர்ந்தது கார். மழையும் வேகமெடுத்து. சாலைகளில் வளைந்து நெளிந்து, வாகன நடமாட்டம், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த சாலைக்குள் புகுந்து முழு வேகமெடுத்தது கார்.
ஜன்னலின் வழியே சிலீரென்ற காற்றும், சாரலும் வந்து அவள் முகத்தில் மோதியது. உடல் மொத்தமும் சிலிர்த்தது போன்ற ஒரு உணர்வு.
ஓரக்கண்ணால் அவனை பார்த்தவளுக்கு அவன் கையை பற்றிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. ம்ஹூம்... தனக்குதானே தலையசைத்துக்கொண்டு சின்ன புன்னகையுடன் பார்வையை ஜன்னலுக்கு வெளியே திருப்பிக்கொண்டாள் அபர்ணா.
கார் கடற்கரை சாலைக்குள் நுழைந்து, கொஞ்ச தூரம் சென்று சாலை ஓரத்தில் நின்றது.
'மழை பிடிக்கும்னு சொன்னியே. கொஞ்ச நேரம் நனைவோமா? பிடிக்குமா உனக்கு? புன்னகையுடன் கேட்டான் அவன்.
மகிழ்ச்சியில் கண்கள் விரிய வேகமாய் தலையசைத்தாள் அவள்.
இறங்கி நடந்தனர் இருவரும். இருட்ட துவங்கி இருக்க, மழையும் தூறிக்கொண்டிருக்க ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை அங்கே.