09. காற்றாக நான் வருவேன் - Anna Sweety
நீலம் கலந்த கரு இருள். அலையாடி கொண்டிருக்கிறதா உலகம்? ஏன் இந்த அசைவாடல்? இருளில் ஒன்றும் புலப்படவில்லை. கருமை....சில்லென்ற குளுமை அதோடு இந்த அசைவாடல்.
மெல்ல மெல்ல கண்ணிற்கு ஏதோ புலப்பட தொடங்குகிறது. நிழலாய் ஒரு மங்கிய வெண்மை. காதுக்கும் சில உள்ளீடு. இன்புட். ஓ இரவில் நடு கடலின் தளும்பல்.....
அந்த மங்கிய வெண்மை பாய்மர துணி என்பது புலனாகிறது.
அதே நேரம் எங்கோ தொலைவில் ஒரு மனிதன்.
“அ அ அ..... ஆஆஆ....அ அ அ....ஆஆஆ”
அலறியபடி அவன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.
சுற்றிலும் கல்லறைகள்.
பேய் போன்ற இவன் யார்?
கடலில்...இரவில்...நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்.....?
இங்கில்லாத பேய்மனிதன் எப்படி எனக்கு புலனாகிறான்...?
அருகில் நடமாட்டம்.
அமைதலாய் இருவர் மூவராய் அவர்கள். அத்தனையும் ஆண்கள். அவர்கள் மொழி புரியவில்லை. ஆனால் அதன் அருஞ்சொற்பொருள் அன்பு. அதன் வகைபட்ட நட்பு. சகோதரம்.
சிரிப்பொலியும், சீண்டல் ஒலியும், சீராக செல்லும் படகொலியும் ரம்யம்.
அத்தனை ஆண்கூட்டம்...பத்து பன்னிரெண்டு பேர் இருப்பர். திடகாத்திரமான இளைஞர்கள். இடையில் இவள் மட்டும். ஆனாலும் பயம் வரவில்லை இவளுக்கு. பாதுகாப்பான உணர்வே பலமாக எழும்புகிறது.
அங்கே அந்த பேய் மனிதன்.
“ஹ் ஹ ஹ..அ.....ஹ்..ஹா...ஆ.......” அலறியபடி அவன் போய் அடைக்கலபட்டது ஒரு கல்லறையின் பக்கவாட்டில்.
படுத்து கிடந்தவன், “ப்..அ...ப்..அ” பிதற்றியபடி தன் வெற்று தோள்களையும், மார்பையும் தன் நகங்களால் பரண்டினான்.
கிர்... கிர்... ரத்தம் வடிய வடிய...பார்க்க முடியவில்லை இவளுக்கு.
பயத்தைவிட பாவை மனம் கொண்டது இரக்கம். தவிப்பு...
பக்கத்திலிருந்த கல்லைப் பார்த்தவன் அதைக் கொண்டு தன் தலையில் தானே அடிக்க ஆரம்பித்தான். அழுகையும் அலறலும் அவன் மனிதன் என்க, ஆவேசமும் அதன் பிளிறலும் அவன் அமானுஷ்யம் என்றது.
அப்பா தெய்வமே! இரங்குமே....இவனுக்கு இரங்குமே! இறைஞ்ச ஆரம்பித்தது இவள் மனம்.
அவன் மயங்கி சரிந்தான்.
பிணநாற்றத்துடன் கிளம்பியது ஒரு புழுதி அவன் அருகிலிருந்து.
அடித்து பறந்தன அங்கிருந்த வல்லூறுகள்.
அதற்கு முன்சென்றது அந்த மண் காற்று.
மணித்துளி ஒவ்வொன்றிலும் மரணதன்மை பெற்றது அது.
இங்கு படகில் இவளருகில். ஒரு இனம் புரியாத இழுபடல்.
வானம் வசந்தத்தை இழந்திருந்தது.
வந்துவிட்டது அக்காற்று இங்கு!!!
ஆட்களின் சத்தம்....எதையோ அவர்களுக்குள் அவசர அவசரமாக பரபரப்புடன் ஆலோசிக்கும் சத்தம்.
என்ன ப்ரச்சனை?
புரியவில்லை.
அவர்கள் பேசும் பாஷை தெரியவில்லை!!!
எங்கிருக்கிறேன் நான்???!!!
இதற்குள் அவர்கள் கலைந்து இரு புறமும் ஓடினர்.
என்னவாயிற்று?
இப்பொழுது அந்த படகின் ஆட்டம் பலக்கிறது....
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........................சுழலும் காற்று.
சுழற்றுகிறது தொடும் கடலை. துடிக்கிறது ஆழி.
காற்றும் கடலும் ஆடிய கபடி விளையாட்டு காட்சி மாறி கடும் யுத்தம் பிறக்கிறது.
காற்றின் கர்ஜனை!!! அதை கரம் நீட்டி அடிக்கும் அலை!!!
வீர விளையாட்டு விபரீதமாகி வெறியாட்டம் தொடக்கம்.
பாத்திருந்த வானம் பதிவிருந்த பட்டினி சிங்கமாக உறும, கோப கோடுகள். மின்னல்.
காற்றுக்கு துணை கார்கொண்ட கடும் வானம்.
கலங்கியது கலம்.
உள்ளிருந்த அந்த இளைஞர் கூட்டம் அலறலுடன் ஆடியபடி அங்குமிங்கும் ஓடி அதையும் இதையும் அள்ளி எறிந்தனர் அலைகடலுக்குள்.
படகின் பாரம் குறைத்தனர்.
ஆகினும் படகின் குடை சாயும் நேரம் தொலைவில் இல்லை என இவளுக்கே புரிய மீனவர்களான அவர்களுக்கா தெரியாது...?
அலறியபடி அவர்கள் ஓட, அவர்கள் பின் இவளும்.....
அங்கு அவர் தூங்கிக் கொண்டிருந்தார் அமைதியாக.
இத்தனை அலையாட்டத்திலுமா??
அத்தனை இருளிலும் அமைதி ஒளிவீசிய அம்முகம் அவள் பார்வைக்கு பட்டது.
அத்தனை இளைஞர்கள், அவர்கள் பேச்சு எதுவும் இவளுக்கு புரியாத மொழியில். ஆனாலும் தவிப்பை புரிய அது தாய்மொழியில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே!
அவரை எழுப்ப விரும்புகிறார்கள் அவர்கள் என இவளுக்கு புரிகிறது. ஆனால் ஒரு தயக்க அலை அவர்களை தடுக்க...அடுத்த தண்ணி அலை தயக்கத்தை கழுவிக் கொண்டு ஓட, கதறியபடி அவரை அத்தனை பேரும் கண்விழிக்க செய்தனர்.
அவர்கள் ஏதோ சொல்ல, குறை சொல்லும் தொனி.
“நாங்க இப்படி அழிந்து போவது உங்களுக்கு ஒன்னுமில்லையா...?” என புரிந்தது அவளுக்கு.
அவரோ அமைதியாக எழுந்தார்.
அடித்து துவைத்த ஆழியையும் அதற்கு காரணமான காற்றையும் கண்டவர் “அமைதலாயிரு!!” என்றார் அவை இரண்டையும் நோக்கி.
அது ஒரு கட்டளை. கம்பீரம்!!! ராஜ செயல்.
தன் வார்த்தைக்கு தலை வணங்குவான் என தெரிந்த கடை நிலை ஊழியனுக்கு தேச தலைவன் இடும் நடுக்கமில்லா நம்பிக்கையுள்ள கட்டளை.
இவர் மொழி இவளுக்கு புரிகிறதே!!
நடுங்கி அமர்ந்தது அலை கடல். ஒடுங்கி ஓடியது வானம். பிணகாற்று செயல் பலிக்கவில்லை.
அமைதியின் ஆளுகை.
“Why are you so afraid? Do you still have no faith?” அந்த இளைஞர்களை அவர் கடிந்து கொள்ளுதலின் சத்தம் மட்டுமே மொத்த கடலிலும் கிடைத்த ஒரே ஒலி.
இது என் தெய்வம், யேசப்பா!!!! துள்ளியது பெண் மனது. ஓடிச் சென்று தோளில் சாய ஆசை.
அப்பொழுதுதான் புரிகிறது அது.
அவளுக்கு உடலில்லை.