12. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா
அந்த வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தாள் அபர்ணா. மனதிற்குள் போராட்ட அலைகள். அடுத்த அடி எப்படி எடுத்து வைப்பது என்றே புரியவில்லை அவளுக்கு.
விஷ்வா தனக்கும் தனது மாமன் மகனுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தவைகளையெல்லாம் சொல்லி இருக்கிறான் அவளிடம். இவை எல்லாம் நடந்த போது, அபர்ணா வேலைப்பார்த்துக்கொண்டிருந்தது திருச்சியில்.
அவன் சொன்னவைகள் எல்லாம் ஒன்று ஒன்றாய் நினைவுக்கு வந்தன. இதில் தவறு யார் மீது? யாரை குறை சொல்வது. சத்தியமாய் புரியவில்லை.
இருவரையும் சமாதான படுத்தும் சாத்தியமும் இல்லை என்றே தோன்றியது. சமாதான படுத்துவது என்ன? இருவரையும் நேருக்கு நேராக இரண்டு நிமிடங்கள் நிற்க வைப்பது கூட கஷ்டமென்றே தோன்றியது.
நிறுத்தப்பட்டிருந்த தனது வண்டியின் மீது அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள் அவள். என்ன செய்வது இப்போது?
'இன்னொரு ஏமாற்றத்தையோ, அவமானத்தையோ சந்திக்கற தைரியம் எனக்கில்லை.' சில நாட்களுக்கு முன் என்னிடம் சொன்னனே பரத். அவனை நானே ஏமாற்றுவதா? இப்படியே வந்த வழியே திரும்பி விடலாமா? அவள் யோசித்து முடிப்பதற்குள் கொஞ்சமாய் சிணுங்கியது அவள் கைப்பேசி.
விஷ்வாவிடமிருந்து குறுஞ்செய்தி. 'அங்கே போய் சேர்ந்துவிட்டாயா?'
சின்ன புன்னகை எழுந்தது அவளிடத்தில். அழைக்காதே என்று சொன்னதால் குறுஞ்செய்தி அனுப்புகிறானா அவன்.
இந்துவிற்காக இவ்வளவு தவிக்கிறதா அவன் மனது.' கொஞ்சம் வியப்பகாக்கூட இருந்தது அவளுக்கு.
'இந்துஜா, விஷ்வாவை பத்தி எல்லாம் தெரிஞ்சும், அவரை மனசார நேசிக்கிற பொண்ணு. 'எனக்கு தெரிஞ்ச வரைக்கும், இப்போ விஷ்வாவுக்குன்னு இருக்கிறது நீங்க மட்டும்தான்னு நினைக்கிறேன். நீங்கதான் ஏதாவது செய்யணும் அபர்ணா.' சுதாகரனின் வார்த்தைகள் அவள் காதில் ஒலிப்பதுப்போல் இருந்தது.
உண்மை. நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும். என் விஷ்வாவுக்காக இதை செய்தே ஆக வேண்டும். முடிவுடன் நிமிர்ந்தாள் அபர்ணா.
பரத்தின் வீட்டுக்குள் அப்போதுதான் நுழைந்திருந்தார் அத்தை. காலை ஏழு மணிக்கே கல்லூரியில் ஏதோ வேலை என்று கிளம்பி போனவர் அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தார்.
பரத்தின் கையில் காயத்தை பார்த்து கொஞ்சம் துடித்துதான் போனார் அவர்.
எப்போடா நடந்தது இது. எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்லை.
'எதுக்கு உனக்கு போன் பண்ணி உன்னையும் டென்ஷன் ஆக்கவா? நீ இவ்வளவு feel பண்ற அளவுக்கு ஒண்ணுமில்லை அத்தை. கூல்' சிரித்தான் பரத்.
அதே நேரத்தில் அவன் வீட்டு வாசலில் செய்வது அறியாது தவித்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.
வீட்டுக்குள் பரத்தின் அத்தை இருந்தால் கண்டிப்பாக இந்துவிடம் எதுவும் பேச முடியாது என்று தோன்றியது.
யோசித்தபடியே இந்துவின் கைப்பேசிக்கு முயன்றாள் அபர்ணா. அது அணைக்கப்பட்டிருந்தது. இந்துவை வீட்டை வெளியில் வரவழைத்ததாக வேண்டும். என்ன செய்யலாம்?
யோசனையுடன் தனது கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தவளின் மூளைக்குள் மின்னலாய் ஒரு யோசனை.
அறிவு தந்த யோசனையை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. முடியாது. 'இதை என்னால் செய்யவே முடியாது'. அப்படியே நின்றவளின் மனதிற்குள் விஷ்வா வந்துப்போனான்.
யோசித்து, யோசித்து மனதை தேற்றிகொண்டு , தனது கைப்பேசியைப்பார்த்தாள் அபர்ணா.
அதில் இருப்பது இரண்டு சிம் கார்டுகள். அந்த இரண்டாவது எண்ணை பரத் அறிந்திருக்க நியாயமில்லை.
அந்த இரண்டாவது சிம் கார்டு மூலமாக பரத்தின் எண்ணை அழைத்தாள் அபர்ணா. அவள் செய்வதை அவளாலேயே மன்னிக்க முடியவில்லைதான்.
ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வர, யோசனையுடன் கைப்பேசியை அழுத்தினான் பரத்.
ஹலோ பரத்வாஜ் ஹியர்.......
அவன் குரல் அவளை என்னமோ செய்தது. 'ஹலோ மிசஸ் பரத்வாஜ் ஹியர் ' நேற்று அவள் சொன்னது அவள் மனதில் வந்து போனது.
மறுமுனையில் என்னவன். என்ன பேசுவேன் நான்? தட்டு தடுமாறி, கஷ்டப்பட்டு குரலை மாற்றிக்கொள்ள முயன்று, அடிக்குரலில் 'நா... நான் இந்து.... இந்துவோட கலீக் பேசறேன்' என்றாள் அபர்ணா.
இந்துவோட கலீகா? யோசனையுடன் ஒலித்தது அவன் குரல். சொல்லுங்க என்ன விஷயம்.?
அவங்க கிட்டே கொஞ்சம் பேசணும்.அவங்க போன் சுவிட்ச் ஆப் ஆகி இருக்கு.
அப்படியா? உங்க பேரு... என்றான் சட்டென.
ஆங்... என்... என் பேரு அ.. அ.. அனுஷா.. அனுஷா... என்றாள் அபர்ணா.
'ஒரு நிமிஷம் அனுஷா. இந்து கிட்டே பேசுங்க.' கைப்பேசியை இந்துவிடம் கொடுத்துவிட்டிருந்தான் பரத்.
அபர்ணாவின் மனம் மொத்தமாய் துவண்டுதான் போனது. அய்யோ. என்னவனை ஏமாற்றுகிறேனே? என்னை மன்னிச்சிடுங்க பரத் ப்ளீஸ்..... என்றாள் தனக்குள்ளே.
ஹலோ என்றாள் இந்து.
'நான் விஷ்வாவோட friend அபர்ணா பேசறேன். என்றாள் சற்று தழைந்த குரலில்.
கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள் இந்து அவள் முகத்தையே. படித்துக்கொண்டிருந்தான் பரத். பதில் சொல்லாமல் நின்றிருந்தாள் இந்து.
நான் உங்க வீட்டு வாசலிலேதான் நிக்கறேன். உங்ககிட்டே கொஞ்சம் பேசணும். வரீங்களா.
சரி வரேன். கைப்பேசியை துண்டித்து அண்ணனிடம் கொடுத்துவிட்டு, தனது கைப்பேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்தவளை வியப்புடன் பார்த்தான் பரத்.
என்னாச்சுமா?
என் friend வாசலிலே வெயிட் பண்றாங்க. கொஞ்சம் பேசிட்டு வந்திடறேன்.
வெளியில் வந்தாள் இந்து. வீட்டை தாண்டி சில அடி தூரத்தில் நின்றிருந்தாள் அபர்ணா.
அவளை நோக்கி வந்தவளை நட்புடன் பார்த்து புன்னகைத்தாள் அபர்ணா. 'ஐ.யம் அபர்ணா.' அவளை நோக்கி கை நீட்டினாள். '
எல்லாம் சரியாக நடந்தால் நான் உனக்கு அண்ணியாகி விடுவேன்' மனதிற்குள் வந்ததை, ஏனோ அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை அபர்ணா.
இந்து புன்னகைக்க அவளையே அளந்தன அபர்ணாவின் கண்கள். இந்துவின் கண்களில் நிறையவே அன்பு நிறைந்திருப்பது போலே தோன்றியது அபர்ணாவுக்கு. இவள் சத்தியமாய் விஷ்வாவை கண்ணுக்குள் வைத்துப்பார்த்துக்கொள்வாள். தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள் அபர்ணா.
மேடம் ஏன் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சீங்க? புன்னகையுடன் கேட்ட அபர்ணாவை இமைக்காமல் பார்த்தாள் இந்து.
அங்கே உங்களுக்காக ஒரு ஜீவன் தவியா தவிச்சுப்போய் இந்த அபர்ணாவை தூது அனுப்பி இருக்கு. சிரித்தாள் அபர்ணா.