11. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி
ஏழாம் மாதம் துவக்கத்திலேயே துளசிக்கு வளைகாப்பிற்கு ஏற்பாடு செய்ய துவங்கி விட்டார் சியாமளா. மாமாவும், மாமியும், ஒரு வாரம் முன்னேயே அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். துளசிக்கு பார்த்து பார்த்து அனைத்தையும், சியாமளாவுடன் சேர்ந்து செய்து கொண்டிருந்தார் மாமி.
மாமி தினமும் ஏதோ ஒரு புது பலகாரத்தை செய்து, அதுவும், துளசியின் உடல் நலத்தை கருதி, உப்பு, காரம் ,புளிப்பு, அதிகம் இல்லாமல் சரி விகிதத்தில் சேர்த்து, அசத்தினார். துளசியுடன் சேர்ந்து அனைவருமே மாமியின் சமையலுக்கு அடிமையானார்கள். ராம் சரணோ, ஒரு படி மேலே சென்று சமையல் செய்யும் வள்ளியை மாமியிடம் கொஞ்சம் ட்ரையினிங் எடுத்துக் கொள்ள சொல்லி அவளை கடுபேற்றினான்.
தாயில்லா குறையை சியாமளாவுடன் சேர்ந்து , மாமியும் கவனித்ததில் துளசி ஒரு சுற்று பெருத்து, முகம் கொள்ளா மகிழ்சிசியுடன் அவர்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள். இதன் நடுவில் கம்ப்யூட்டர் கிளாசும் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.
துளசி கம்ப்யூட்டர் கிளாஸ் செல்லும் பொழுது, மாமியுடன் சேர்ந்து துளசிக்கு வளைகாப்புக்கு வேண்டிய புடவை, நகை, வளையல்கள், மற்றும் அனைத்து சாமான்களையும், ஜோடி போட்டுக் கொண்டு சென்று வருவது சியாமளாவிற்கு பிடித்து இருந்தது. சியாமளாவிற்கு, மாமியை ரொம்ப பிடித்து விட்டது. ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல் அக்கா, அக்கா என்று அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டு அவருடன் நன்கு உறவாடினார். பிறந்த வீட்டினர் இல்லாத குறையை மாமி போக்கி விட்டதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். எந்த வேலையும் மாமியை கேட்டு அவர் அறிவுரைப் படியே செய்து கொண்டிருந்தார்.
கிருஷ்ணனும், தன் பங்குக்கு, மாமாவுடன் நன்கு பழகி அவரை தன் சொந்த சகோதரரைப் போலவே கவனித்துக் கொண்டார். அவர் தனிமையை உணராமல் இருக்க, தான் அலுவலகம் செல்லும் டயத்தை சற்று குறைத்துக் கொண்டார்.
ஒரு சுப யோக சுப தினத்தில், துளசியை நன்கு அலங்கரித்தவர்கள், அவளை மணையில் உட்கார வைத்து, மஞ்சள்,குங்குமம் இட்டு, பூ முடித்து சுமங்கலிப் பெண்கள் வளையல் அடுக்கினார்கள்.
துளசி நல்ல கற்பகப் பச்சையில், சின்ன சின்ன தங்க பூக்கள் உடலெங்கும் இறைந்திருக்க, அரக்கு பார்டரில் சின்ன கண்ணன்களுடன், முந்தியில் ஒரு அழகான வெண்ணை பானை வைத்திருந்த பெரிய கண்ணனை உடைய சேலையை அணிந்திருந்தாள். அவளுக்கு அந்த சேலை மிகப் பிரமாதமாக பொருந்தியிருந்தது.
சியாமளா தங்கள், வீட்டின் சார்பில் தாயில்லாத துளசிக்கு நான்கு வைர வளையல்கள், கையில் அணிவித்துவிட்டு, அதற்குப் பொருத்தமான வைர அட்டிகையுடன் கூடிய வைர தோடுடன் கூடிய ஜிமிக்கியும், அவளிடம் தங்கள் பரிசாக கொடுத்தார். மாமி கூட தங்கள் சார்பாக இரண்டு தங்க கங்கண் வளையல்களைப் போட்டார். ஏதற்கு மாமி, இதெல்லாம் என்ற துளசிக்கு, " நீயும், என் மகள் சுமதி மாதிரி தான், ...என் வயிற்றில் பிறக்காத பெண்ணடி நீ", என்று அவளை அடக்கி விட்டார்.
சரணுக்கு, இன்று சர்வலங்கார பூஷிதையாக இருக்கும் துளசியைப் பார்கப் பார்க உணர்ச்சி வயப் பட்டு போனான். அவளையே, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அபொழுது, யாரோ ஒரு உறவினர், "சரண் ஆனாலும், நல்ல வேகமப்பா..... திருமணம் ஆனவுடனேயே கையோடு பிள்ளையும் ரெடி பண்ணி விட்டான்.. இந்த காலத்து பசங்கள் எல்லாவற்றிலும் பாஸ்ட் தான்.... என்று வம்புக்கு இழுத்தார்.
முகம் சிவந்த சரண், உடனே, " ஆம் பெரியம்மா,... இவ்வளவு அருமையான , அழகான பெண்டாட்டி அமைந்திருக்கிறாள். ஆண்டவன், இன்பத்தை அடுக்கடுக்காக தொடர்ந்து வழங்குகிறான். " என்றான் ப்ட்டென்று.
சியாமளாவுக்குமே, மனதிற்குள் என்ன இந்த பொம்பளை இப்படி அசிங்கமாக , சமய சந்தர்ப்பம் தெரியாமல் பேசிகிறது' என்று நினைத்தவர் வெளியே, "அக்கா, துளசியின் நல்ல மனசுக்கு, கடவுள் அருள் கிடைத்து விட்டது.. அது அது அந்த வேளையில் நடந்தால் தான் என்றுமே நல்லது" துளசிக்குப் பரிந்து பேசினார்.
துளசிக்கோ, அவமானத்தில் முகம் சிவந்து விட்டது... மனதின் ஓரத்தில் ஒரு நெருடல்... இன்று இந்த பெரியம்மா, விஷமமாக கேட்டார்களா , இல்லை வாழ்த்துவது போலவா? என குழப்பிக் கொண்டிருந்த போது,
சரண், அவள் கையைப் பற்றி, "எதற்கும் கவலைப் படாதே... நான் இருக்கிறேன்" காதோரமாக அவளுக்கு சொல்லி நம்பிகையூட்டினான்.
அப்பொழுதும் அவள் முகம் தெளியாததைப் பார்த்து, அவள் மூடை மாற்ற பேச்சை திசை திருப்பி, "அம்மா, துளசிக்கு என் பரிசு" என்று கூறி, தன் பான்ட் பாக்கெட்டில் இருந்து அழகிய சிறு நகை பெட்டியை எடுத்தான்... பின் பெட்டியை திறந்து, அழகான ஓற்றைக் கல் வரிசையில் கீழ் அமைந்திருந்த ரூபி ரோஜா வடிவ பெண்டடுடன் இருந்த வைர நெக்லஸை அணிவித்தான்... அவன் நெக்லஸ் அணியும் போது அவனையே தன் பெரிய கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்த துளசிக்கு மேனி சிலிர்த்தது.... மனம் நடுங்கியது... கடவுளே, இவன் ஒரு தொடுகையிலேயே, என் மனம் இப்படி உணர்ச்சிவசப்படுகிறதே.... இன்னும் இரண்டு மாதம் கழித்து என் நிலை என்னவாகும் என்று எண்ணியவள் மனம் நடுங்க, துளசியின் காதருகில் சரண், " இதோ பார்.... எதையும் எண்ணி, மனம் கலங்காதே. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.. கவலை படாதே", அவள் மனம் போகும் போக்கை அறிந்தவன் போல அவளுக்கு ஆறுதலாக சொன்னான்.
துளசி, அவன் பரிசுக்கு தாங்க்ஸ் கூற, சியாமளாவோ, "சரண், உன் செலக்க்ஷன் அருமை. எங்கேயடா, இதெல்லாம் கற்றுக் கொண்டாய்... உன் அப்பாவிற்கு இத்தனை வருடம் ஆனாலும் ஒன்றுமே இன்னும் சரியாக தெரியாது " அவனை பாராட்டியவர், கிருஷ்ணனை பார்த்து வைத்தார். சரண் தன் தாய்க்கு ஒரு சின்ன புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான்.
அந்த இனிமையான வேளையில் அவர்கள் சந்தோஷத்தை சீர் குலைக்க என்றே அங்கே அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்தாள் காருண்யா.
இவள் எதற்காக இங்கு வந்தாள் , யார் இவளை அழைத்தது என்ற யோசனையில் இருந்த சரண்,
"ஹாய்... சரண்... மனைவிக்கு வளைகாப்பா... உம் நடத்துங்கள்... நடத்துங்கள்.. என்னை நீங்கள் அழைக்க வில்லையென்றாலும், நானே விஷயம் அறிந்து வந்து விட்டேன்" என்று கொஞ்சி கொஞ்சி பேசியவளை,
அத்தனை பெண்கள் நின்றிருக்க, யாரிடமும் பேசாமால் நேராக வந்து தன்னிடம் பேசுபவளை கண்டு முகம் இறுக, மற்றவர் அறியாமல் முறைத்தான்,
அதற்குள் சியாமளா, "சரண் , யாரப்பா... இந்தப் பெண்... உனக்கு தெரிந்தவர்களா... வாம்மா" என்று இன் முகத்துடன் அழைத்தார்.
காருண்யாவோ, இதுதான் சாக்கு என்று, "வணக்கம் ஆண்ட்டி... என் பெயர் காருண்யா... நான் உங்கள் இறந்து போன மகன் ராம் கரணின் பிரண்ட்... சரணுக்கும் நான் பரிச்சியமானவளே... நான் சரணது திருமண ரிசெப்ஷனுக்கு கூட வந்திருந்தேனே.... நீங்கள் அந்த கூட்டத்தில் என்னை மறந்திருப்பீர்கள்.... சரண் மனைவிக்கு வளைகாப்பு என்று கேள்விபட்டு, நானே என்னை அழையா விட்டாலும் வந்து விட்டேன்... " என்று கிளி போல மொழிந்தவளை வெறுப்புடன் நோக்கினான் சரண்.
சியாமளா, "அப்படியா அம்மா, சாரி.. அன்று அந்த கூட்டத்தில் உன்னை பார்த்ததில், இன்று எனக்கு சட்டென்று, அடையாளம் தெரியவில்லை. வாம்மா... துளசியைப் பார்.. இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்" என்று முகம் மாறாமல் சொன்னவர், 'இவள் இங்கு வந்து இறந்த என் மகன் கரணை இப்பொழுது ஞாபகப்படுத்த வேண்டுமா' என மனதில் நொந்து கொண்டவர், கரண் நினைவு வர சரணிடம் தலையாட்டி விட்டு மற்ற உறவினர்களை காண அங்கிருந்து அகன்றார்.