01. வாராயோ வெண்ணிலவே - சகி
சில்லென்ற சில்லென்ற தூரல்...
வானில் இருந்து மண்ணிற்கு பரிசம் போட்டு இணைத்துக் கொண்டிருந்தது.
காற்றில் வீசும் கீதமானது மெல்ல கண்ணனின் புல்லாங்குழல் ஓசையை போல மனதை சிலிர்க்க செய்தது....
காண்போர் மனதை காதல் கொள்ள வைக்கும் ரம்யமான மார்கழி மாத காலைப் பொழுது...
வானம் மண்ணிற்கு காதல் தூது அனுப்பிய மழையை வெட்கத்தில் நாணி சிவந்து ஏற்று கொண்டிருக்கும் காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்.
மனதில் பல்வேறு நினைவலைகள் புகுந்து காயப்படுத்திக் கொண்டிருந்தன.
"ரஞ்சு!!! ப்ளீஸ்...கொஞ்ச நேரம் மழையில நனைஞ்சிட்டு வருகிறேன்."
"ஹே...ஜீரம் வந்துடும் டி!"
"அதுக்கு என்ன வேலை?அது...எப்பவும் தான் வர தயாரா இருக்கும்!மழை எப்போவாவது தானே வரும்.ப்ளீஸ்..."-அவளின்,கொஞ்சும் இனிமையான குரல்,எதையும் சாதித்து விடும் குரல்,இன்னும் செவி மடல்களின் மூலம் தோன்றி உயிர் வரை பரவுகிறதே!!!!
கண்களை இறுக்கமாக மூடித்திறந்தான்.
"ரஞ்சித்??"-கார்த்திக்.
"ஆ...என்னண்ணா?"
"என்னடா?பண்ற?"
"ஒண்ணுமில்லைன்னா! அது...!"-சமாளித்தான்.
"அம்மா ரொம்ப நேரமா உன்னை கூப்பிட்டு இருக்காங்க!"
"அப்படியாண்ணா?கதவு சாத்தி இருந்தது,அதான் கேட்கலை."
"எங்கடா கவனம் இருக்கு?கதவு திறந்து தான் இருக்கு!"
".............."-மௌனம் சாதித்தான்.
"யாரை மனசுல நினைச்சிட்டு,நீ இப்படி பண்ணிட்டு இருக்க?"
"................."
"அதான்...அவ எதுவும் வேணாம்னு போயிட்டாளே?"
"அதுக்கு நான் தானே காரணம்?"
"ரஞ்சித்...நீ இப்படி இருக்கறது சரியில்லை.நீ எப்படி இருந்தவன்?இப்படி..யார் கூடவும் பேசாம,எதுவும் வேண்டாம்னு மௌனம் சாதித்தால் நல்ல இல்லடா!"
".............."
"அம்மாக்கு உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?"
"அண்ணா...ப்ளீஸ்...எனக்கு கொஞ்சம் டைம் கொடு!"
"மூணு வருஷம் மூணு வருஷமா! இதையே சொல்ற!!"
"இன்னும் கொஞ்சம் டைம் கொடுண்ணா!"
"என்னமோ பண்ணு!"-கார்த்திக் கோபமாக சென்றுவிட்டான்.
ரஞ்சித்திடமிருந்து பெரு மூச்சு ஒன்று வெளியானது.
அமைதியாக மீண்டும் திரும்பிக் கொண்டான்.
"டேய்!எழுந்திருடா! மணி பதினொன்றாகிறது.!"
"அம்மா...என்னம்மா இவ்வளவு சீக்கிரம் எழுப்புற?லீவ்ல தானே இருக்கேன்!"
"அடப்பாவி...இது சீக்கிரமா?எழுந்திரிடா! நிலாவை கூட்டிட்டு வரணும்ல?"
"நிலா ராத்திரி ஆச்சுன்னா வந்திட போகுது!அதுக்கு நான் ஏன் போகணும்?"
"டேய்!"
"ம்மா...அவ என்ன சின்ன குழந்தையா?வந்துவிடுவாம்மா!"
"டேய் சோம்பேறி! எழுந்திரு கிளம்பு!"
"ம்மா...மா!ப்ளீஸ் மா! ஒரு பத்து நிமிஷம்."
"டேய் விஷ்வா!"-குரல் கேட்டு எழுந்தான்.
"மாமா!"
"கொஞ்சம் ஏர்போர்ட் போய் நிலாவை கூட்டிட்டு வாடா!"
"இதோ கிளம்பிட்டேன் மாமா...ஒரு பத்து நிமிஷம்!"
"அடப்பாவி...எவ்வளவு நேரமா நான் கூப்பிட்டுட்டு இருக்கேன்.நான் சொல்றதை கேட்கலை.உன் மாமா சொன்னதும் இதோ கிளம்பிட்டேன்னு சொல்ற?"
"ம்மா...கோவிச்சிக்காதம்மா!எனக்கு ஒரு காப்பி போடு பார்ப்போம்!"-என்று ஒரு டவலை எடுத்துக் கொண்டு,குளியலறைக்குள் ஓடிவிட்டான்.
"இந்த பையனை திருத்தவே முடியாது!"
"விடு லதா!சின்ன பையன் தானே!"
"இல்லண்ணா!"
"விடும்மா!"
"ம்..."
சரியாக அரை மணி நேரம் கழித்து...
"ம்மா...ஃப்லைட் எப்போ லேண்ட் ஆகுது?"
"12:15"
"ஐயயோ...சரிம்மா.. போயிட்டு வரேன்!"
"டேய்!பார்த்துடா."
"என் மேல அவ்வளவு பாசமா?"
"பார்த்து நிலாவை கூட்டிட்டு வா!"
"ம்ஹீம்...அதானே பார்த்தேன்!கிளம்புறேன்."-என்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சரியாக அரை மணி நேரத்தில் விமான நிலையத்தில் இருந்தான்.
"ஐயோ! லேட் ஆயிடுச்சே! பயபுள்ள பத்ரகாளி ஆயிடுவாளே!"-என்று புலம்பியபடி சென்றான்.
சரியாக அவன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே,விமானம் தரை இறங்கி விட்டிருந்தது.
"என்ன இவனுங்க...வர வர கரெக்ட் டைம்க்கு வந்துடுறாங்க!"-என்றவாறு அவனது தமக்கை வெண்ணிலாவின் வரவிற்காக காத்திருந்தான்.
வெண்ணிலா விஷ்வாவை விட மூன்று மாதம் பெரியவள்.இருவரும் சிறு வயது முதல் நண்பர்களாகவே வளர்ந்தனர்.
இது வரை அவர்களிடத்தில் ஒளிவு மறைவு இருந்ததில்லை.
விஷ்வா அங்கிருந்த அழகிய பெண்களை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் இதழில் குறும்பு சிரிப்புகள் தோன்றின. அதனால்,அவனை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவன் கவனிக்கவில்லை.
அவன் தலையில் மெல்லியதாக யாரோ அடித்ததைப் போல உணர்ந்தான்.
"யாருய்யா அது?"-என்றவாறு திரும்பினான்.
"ஐ...நிலா நீயா?"
"நானும் பத்து நிமிஷமா நிற்கிறேன்.என்ன சைட் அடிக்கிறீயா?"
"ஐயயோ...அப்படி எல்லாம் இல்லைம்மா!"
"இரு அப்பாக்கிட்டயே சொல்றேன்."
"அய்யோ...செல்லம்ல...என் அழகு அக்கா தானே!"
"தடியா! முடிச்சிட்டியா?இல்லை...இன்னும் கொஞ்ச நேரம் ஆகுமா?"