08. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்
“என்னடா… என்னடா... உன்னாலே தொல்லையாப் போச்சு???” என நூறாவது தடவையாக மஞ்சரியின் செல்போன் குரல் எழுப்பியது…
அவள் யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ளக்கூட முயற்சிக்கவில்லை சிறிதும்… ஏனெனில் அவளுக்கு தெரியும் அழைப்பது அவன் தான் என்று…
அசட்டையாக செல்போன் சத்தத்தை பெரிது பண்ணாமல், அலுவலகத்திற்குள் நுழைந்தவளை துளைக்கும் பார்வையுடன் வழிமறித்தான் மைவிழியன்…
“ஏண்டி… ஒரு மனுஷன் விடாம போன் பண்ணுறானே… என்னதான் சொல்ல வர்றான்னு கொஞ்சமாச்சும் போன் அட்டெண்ட் பண்ணி கேட்டியாடி நீ?...”
கேள்வி கேட்டவனை கண்டு கொள்ளாது நகர முற்பட்டவளை கைப்பிடித்து இழுத்துச் சென்றான் மையன் வேகமாக…
“கையை விடுங்க…” என்ற அவளின் குரல் அவனுக்கு உறைக்காததுபோல் அவள் கையை இறுகப்பற்றியிருந்தான் அவன்…
வ்ருதுணனின் அறைக்குள் அவளை இழுத்துச் சென்றவன், அவளை நிதானமாக பார்த்தான்…
“இப்போ… எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க நீங்க?...”
“கையை விடப் போறீங்களா இல்லையா?...”
“நீங்க என்னதான் பேச முயற்சி பண்ணினாலும் எனக்கு உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை… புரிஞ்சதா?...”
என்ற அவளின் வரிசையான கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளையேப் பார்த்திருந்தவன், அவளின் கையினை விடாமல், அவள் கையை உறுவிக்கொள்ளவும் இடமளிக்காமல்,
“பேசிட்டியா?.. இப்போ நான் பேசலாமா?...” என கேட்டவன்,
பின், “நான் பண்ணினது தப்புதான்… அதுக்கு கோடி முறை வேணும்னாலும் நான் மன்னிப்புக் கேட்குறேண்டி… என்னை அடி.. திட்டு… ஆனா, இப்படி பேசாம இருந்து கொல்லாதடி… கஷ்டமா இருக்கு…” என வருத்தம் மிக அவன் சொன்னதும், அவள் முகத்தினை திருப்பிக்கொண்டாள்…
“ஹேய்… சாரிடி… மைனா…” என அவன் சொல்லி முடிக்கும் முன்,
“அப்படி கூப்பிடாதீங்க…” என்று அவள் கத்தினாள்…
“சரி…சரி… உன் கோபம் போகுற வரை வெயிட் பண்ணுறேன்… இப்போ நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… அதுக்குத்தான் அத்தனை தடவை கால் பண்ணினேன்…”
“ஒரு முக்கியமான விஷயமும் பேச நமக்குள்ள எதுவும் இல்லை.. வழியை விட்டா நான் போயிடுவேன்… கூடவே என் கையையும்…” என்றவள் அவனைப் பார்க்க…
“விஷயம் இருக்குதான்… ஆனா, அது உன் ஃப்ரெண்ட்ஸ் இரண்டு பேர் பத்தி தான்…” என்றான் அவன் நிதானமாக…
“என் ஃப்ரெண்ட்ஸ் பத்தி நீங்க என்ன பேசப்போறீங்க?... எனக்குப் புரியலை?...” என்றாள் அவளும்….
“இங்க பாரு மஞ்சு… இப்போ நான் சொல்லுறதுக்கு சரியா பதில் சொல்லு… வ்ருதுணன் பாலாவை விரும்புறது உனக்கு தெரியுமா?... தெரியாதா?....”
“தெரியும்…”
“சரி… அப்போ வ்ருதுணனுக்கும் வள்ளிக்கும் உள்ள உறவு முறையும் உனக்கு தெரியுமா??...”
“ஏன் தெரியாது… எல்லாம் தெரியும்… வள்ளி சொல்லியிருக்கா எங்கிட்ட மட்டும்…” என்ற மஞ்சு “ஆமா… இப்போ எதுக்கு இதையெல்லாம் கேட்குறீங்க?...” என்றாள்…
“சொல்லுறேன் காரணம் இருக்கு…” என்றவன் அவளை பார்த்துவிட்டு, “ஆனா, அதுக்கும் முன்னாடி எனக்கு சில உண்மைகளை தெளிவா சொல்லணும்…” என்றான்…
“என்ன உண்மை?...”
“பாலாவுக்கும்-வள்ளிக்கும் என்ன பிரச்சினை?... வள்ளி கல்யாணத்தை தள்ளி போடுறதுக்கு பாலாதான் காரணமா?... சொல்லு மஞ்சு…”
“அது… வந்து…” என்று இழுத்தவள் அமைதியாக இருக்கவும், அவன் தொடர்ந்தான்…
“நேத்து வீட்டுல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?..” என ஆரம்பித்து நடந்த அத்தனையையும் அவளிடத்தில் கூறியவன், “இப்போ சொல்லுறீயா?... உன் ஃப்ரெண்ட்ஸ் நல்லதுக்காகவும், என் அண்ணன்களோட நல்லதுக்காகவும் தான் கேட்குறேன்… சொல்லு மஞ்சு…” என அவன் கெஞ்சவும்,
அவளுக்குமே நடந்த நிகழ்வை அவனிடத்தில் சொல்லிவிடலாம் என தோன்ற, அதன் பின் தாமதிக்காமல் அனைத்தையும் சொல்லிமுடித்துவிட்டு அவனைப் பார்த்தாள்…
“இவ்வளவு நடந்துருக்கா?... என்னால நம்பவே முடியலை… ஆனா இப்போ பரிதாபப்படுறதால எதுவும் மாறிடப் போறதில்ல… ஆனா அதை மாத்துறதுக்கு எனக்கு உன்னோட உதவி வேணும்… செய்வியா மஞ்சு???...” என அவன் கேட்ட நொடியில் அவள் தலை அசைந்தது சரி என்று…
அதனைப் பார்த்து அவன் மகிழ்ந்த மறுநொடியே “இதெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ்காகத்தான்… வேற யாருக்காகவும் நான் சரி சொல்லலை…” என்றாள் அவள் முறுக்கிக்கொண்டு…
அவளின் பேச்சினைக் கேட்டு புன்னகைத்தபடி, “சரி மை…னா…” என்று சொல்ல வந்தவன், அவளின் முறைப்பினைப் பார்த்துவிட்டு… “சரி… மஞ்சு… முதலில் நாம துணா-பாலாவை சரி பண்ணலாம்…” என்று சொல்ல…
“அவர் நல்லாத்தான் இருக்குறார்… தெளிவாகவும் தான்… ஆனா, இவ தான் முரண்டு பிடிக்குறா… முதலில் இவளை ஒரு வழி பண்ணனும்… அதுதான் சரி…” என அவள் சொல்லவும்,
அவனும், “சரி… அப்போ இனி பாலாதான் நம்ம டார்கெட்… அடுத்ததா யுவி-வள்ளி… சரிதானா?...” என கேட்க…
“ஹ்ம்ம்… சரி…” என்றவள், சில நிமிடங்கள் பொறுத்துப்பார்த்துவிட்டு,
“அதான் எல்லாம் பேசி முடிவு எடுத்தாச்சுல்ல… இப்பவாச்சும் கையை விட்டா உங்களுக்கு நல்லது…” என அழுத்தி சொல்லவும்,
அவன் மனமில்லாமல் கையை விட்டான்…
அறையை விட்டு வெளியே சென்றவள், மீண்டும் திரும்பி வந்து, “நான் பாலவள்ளிக்காகத்தான் பேசுறேன்… உங்ககிட்ட… மத்தபடி எனக்கு உங்கமேல உள்ள கோபம் மாறலை… மாறாது… அவங்களை சாக்கா வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசி பழக முயற்சி பண்ணி என் கோபத்தை பெருசாக்க மாட்டீங்கன்னு நம்புறேன்…” என்றவள் அவன் பதிலே சொல்ல இடமளிக்காது அங்கிருந்து சென்று விட, மையனும் அவள் போனதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு சிரிப்புடன் அங்கிருந்து அகன்றான்…
“ஹேய்… பாலா… என்ன இன்னைக்கு லேட்… வழக்கமா நீ கொண்டு வந்து கொடுக்குற சாப்பாடு தான் மஞ்சுக்கு காலை டிபனே… இன்னைக்கு அது மிஸ் ஆகிடுச்சுன்னு பாவம் மீட்டிங்க் போக விடாம வள்ளியை பிடிச்சு வச்சிட்டிருந்தா, மஞ்சு… இப்பதான் அவளை சமாதானம் பண்ணிட்டு வள்ளி மீட்டிங்க் போயிருக்கா… மஞ்சுவும் எங்க போனான்னு தெரியலை… நீ சீக்கிரம் அந்த ப்ரெசண்டேஷன் ரெடி பண்ணு பாலா… யுவி சார் இப்போ கூப்பிட்டு கேட்பாலும் கேட்பார்…” என பாலாவுடன் உடன் பணிபுரியும் பெண் ஒருத்தி பாலாவிடம் சொல்லிவிட்டு போக,
பாலாவோ அவள் சொன்னதை அசைபோட்டவாறு அமர்ந்திருந்தாள்..
காலையில் இருந்தே நடப்பது எதுவும் அவளுக்கு சரியாக தோன்றவில்லை…
அதிகாலையிலே அந்த கனவு வேறு… எதுவோ நடக்கப்போகிறது என்று சொல்லாமல் சொல்ல… அவள் மனதினை பயம் ஆக்கிரமித்தது…
கைகட்டி அவளையே பார்த்திருந்த வ்ருதுணன்… இதழோரம் அவளுக்காக பூத்திருந்த புன்னகையுடன் நின்றிருந்த வ்ருதுணன்… அவள் பிடிக்கவில்லை என்று சொன்னபோதிலும், அவளுக்காக காத்திருக்கும் வ்ருதுணன்… அவளை ஒரு வார்த்தை கூட குறை சொல்லாது அமைதி காக்கும் வ்ருதுணன்… அவளை எந்தவிதத்திலும் வற்புறுத்தாத வ்ருதுணன்…
வ்ருதுணன்… வ்ருதுணன்… வ்ருதுணன்… என அவளின் மனமெங்கும் அவனது பெயரின் எதிரொலிகள்…
கடவுளே… எதுக்கு இப்படி அவர் நினைவாவே நான் இருக்கேன்?... எனக்கு என்ன ஆச்சு?... என்று அவள் தனக்குள் கேட்டுக்கொண்டிருந்த வேளையில்,
“ஒரு காதல் வந்துச்சோ… ஒரு காதல் வந்துச்சோ…” என்ற பாட்டை பாடியபடி அங்கே வந்தாள் மஞ்சரி…
மஞ்சரியின் பாட்டைக் கேட்ட பாலாவோ அதிர்ச்சியுடன் மஞ்சரியைப் பார்த்து கோபப்பட்டு,
“உனக்கு பாடுறதுக்கு வேற பாட்டே இல்லையா?.. ஏண்டி காலையிலேயே இம்சை பண்ணுற?...” என்று திட்ட, பாலாவின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக மைவிழியன் அங்கே வந்தான்…