02. கிருஷ்ண சகி - மீரா ராம்
மகத்….
சென்னையில் உள்ள பிரபலமான கே.என் மருத்துமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து கொண்டிருந்தான் அவன்…
காலையிலேயே மருத்துவனைக்குள் சீரான நடையுடன் வந்துகொண்டிருந்தவனிடம்,
“என்ன டாக்டர் தம்பி… இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்க…?...” என அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வயதான தொழிலாளி சதாசிவம் கேட்க,
“இன்னைக்கு ஒரு பெரியவரை செக்கப்பிற்கு வர சொல்லியிருக்கேன்… அநேகமா அவர் இப்போ வரக்கூடும்… அதான் அவர் வந்து வெயிட் பண்ணக்கூடாதுன்னு நான் வந்துட்டேன் தாத்தா…” என பதில் சொன்னான் அவன் புன்னகையோடு…
“அதுசரி…. நல்லபுள்ளைப்பா நீ… டாக்டருக்குத்தான் எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க….” என்றார் அவரும் சிரித்தபடி…
“அத விடுங்க தாத்தா… அதான் செடிக்கெல்லாம் தண்ணீர் ஊத்தியாச்சு தானே… பின்னே ஏன் இங்க வெயில்ல நிக்குறீங்க… உள்ளே வாங்க…” என அவன் அவரிடம் உள்ளே வர சொல்ல,
“அது சரி… 5 மணிக்கே வந்து என்னோட சேர்ந்து இங்க இருக்குற எல்லா செடிக்கும் தண்ணீர் ஊத்திடுற…. அப்புறம் இப்படி வெயில் அடிக்குதுன்னு உள்ளே வர சொல்லி, உன் ரூமுக்கு கூட்டிட்டு போயிடுற… நீ உங்கிட்ட வருகிறவங்களை பார்த்து முடிக்கிற வரைக்கும் சின்ன சின்ன உதவி கெஞ்சி கூத்தாடி நான் செஞ்சு முடிப்பேன்…. நீ பார்த்து முடிச்சதும், ஹாஸ்பிட்டல் ஃபுல்லா ஒரு ரவுண்ட்ஸ் வருவ… துணைக்கு என்னையும் அழைச்சிட்டு போவ… அப்புறம் சாயங்காலம் என்னை வீட்டுல விட்டுட்டு நீயும் கிளம்பி போற… எப்படி தம்பி உன்னால இப்படி இருக்க முடியுது???...” என தழுதழுத்த குரலில் அவர் சொல்ல,
“தாத்தா எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… இப்படி எல்லாம் நீங்க இமோஷனல் ஆகக்கூடாது இனி… சரியா?... ஆமா சாப்பிட்டீங்களா?...” என அவன் இலகுவாக கேட்க
அவர் சிரித்தபடி, “நீ மாறவே மாட்ட மகத்…” என்றவர், “நான் சாப்பிடாட்டா உன் பாட்டி சும்மா விடுவாளா என்ன?...” என சொல்ல
“ஹாஹா… இது இது இதுதான் பாட்டிகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது…” என்றான் அவனும் அழகாய் புன்னகைத்தபடி…
“நீ சாப்பிட்டியா மகத்?...”
“ஹ்ம்ம்… ஆச்சு தாத்தா…. வாங்க நாம உள்ளே போகலாம்…” என அவன் அவரின் கைப்பிடித்தபடி உள்ளே செல்ல, அவரும் அவனுடன் சென்றார்….
எதிரே தென்படுபவர்கள் எல்லாரும் சிநேகமுடனும், மரியாதையுடனும் அவனுக்கு குட்மார்னிங்க் விஷ் செய்ய, அவனும் சிறு தலை அசைப்போடு அதனை வாங்கிக்கொண்டு பதிலுக்கு விஷ் செய்தபடி அவனுடைய அறைக்குள் சென்றான் சதாசிவம் தாத்தாவுடன்…
சற்று நேரம் கழிந்ததும், அவன் எதிர்பார்த்த பெரியவர் வர, அவருடன் சிரித்து பேசிக்கொண்டே சகஜமாக அவருக்கு செக்கப் செய்தான்…
“ஹ்ம்ம்… நிறைய இம்ப்ரூவ்மென்ட் இருக்கு…. இன்னும் கொஞ்ச நாள் தான் பெரியவரே… அப்புறம் பாருங்க… இருபது வயசு பையன் கூட தோத்து போயிடுவான் உங்க சுறுசுறுப்பு பார்த்து….” என அவன் உற்சாகமாக சொல்ல
அவரோ, “வைத்தியம் பார்க்குறதுக்கு நீங்க இருக்கும்போது எல்லாம் சாத்தியம் தானே டாக்டர் தம்பி… எல்லாம் உங்க கைராசி தான்….” என்றார்….
பதிலுக்கு வெற்று புன்னகையை சிந்தியவன், “டைமுக்கு நல்லா சாப்பிடுங்க… இப்போதைக்கு எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு நான் சொல்லியிருக்கேன்ல… அதை மட்டும் கவனத்துல வைச்சிக்கோங்க பெரியவரே… மறந்துடாதீங்க…. சரியா?...”
“எப்படி தம்பி மறக்க முடியும்?... தினமும் அந்த வார்த்தை தான் என்னைக் கட்டிப்போடுது இப்போவரை… சீக்கிரம் நான் வேலைக்குப் போகணும்… அதுதான் தம்பி என் விருப்பமும் கூட…”
“உங்க விருப்பம் கண்டிப்பா நிறைவேறும் பெரியவரே… ஆமா எங்க ஆச்சியைக் காணோம்?...”
“இல்ல தம்பி… அவளை நான் தான் வரவேண்டாம்னு சொல்லி வீட்டுலயே விட்டுட்டு வந்துட்டேன்… அதான் நான் இப்போ கொஞ்சம் குணமாகிட்டேன்ல…”
“கொஞ்சம் இல்ல பெரியவரே… நிறையவே தான்…” என்றவன், சற்றும் யோசிக்காமல்,
“ஆச்சிக்கு என்ன?...” என்று வினவினான்…
“அவளுக்கென்ன டாக்டர் தம்பி… நல்லா இருக்கா….”
“ஆச்சி நல்லா இருந்தா இப்போ உங்களோட இங்க வந்திருப்பாங்களே… அவங்க வராதப்பவே எனக்கு விஷயம் தெளிவாயிட்டு…. சொல்லுங்க என்னாச்சு???…” என்றவனை கண் கலங்க பார்த்தவர்,
“அது…. வந்து….” என இழுக்க….
“சொல்லுங்க…. மறைக்காம சொல்லுங்க… டாக்டர் கிட்ட பொய் சொல்ல கூடாது….” என அவன் தன் இரு கைகட்டி சொல்ல…
மறைக்காமல் அனைத்தையும் அவரும் சொல்ல, அவன் ஒரு நிமிடம் கூட யோசிக்காது, அந்த பெரியவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன், சதாசிவம் தாத்தாவிடம் தான் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிக்க்கொண்டிருந்தவனின் கைகள் தனது செல்போனை எடுத்து யாரிடமோ பேச, நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார் அந்த பெரியவர்…
விரைந்து சென்றவனது கார் ஒரு சிறிய குடிசை வீட்டின் முன் நிற்க, பெரியவர் மௌனமாக நின்றிருந்தார்….
“வாங்க….” என அவரை அழைத்தவன், உள்ளே செல்ல, அங்கே இருந்த சின்ன கயிற்று கட்டிலில் ஒரு வயதான பெண்மணி உடம்பிற்கு முடியாமல் படுத்துக்கிடந்தார்…
வேகமாக அவரின் அருகே சென்றவன், அவரை பரிசோதித்துவிட்டு,
“மைகாட்… இவ்வளவு நெருப்பா கொதிக்குது… ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்திருக்கலாம் தானே பெரியவரே…” என அவன் சற்றே வருத்தத்துடன் அவரைப் பார்க்க, அவரோ அமைதியாய் இருந்தார்…
பின்னர் ஆச்சிக்கு ஊசி போட்டு மருந்து கொடுத்தவன், அவரை கண் விழிக்க வைத்தான்…
“வாங்க… டாக்டர் தம்பி…. எப்படி இருக்கீங்க?...” என எழுந்து கொள்ள போன ஆச்சியை தடுத்த மகத்,
“ஆச்சி வேண்டாம் எழுந்துக்காதீங்க… படுங்க…” என அவரை படுக்க வைத்தவன்,
“சாப்பிட எதுவும் கொடுத்தீங்களா?...” என பெரியவரை பார்த்து கேட்க…
அவர் இல்லை என தலை அசைத்தார்….
சட்டென்று அந்த அறையின் ஓரத்தில் சிறிதாக இருந்த அடுப்படிக்கு சென்றவன், அங்கிருந்த பானைகளை திறந்து பார்த்தான்… எல்லாம் காலியான வெற்று பாத்திரங்கள்…
கோபமாக அங்கிருந்து சென்றவன், சற்று நேரம் கழித்து திரும்பி வந்தான், கை நிறைய பைகளுடன்…
விறகு அடுப்பை பற்ற வைத்தவன், அதில் கஞ்சி காய்ச்சி ஆச்சிக்கு கொடுத்துவிட்டு,
“அன்னைக்கே கேட்டேன் தானே…. பெரியவரே…. ஏன் இப்படி?.... எங்கிட்ட எதுக்கு மறைக்கணும்னு நினைக்குறீங்க?....” என அவன் ஆற்றாமையுடன் கேட்கவும்,
“உதவிக்கும் ஒரு எல்லை இருக்கு தம்பி…” என அவர் சொல்லிவிட,
“உறவுக்கு எல்லை இல்லை பெரியவரே…” என்றவன், ஆச்சியின் கைகளில் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்துவிட்டு,
“அந்த பையில உங்களுக்கு சாப்பாடும் மற்ற மளிகை பொருட்களும் இருக்கு… ஆச்சி எதுவும் சாப்பிடாததால தான் ரொம்ப வீக் ஆயிட்டாங்க… சாதாரண பீவர் தான்… பயப்பட எதுமில்லை…” என்றவன் வெளியே செல்ல எத்தனித்த போது,
“டாக்டர் தம்பி….” என்ற பெரியவரின் குரல் கேட்க,
“நான் நாளைக்கு வரேன் ஆச்சியைப் பார்க்க…. கொஞ்சம் பார்த்துக்கோங்க… அவங்களை மட்டுமில்ல… உங்களையும் தான்…” என்றவன் அவர்களின் பதிலை எதிர்பார்க்காது விறுவிறுவென்று தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்…