காதல் நதியில் – 17 - மீரா ராம்
பிறக்க போவது ஆணாக இருந்தால் நிச்சயம் என் பையன் என்னை விட்டு போய்விடுவான் என்று அந்த மேலத்தெரு சாமியார் சொன்னது நிறைவேற நான் அனுமதிக்கமாட்டேன்... அதனால் அந்த சிசுவை எடுத்துகொண்டு போய்விடு பர்வதம்... கண் காணாத தூரத்தில் என் பேரன் வளரட்டும்... நீ அவனுடனே இருந்து அவனைப் பார்த்துக்கொள் என்று தன் உடன்பிறந்த தங்கை பர்வதத்திடம் ஆணையிட்டார் ஜனாவின் அன்னை கற்பகம்...
அக்கா... நான்... என்று இழுத்த பர்வதத்திடம், நீ எதுவும் சொல்ல வேண்டாம்... உன் விஷயத்தில் கூட அவர் சொன்னது தானே நடந்தது... உங்க பொண்ணுக்கு இந்த பையனோட திருமணம் முடிந்தால் அவள் கணவன் அவளை விட்டு விலகி போய்விடுவான் என்று சொன்னாரே... அதையும் மீறி நீ ஆசைப்பட்டவனுக்கே நம்ம அப்பா உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்தாரே... கடைசியில் என்ன ஆச்சு??... அதனால் தான் சொல்லுறேன் பர்வதம்... இந்த பச்சை மண்ணை தூக்கிகிட்டு பட்டணத்துக்கு போயிடு... அங்க எதாவது ஆசிரமத்தில் விட்டுவிட்டு நீயும் அங்கேயே சேர்ந்து நம்ம பிள்ளையைப் பார்த்துக்கோ... என்றவர், கடைசியாக ஒரு முறை அந்த சிசுவை தூக்கி கொஞ்சிவிட்டு என்னை மன்னித்துவிடு கண்ணா... ராசா மாதிரி பேரன் கூட வாழ எனக்கு கொடுத்து வைக்கலையே... நீ எங்க இருந்தாலும், ஆரோக்கியமா, சந்தோஷமா, முக்கியமா உயிரோட இருந்தா போதும்பா... பெத்த அப்பன் ஆத்தா உன் முகத்தை பார்க்க கூட கொடுத்து வைக்கலையே... அய்யோ... இதை எல்லாம் பார்க்கத்தான் நான் இன்னும் உயிரோட இருக்கேனா?... என்று கதறியபடி பர்வதத்தை அனுப்பி வைத்தார் கற்பகம்...
பிரசவ மயக்கம் தெளிந்து கேட்ட மருமகளிடமும், வெளியூருக்கு சென்று திரும்பி வந்த மகனிடமும் குழந்தை பிறக்கும்போதே இறந்தே பிறந்ததென்றும், ஏற்கனவே கணவனின் பிரிவுத்துயரில் இருந்த பர்வதத்தினால் இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. கடைசி காலத்தை கோவில், குளம் என்று கழித்துக்கொள்கிறேன் என சொல்ல சொல்ல கேட்காமல் கிளம்பிவிட்டாள் பர்வதம் என்று பொய்யுரைத்தார் கற்பகம்...
- செந்தாமரையும் ஜனாவும் நிலைகுலைந்து போயினர்... அதன் பிறகு கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து தான் சாகரி பிறந்தாள்... அதன் பின் வெளியே புத்திரனை இழந்த சோகத்தை காட்டிக்கொள்ளவில்லையே தவிர, மனதிற்குள் பாரமாய் அழுத்திக்கொண்டு தான் இருந்தது அவர்களுக்கு... தலை மூத்த பையனின் முகம் கூட பார்க்க கொடுப்பினை இல்லையே என்ற ஏக்கம் அவர்களை வருத்திக்கொண்டு தான் இருந்தது தினமும்...
அதன் பின் சாகரி கல்லூரியில் அடி எடுத்து வைத்த வருடமே கற்பகம் மறைந்துவிட, உண்மையும் அவருடனே மறைந்துவிட்டது... பின்னர் இங்கு வந்து தினேஷை சந்தித்த நொடியில் ஜனாவின் மனதிற்குள் இன்னதென்று சொல்லமுடியாத நிறைவு கிடைத்தது... தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கேற்ப ஒருவருக்கொருவர் பார்த்து பழகியதும் அந்த ரத்த பந்தம் அவர்களை இணைத்தது... அதன் பிறகு ஏனோ ஜனா-தாமரை இருவருக்கும் தங்கள் மகனை இழந்த சோகம் வாட்டவில்லை...
தினேஷ் சொன்ன மாப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டு ஜனா ஊர் திரும்பும் போது ஆதர்ஷுடன் வந்த ஒரு வயதான பெண்மணியை இனம் கண்டு கொண்டார் அவர்... ஆம் அவர் வேறு யாருமில்லை... பர்வதம் தான்... இவங்க என் பாட்டி இங்க சென்னையில் எங்களுக்கு துணையா இருக்காங்க... அம்மாவோட ஏற்பாடு என்று சிரித்துவிட்டு நீங்க பேசிட்டிருங்க... நாங்க இப்போ வந்துடுறோம்... என்றபடி தினேஷை அழைத்துக்கொண்டு ஆர்டர் சம்பந்தமாக ஆதர்ஷ் பேச சென்ற நேரத்தில், ஜனா பர்வதத்திடம் பேசினார்...
சித்தி... நீங்க... இங்க... ஏன் சித்தி சொல்லாமல் போனீங்க?... அம்மா இறந்ததுக்கு கூட ஊருக்கு வரலையே நீங்க... இத்தனை நாளா எங்க இருந்தீங்க?...என்று கேள்வியாய் கேட்டவரிடம் கற்பகம் என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார் பர்வதம்... ஜனா அதிர்ந்து பார்க்கையிலே எல்லா உண்மையையும் கொட்டிவிட்டார் பர்வதம்... கேட்டவருக்கு ஒன்றுமே ஓடவில்லை... தன் தாயா இப்படி ஒரு காரியத்தை செய்தார் என்று நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடினார் ஜனா...
அக்கா சொன்னபடி உன் மகனை ஆசிரமத்தில் போட்டுவிட்டு நானும் சில நாள் கழித்து அங்கேயே வேலைக்கு சேர்ந்தேன்... உன் மகனும் என் கண் முன்னே வளர்ந்து ஆளானான்.. வேலை கிடைத்தவுடன் அவன் ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றுவிட்டான்... என்னால் அவனுடன் செல்ல முடியவில்லை... அதன் பின் பல வருடங்கள் கழித்து நான் அதை விட்டு வெளியேற முயற்சித்த தருணத்தில் ஆதர்ஷ் முகிலனின் பெற்றோர் அந்த ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளுக்கு உதவி செய்ய வந்தனர்... என்னை கோதைக்கு பிடித்துவிட்டது... உங்களை முன்பே பார்த்து பேசிய நினைவு வருகிறது எனக்கு என்று கூறி, அவள் மகன்களுடன் இருக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டாள்... வெளியே சென்று அநாதையாய் நிற்பதற்கு இந்த பிள்ளைகளுடன் இருக்கவாவது கொடுத்து வைத்ததே என்று இவர்களுடனே இருந்து விட்டேன்... பாட்டி, பாட்டி என்று இந்த பிள்ளைகள் என்னுடன் பேசும்போது எனக்கு உன் பையன் நினைவு தான் வரும்... அவனை மறுபடி எப்போது பார்ப்போம் என்று காத்திருந்தேன்... ஆனால் அது இன்று உன் மூலமாகவே நடக்கும் என்று நான் எண்ணவில்லை ஜனா...
என்ன சொல்லுகிறீர்கள்?... என் பையன் இங்கேயா... யார் அது?... என்று பரிதவிப்போடு கேட்டவரிடம் தினேஷ் தான் உன் மகன் என்ற உண்மையை கூறினார் அவர்... அதைக் கேட்டதும் ஒரு கோடி பூக்கள் தன் தலை மீது கொட்டிய உணர்வு கிட்டியது ஜனாவிற்கு...
மனதளவில் மகனாய் நிறைந்தவன் நிஜத்தில் இரத்த பந்தத்திலும் மகனாய் நிறைந்திருந்ததை அன்று கண்டு கொண்டார் ஜனா... மகன் கிடைத்துவிட்டான் என்ற உண்மையை மனைவியிடம் சொல்லிவிடலாம் என்றெண்ணும்போது தாயின் நினைவு வர, மனைவியாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று சொல்லாமல் இருந்துவிட்டார்...
பர்வதத்தையும் ஆதர்ஷுடன் சில காலம் இருந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார்...
அதன் பின் மகனை இப்போது தான் பார்க்கிறார்... தன் மகனை தன் முன்னே நீ யார் என்று தன் நண்பனே கேட்டதும் அவருக்குள் இருந்த தந்தை என்ற உணர்வு மேலிட, கோபமாய் வார்த்தைகள் என்ற நிஜம் அங்கிருந்தோருக்கு தெரியப்படுத்திவிட்டது அவர்களின் பிணைப்பை...
ஜனா சொல்லி முடித்ததும் அங்கே கனத்த மௌனம் நிலவியது... கட்டிலில் தாயின் தலைமாட்டில் அமர்ந்திருந்த தினேஷ் தான் முதலில் அந்த அமைதியை கலைத்தான்... அவனின் கண்ணீர்த்துளிகள் தாமரையின் கன்னத்தில் விழ, அவரோ மகனை வாஞ்சையுடன் பார்த்திருந்தார்...
அ....ம்.....மா... என்ற மூன்று வார்த்தை தான் அவன் சொன்னான்... ஆனால் அதுவே இந்த ஜென்மத்திற்கு போதுமானதாக இருந்தது தாமரைக்கு... எத்தனை நாட்கள் துடித்திருப்பார் இந்த வார்த்தைக்காக... முழுதாக தொலைத்துவிட்டேன் என்று தினம் இரவில் யாருக்கும் தெரியாமல் அழுத அந்த தாயின் கண்ணீருக்கு இன்று இறைவன் பரிசு கொடுத்து விட்டானோ???...
மகனை துடிக்கும் உதடுகளோடு அணைத்து கதறி தீர்த்து விட்டார் தாமரை...அவரை சமாதானப் படுத்தும் எண்ணமே இல்லாது தினேஷும் அம்மா அம்மா என்று அழ, காவ்யாவிற்கு தன் கணவனை சமாதானப் படுத்தும் எண்ணம் துளியும் இல்லை... அழட்டும் இன்றோடு என் தினுவின் வேதனை எல்லாம் விலகட்டும் என்றவாறு பூஜையறையில் இருந்த தெய்வங்களின் முன் மண்டியிட்டு கை கூப்பி தொழுது அழுது கொண்டிருந்தாள் அவள்...
அழுது ஓய்ந்தவர் மகனை விடுவித்து, ஜனாவிடம் நம்ம பையன் பாருங்க... நம்ம பையங்க... என்று பிறந்த குழந்தையை கணவனிடத்தில் காட்டி மகிழும் பெண்ணைப் போல் ஆர்ப்பரித்தார் செந்தாமரை... ஆமா செந்தா... நம்ம பையன்... நம்ம பையன் தான் என்று அவரும் மனைவியின் தோளில் கைபோட்டு பேசியவர் இன்னொரு கரத்தால் மகனின் தலையை வருடினார்...
அப்பா என்று நெஞ்சில் சாய்ந்த மகனை தனக்குள்ளே புதைத்து கொள்ளுவது போல் அணைத்துக்கொண்டார் ஜனா... மனைவி ஒரு கையில், மகன் ஒரு கையில்... இது தானே வேண்டும் ஒவ்வொரு ஆணுக்கும்... ஆஸ்திக்கு பையன் கிடைத்துவிட்டான்... ஆசைக்கு மகளும் இருக்கிறாள்... இதுதானே குடும்பம்... மகள் நினைவு வந்ததும் திருமண பேச்சுவார்த்தை அனைத்தும் நினைவுக்கு வர, நனவுலகுக்கு வந்தார் ஜனா...
நிமிர்ந்து அவர் ராசுவைப் பார்த்த பார்வையில் தலை குனிந்து கொண்டார் ராசு... தினேஷ் மன்னிச்சிடுப்பா... நான் ஏதோ கோபத்தில் வார்த்தைகளை தவறவிட்டுவிட்டேன்... என்றவரிடத்தில், பரவாயில்லைப்பா... நீங்க அப்படி வார்த்தையை விட்டிருக்காவிடில் என் தாயும் தகப்பனும் எனக்கு கிடைத்திருக்க மாட்டார்களே... என்று சொல்லவும், ஆமா ராசு நடந்ததை விடு.. நடக்கப்போவதை பாரு என்று கூறியதும், ஜனா என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்ட ராசு, நிதானமாக அவரைப் பார்த்தார்... உன் மகன் உனக்கு கிடைத்துவிட்டான்... என் மகனைப் பிரித்த ஒருவனுடன் என் மகளுக்கு திருமணம் பேச நான் ஒன்றும் மகான் அல்ல ஜனா... என்று அவர் சொல்லும்போதே செல்வியின் கேவல் கேட்க, ராசு வலியுடன், இதற்கு மேல் இதைப் பற்றி பேச எதுவுமில்லை ஜனா... இந்த திருமணம் நடக்காது என்றவர் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை... சரி விஷயத்தை கொஞ்ச நாள் ஆறப்போடுவோம் என்றெண்ணினார் ஜனா... அப்படியாவது நண்பனின் மனது மாறாதா என்ற நப்பாசை தான் அவருக்கு....