03. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி
"சார், சார்", என்று அழைத்த குரலில் நின்று திரும்பினான் சரண்.
அவன் பின்னே சுமார் ஐந்தரை அடி உயரத்தில் திருத்தமான முகத்துடன் நின்றிருந்தவளை கண்டவன், பார்வையாலேயே என்ன ? என்று கேட்க, " பர்ஸ் கிழே விழுந்து விட்டது, இந்தாருங்கள்" என்று பர்ஸை அவனிடம் தந்தாள்.
"தாங்க்ஸ்"
"ஏதோ யோசனையில் பர்ஸை தவற விட்டதை கவனிக்க வில்லை."
தன் பின் வந்த தம்பியை காணாமல் திரும்பிய கரண், அவன் ஒர் அழகிய கண்ணியமாகத் தெரிந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். "யார் இவள்? சரணுடன் பேசுபவள்?" என்று யோசிக்க, அதற்குள், சரண் மீண்டும் அவனை நோக்கி வந்தவன்,
"வாடா, கரண் போகலாம்" எனக் கூறி பார்க்கிங்கில் இருந்த அவர்கள் காரை சென்றடைந்தனர்.
பர்ஸை கொடுத்து விட்டு, ' என்ன இவன் இப்படி கேர்லெஸ்ஸாக பர்ஸை கீழே போட்டு விட்டு நாம் திருப்பி கொடுத்தவுடன் கூட, ஏதோ யோசனையில் பர்ஸை தவற விட்டேன் என்கிறான், பார்த்தால் பணக்காரனை போல் இருக்கிறான், அதனால் தான் இது பெரிய விஷயமாக தோன்ற வில்லையோ? நமக்கு என்ன, ஒருவேளை நிஜமாகவே ஏதாவது இருக்கலாம்...முதலில் நாம் வந்த வேலையைப் பார்ப்போம்' ... என்று நினைத்தவள் அந்த பெரிய வளாகத்தினுள் நுழைந்தாள் துளசி. சென்னை அடையாறில் இருக்கும் அந்த பிரம்மாண்டமான மருத்துவ வளாகம் அவளை அச்சுறுத்தியது.
'டாக்டர் கிரிதரன் கூறியது இவ்வளவு பெரிய மருத்துவமனையா?'
'இந்த ஹாஸ்பிடல் வெளியிலிருந்து பார்த்தாலே பயமுறுத்துகிறதே? என்னடா, இது நமக்கு சரிபட்டு வருமா? டாக்டர். பாலாஜியை எப்படி பார்ப்பது? என்ன தான் டாக்டர். கிரிதரன் முன்னமே போன் செய்து இருந்தாலும், இதன் உள்ளே நுழையவே பயமாக இருக்கிறதே? '
யோசித்தபடியே ரிசப்ஷனை நோக்கி சென்றவள், அங்கு அமர்ந்திருந்த அழகான ரிசப்ஷனிஸ்டிடம், தன் பெயரைக் கூறி, தன்னை டாக்டர் கிரிதரன் அனுப்பியிருப்பதாகவும், டாக்டர் பாலாஜியை பதினொன்று மணி அளவில் சந்திக்க சொன்னதாகவும் சொன்னாள்.
"ப்ளீஸ், வெயிட், லெட் மி செக் வித் டாக்டர் பாலாஜி அண்ட் கம் பேக் டு யூ" என்றவளிடம் ஒரு "தாங்க்ஸ்" சொல்லிவிட்டு அங்கிருந்த ரிசெப்ஷன் சேரில் சென்று அமர்ந்தாள்.
தன்னைச் சுற்றி பார்வையை சுழல விட்டவள், இது என்ன மருத்துவமனை மாதிரியே இல்லையே! இவ்வளவு நேர்த்தியாகவும், அழகாகவும் ஏதோ பெரிய ஹோட்டலைப் போல் இருக்கிறது. மருத்துவமனைக்குரிய பரபரப்பும், அழுகையும், அலறலும், நாற்றமும் இல்லாமல் தூய்மையாகவும் , அமைதியாகவும், ஒருவித நேர்த்தியுடனும் இருந்தது.
வாசனை பினாயில் மணமும், அங்கங்கே சீருடையுடன் பளிச்சென்று சென்று கொண்டிருந்த வெள்ளை யூனிபார்ம் அணிந்த செவிலியர்களும், கண்ணில் அவ்வப் போது தட்டுபட்ட ஒரிரு வெள்ளை கோட் அணிந்த மருத்துவர்களும், இது மருத்துவமனையே என்று அவளுக்கு உறுதி கூறியது.
உம்..."நேற்று காலையில் தான் அந்த கோடங்கி திருமணம், ராஜ யோகம்" என்று ஏதேதோ பிதற்றினான். இன்று என்னவென்றால் இந்த மருத்துவமனையில் உட்கார்ந்து இருக்கிறேன்! இதுதான் ராஜ வாழ்க்கையா? நார்மலான வாழ்க்கை வாழ்ந்தால் போதாதா? ஒரே நாளில் இத்தனை துன்பமா? இது தான் விதியா? ", என்று எண்ணிக் கொண்டிருந்தவளை வரவேற்பு பெண்,
"மேடம், டாக்டர் பாலாஜி உங்களை பார்க்க விரும்புகிறார்". இரண்டாவது தளத்தில், மூன்றாவது அறை டாக்டருடையது. உடனே நீங்கள் செல்லுங்கள். உங்களுக்காக டாக்டர் வெயிட் செய்கிறார்" என்று கூறிவிட்டு தனக்கு வந்த அடுத்த காலை அடெண்ட் செய்தாள்.
நன்றி கூறி இரண்டாவது தளத்தை அடைந்த துளசி, டாக்டர். பாலாஜி என இருந்த பெயர் பலகையை அடையாளம் கண்டு, கதவை மெல்ல தட்டினாள்.
"மே ஐ கம் இன் டாக்டர்"
யெஸ், ப்ளீஸ் கம் இன்" என்று அழைத்த குரலில்,
உள்ளே சென்ற துளசி, இருக்கையில் அமரச் சொன்ன டாக்டருக்கு நன்றி சொல்லி சேரில் அமர்ந்தாள்.
"டாக்டர், என் பெயர் துளசி, டாக்டர் கிரிதரன் உங்களைப் பார்க்க அனுப்பினார். என் பாட்டியின் மெடிகல் ரிபோர்ட்ஸ் இதோ. உங்களிடம் பேச சொன்னார்" என்றாள் மெல்லிய குரலில்.
தன் எதிரில் சோகமாக அமர்ந்திருக்கும் அந்த சிறிய பெண்னை உற்று பார்த்த டாக்டர் பாலாஜி, இந்த சோகத்திலும் கூட இந்தப் பெண் தெய்வீக அழகுடன் இருக்கிறாளே? என்று வியந்தபடி, ஒன்றும் கூறாமல் அந்த ரிப்போர்ட்டை படிக்கலானார்.
சில விநாடிகளுக்குப் பின், "துளசி மெடிகல் ரிபோர்ட் துல்லியமாக இருக்கிறது. உன் பாட்டிக்கு பி.பி, சுகர், இரண்டும் அதிகமாக இருக்கிறது."
"முதலில் ஆஞ்சியோகிராம் செய்து விட்டு பை பாஸ் சர்ஜரி , பிறகு கொஞ்சம் கேப் விட்டு செய்ய வேண்டியிருக்கும்... இல்லை, ஸ்டென்டிங்க் செய்தால் சரியாக விடுமா என்று பார்க்க வேண்டும்."
"அம்மா, துளசி, நான் ஒரு ஆங்காலஜிஸ்ட். புற்று நோய் மருத்துவன். இதை பற்றி நான் தீர்மானிக்க முடியாது. எனது நண்பன் டாக்டர். சுதாகரன் இங்கு விசிடிங் கார்டியாலஜிஸ்ட். அவர் அரசு பொது மருத்துவமனையில் பணி புரிகிறார். அவரிடம் உன் பாட்டியின் கேசை ரெஃபர் செய்கிறேன்".
டாக்டர்" என்று மெல்ல இழுத்த துளசியை ,
"என்னம்மா?' என்றவரிடம்,
"இந்த மாதிரி ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவு ஆகும்? எனக்கு உத்தேசமாக சொன்னால் கொஞ்சம் ஏதுவாயிருக்கும்" என்றவளை பார்த்தவர்,
"முதலில் உன் பாட்டியை உங்கள் ஊரிலிருந்து இங்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஷிப்ட் செய்ய வேண்டும். "
"பின்னர், இங்கு வந்தவுடன் அனைத்து டெஸ்ட்டுக்களையும் எடுக்கச் சொல்லுவார்கள். இரண்டு ஆபரேஷன்களையும் பதினைந்து இருபது நாள் இடைவேளயில் செய்ய வேண்டி வரலாம். எப்படியும் நீங்கள் குறைந்தது ஒரு மாத காலமாக இருக்க வேண்டியதாக இருக்கும். ஐ.சி.யூ., மற்றும் மருந்து, மாத்திரை, என குறைந்த பட்சம் ஒரு பத்து லட்சம் வரை ஆகலாம்" என்று சொன்னவர்,
'மேலும், இதுவோ தனியார் மருத்துவமனை,... நிறைய செலவு ஆகும். நீ சாதாரண ஹாஸ்பிடலில் சேர்த்தாலும் குறைந்தது நான்கு, ஐந்து லட்சம் வரை இழுக்கும்" என்றார் டாக்டர் பாலாஜி.
ஒன்றும் கூறாமல் அவர் சொல்லுவதை திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்த துளசி,
"அவ்வளவு பணமா? நான் எங்கே போவேன்!"
"டாக்டர் என்னால் ஒரு லட்சம் வரை தான் புரட்ட முடியும். அதுவே கஷ்டம்."
"என்ன செய்வேன் டாக்டர்? என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது.... எனக்கு இருப்பது பாட்டி மட்டும்தான். எப்படியாவது பாட்டியை காப்பற்றுங்கள் டாக்டர்?.....