16. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா
தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் அனந்த ராமன்.
திருமணத்தில் இணைந்து, இத்தனை வருடங்கள் வாழ்ந்த இரண்டு உள்ளங்கள். நடுவில் திடீரென்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல்.
இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ளாமல் இருந்தது, அடுத்தவர் இறங்கி வரட்டுமே என்ற வரட்டு பிடிவாதம். இது இரண்டும் தான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு.
யாருக்கு என்னவென்று எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுவது இல்லையே. காலம் கடந்த யோசனைகள் பலனற்று போய் விடுகிறதே.
'உங்களை பார்க்கணும் போலே இருக்கு வறீங்களா?' அழைத்திருந்தார் மைதிலி.
இடையில் வந்து இருவரையும் பிரித்து விட்டிருந்தது அந்த விபத்து. கடைசியில் அவரை உயிருடன் பார்க்க முடியாமலே போய்விட்டிருந்தது மைதிலியால்.
மருத்துவமனையிலிருந்து அந்த விபத்து பற்றிய செய்தியுடன் அழைப்பு வந்தது பரத்துக்கு. மருத்தவமனையை நோக்கி ஓடினான் அவன். அதற்குள் அங்கே எல்லாம் முடிந்திருந்து. கதறுவதை தவிர வேறெதுவுமே செய்ய முடியவில்லை மைதிலியால்.
அப்போது விஷ்வா இருந்தது விமானத்தில். அவன் விமானம் ஏறி இரண்டு மணி நேரங்கள் கூட ஆகி இருக்க வில்லை. அதற்குள் இங்கே எல்லாம் முடிந்து விட்டிருந்தது.
விமானத்தில் இருந்தவனை தொடர்புகொள்ள முடியவில்லை பரத்தால். அவனை தொடர்புகொண்டு அவன் வந்து சேர்வதற்கு குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது ஆகும் என்று புரிந்தது. விபத்தில் மறைந்தவரின் உடல். அதை வைத்துக்கொண்டு இத்தனை நாட்கள் காத்திருக்க வழியில்லை. தெரிந்தது அவனுக்கு.
அப்படி இருந்தும் காத்திருக்க அவனால் ஆன முயற்சிகளை செய்து பார்த்தான். இயலவில்லை. விளைவு, விஷ்வா வருவதற்கு முன்பாகவே, செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடித்திருந்தான் பரத்.
ஐந்தாறு நாட்கள் கழித்து தான் வந்தான் விஷ்வா. வீட்டுக்குள் கூட வரவில்லை அவன். அவனருகில் வந்து நின்றான் பரத்.
எங்கேடா எங்க அப்பா? குரல் உடைய கேட்டான் விஷ்வா.
விஷ்வா... நீ முதலிலே உள்ளே வா. பேசலாம்.
மிகப்பெரிய அதிர்ச்சியின் தாகத்தில் இருந்தான் விஷ்வா. எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை அவன்.
'நான் உன்னோட உட்கார்ந்து விருந்து சாப்பிட வரலை' பரத்தின் சட்டையை பிடித்து உலுக்கி கேட்டான் 'எங்கப்பாவை எனக்கு காட்டுடா.'
விஷ்வா.... என்றான் பரத். என் மனசாட்சிக்கு விரோதமில்லாம நீ வரவரைக்கும் காத்திருக்க முயற்சி பண்ணேண்டா. ஆக்சிடென்ட்டா. அத்தனை நாள் காத்திருக்க முடியாதுடா. எல்லாம் நம்ம கையை மீறி போயிடுச்சுப்பா.
'பொய் சொல்லாதே. நீ நினைச்சு இருந்தா வெயிட் பண்ணி இருந்திருக்கலாம். எனக்கு இப்படி துரோகம் பண்ணிட்டேயேடா' குரல் உடைந்து குலுங்கினான் விஷ்வா.
டேய்.... அவன் தோளை அணைத்துக்கொண்டான் பரத். 'நான் ஏன்டா உனக்கு துரோகம் பண்ண போறேன்'?
அவன் கையை தள்ளி விட்டு சொன்னான் விஷ்வா. 'உங்கப்பாவுக்கு நான் பரிகாரம் பண்ண நான் ஒத்துக்கலையே. அந்த கோபம்டா உனக்கு. எல்லாரும் சேர்ந்து எனக்கு துரோகம் பண்ணிடீங்க.'
'விஷ்வா... இப்படியெல்லாம் என்னாலே கனவிலே கூட யோசிக்க முடியாதுடா' நிதானமான குரலில் சொன்னான் பரத். எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை விஷ்வா.
அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மைதிலி கண்ணீருடன் வெளியே வந்தார்.
விஷ்வா.... குரல் நடுங்க அழைத்தார் அவர்.
நிமிர்ந்தான் விஷ்வா. நீயும் சேர்ந்து இப்படி பண்ணிட்டியே மா.?
இல்லைடா. வேறே வழி இல்லைடா.
முதல்லே எதுக்குமா அவரை இங்கே வரச்சொன்னே? இத்தனை வருஷம் கழிச்சு திடீர்ன்னு உனக்கு என்னமா அவர் மேலே பாசம்.? இப்படி அவரை வரச்சொல்லி கொன்னுட்டியே மா? உடைந்து அழுதான் விஷ்வா.
அந்த வார்த்தையில் மொத்தமாக உடைந்து போனார் மைதிலி. தனது வலிகளையெல்லாம் மகனின் தோள்களில் கொட்டி விடலாமென்று நினைத்தவரை அந்த வார்த்தைகள் கிழித்துப்போட்டன
என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்று புரியாமல் பேசிக்கொண்டே போனான் விஷ்வா.
விஷ்வாவின் மனநிலையை நன்றாக உணர்ந்துதான் இருந்தான் பரத். அந்த நிலையில் யார் இருந்தாலும் இதுதான் நடக்கும் என தெரியும் அவனுக்கு.
அவன் பேசி ஓய சிறிது அவகாசம் கொடுத்து விட்டு பிறகு மெல்ல சொன்னான் பரத். 'சரி போதும் விஷ்வா. உள்ளே வந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்.
'முடியாதுடா. இந்த வீட்டுக்குள்ளே இனிமே நான் வர மாட்டேன். துரோகிடா நீ. இனிமே எனக்கு ஜென்ம விரோதிடா. உன்னை என்னாலே மன்னிக்கவே முடியாதுடா.' பைத்தியக்காரன் போல் பேசிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான் விஷ்வா.
செயலற்றுப்போய் நின்றிருந்தார் மைதிலி.
நிஜமாகவே இந்த நொடி வரை அவனால் பரத்தை மன்னிக்கவே முடியவில்லை.
பழைய நினைவுகளிலேயே புரண்டுக்கொண்டிருந்தார் மைதிலி. அவர் கண்களில் கண்ணீர் பொங்கி வழிய, குலுங்கிக்கொண்டிருந்தார் அவர்.
அத்தை மட்டும் அல்ல. அந்த இரவில் பரத்துக்கும், விஷ்வாவுக்கும், இந்துவுக்கும் கூட உறக்கம் கிட்டவில்லை.
அம்மாவின் கையால் சாப்பிட்டு விட்ட நிறைவு ஒரு புறமிருக்க, அம்மாவை பார்த்தவுடன் அவனை தாக்கிய அப்பாவின் நினைவுகளும் ஒரு புறம் மனதை அழுத்திக்கொண்டிருந்தன. படுக்கையில் படுத்து புரண்டுக்கொண்டிருந்தான் விஷ்வா.
அவர் அவனை விட்டு பிரிந்த காலங்கள் அவனுக்கு நரகம். தனிமையும், வலியும் மன அழுத்தங்களும் சேர்ந்து அவனை புரட்டிப்போட்ட நாட்கள் அவை.
அந்த நேரத்தில் அவனுக்கு தாயாய், தந்தையாய் இருந்தது அபர்ணா மட்டுமே. நட்பின் முழு பரிமாணத்தை அவன் உணர்ந்தது அந்த நாட்களில் தான்.
அப்போது அவள் திருச்சியில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த போதும், தினமும் அவனுடன் பல மணிநேரங்கள் கைப்பேசியில் உரையாடுவாள்.
விடுமுறை நாட்களில் அவனை பார்க்கவென கிளம்பி சென்னைக்கு ஓடி வருவாள் அபர்ணா.
அவள் மட்டும் இல்லையென்றால் அந்த வலி மிகுந்த காலகட்டத்தை அவனால் கடந்திருக்கவே முடியாது.
'வேண்டாம். பழைய நினைவுகள் வேண்டாம்'. தலையை குலுக்கிக்கொண்டு எழுந்து வந்து . தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அதன் முன்னே அமர்ந்தான்.
கண் முன்னே பரத்தின் முகம் வந்து போனது. தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து, கண்கள் அதில் பதிந்திருக்க, மனதில் உள்ள குழப்பங்கள் எல்லாம் விரல்களில் வெளிப்பட ரிமோட்டை இயக்கிகொண்டிருந்தான் விஷ்வா.