(Reading time: 20 - 39 minutes)

மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலா

கொஞ்சம் கூட தயக்கமோ, பயமோ இல்லாமல் நேருக்கு நேராக காமெராக்களை பார்த்து அவன் பேசுவதற்கு வாய் திறந்த நேரத்தில்....

'கொஞ்சம் இருங்க ரிஷி. நானே எல்லாத்தையும் சொல்லிடறேன்' அவன் பின்னாலிருந்து குரல் கேட்டது. எல்லார் பார்வையும் அந்த திசையை நோக்கி திரும்பியது. சில அடிகள் முன்னால் வைத்து அவனருகில் வந்து நின்றாள் அவள். சத்தியமாக அவளை அங்கே எதிர்பார்க்கவில்லை ரிஷி. அவனுக்குள் பரவிய திகைப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல், புருவங்கள் உயர கண்கள் நிறைய கேள்விக்குறிகளுடன் அவளை பார்த்தான் ரிஷி.

அங்கே தனது தங்கையின் அறையில் தனது தோளில் சாய்ந்திருந்த அவளின் தலையை வருடியபடியே டிவியில் பார்வை பதித்திருந்த சஞ்சா, இன்னொரு அறையில் இருந்த சந்திரிக்கா, ராமன் உட்பட எல்லாரிடமும் ஒரே நேரத்தில் திடுக்கிடல். சில நொடிகள் சுவாசிக்க கூட மறந்திருந்தனர்.

Manathora mazhai charal

ரிஷியையும் அவளையும் சேர்த்து காமெராக்கள் விழுங்கிகொண்டிருக்க, அங்கே  வீட்டில் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்ட மகிழ்ச்சியில் டிவியின் திரையிலேயே பதிந்து கிடந்த சில கண்களில் உச்சக்கட்ட அதிர்ச்சி பரவிக்கிடந்தது.

'இவள் திருமணதிற்கு சென்றிருக்கிறாளா என்ன?' 'என்ன பேசப்போகிறாள் அவள்? 'நமது திட்டமெல்லாம் இப்போது நொறுங்கிப்போய் விடாதா? செய்வதறியாது அமர்ந்திருந்தனர் அவர்கள்..

சட்டென புரிந்தது ரிஷிக்கு. எய்தவனை நோக்கியே அம்பை திருப்பி விடும் அவளது திட்டம் புரிந்தது அவனுக்கு. அங்கே பேசுவதற்கு தன்னை அவள் அழகாக தயார் படுத்திக்கொண்டு வந்திருப்பதும் புரிந்தது. ஆனால் இத்தனை பேருக்கு முன்னால் அவளுக்கு எத்தனை பெரிய களங்கம் இது?' நிச்சயமாக உடன்பாடு இல்லை அவனுக்கு.

.'நீ எதுக்கு இங்கே வந்தே?' என்றான் அடிக்குரலில் 'உள்ளே போ... நான் பேசிட்டு வரேன்'. மற்ற நேரமாக இருந்திருந்தால் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று உள்ளே நிறுத்தியிருப்பான், ஆனால் இப்போது அது இயலாத காரியம். அவனது அசைவுகள் ஏன்? முக பாவங்கள் கூட தெளிவாக, நேராடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் கற்பிக்கபடும்

ரிஷியை ஒரு தீர்கமான பார்வை பார்த்துவிட்டு, எல்லாருக்கும் கேட்கும் படியே சொன்னாள் அவள் 'உண்மைகளை நீங்க சொல்றதை விட என் வாயாலே நானே சொன்னா தான் சரியா இருக்கும் ரிஷி.'

'நீ உள்ளே போன்னு சொன்னேன்....' கொஞ்சம் காரமாகவே வெளி வந்தன வார்த்தைகள்..

ஒரு தீவிரமான முக பாவத்துடன் இடவலமாக தலை அசைத்தவள் 'தப்பு செஞ்சது நான் தானே ரிஷி. நான் தான் பேசணும்' என்றாள் சத்தமாக. பின்னர் சட்டென திரும்பியவள் காமெராக்களை பார்த்து சொன்னாள் 'இந்த குழந்தை என்னோடது தான்.' என்றாள்

You might also like - Katrinile varum geetham... A family oriented romantic story 

அதிர்ச்சி அலைகள். எல்லாரிடமும் அதிர்ச்சி அலைகள். குழந்தையுடன் அமர்ந்திருந்தவனே சிலையாய் சமைந்திருந்தான். 'என்ன செய்வதாம் இப்போது???' ரிஷியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உடலும் மனமும் இறுக அந்த இடத்தில் எதையும் பேசிவிட முடியாத சூழ்நிலை கைதியாகவே நின்றிருந்தான் அவன்.

'எந்த அம்மாவும் செய்ய துணியாத, செய்ய முடியாத ஒரு தப்பை நான் செஞ்சிட்டேன். எனக்கு பிறந்த குழந்தையை என் சினிமா வாழ்க்கைக்கு தடையா இருக்கும்னு மறைச்சு வெச்சிட்டேன். நான் ரொம்ப பெரிய சுயநலவாதி.'

அவள் பேசிக்கொண்டிருக்க, இத்தனை நேரம் வளைத்து வளைத்து கேள்வி  கேட்டுக்கொண்டிருந்த அந்த நிருபரின் கைப்பேசி அலறியது. ஓரமாக சென்று அழைப்பை ஏற்றான் அவன்.

'ஹலோ '

'இதுக்கு மேலே நீ யாரையும் ஒரு கேள்வியும் கேட்கக்கூடாது. அங்கிருந்து பேசாம கிளம்பு அங்கே குழந்தையோட உட்கார்ந்து இருக்கான் பார். அவனும் எதுவும் பேசக்கூடாது குழந்தையை அவ கையிலே கொடுத்திட்டு பேசாம எங்கேயாவது போக சொல்லு. இப்போ இங்கே வர வேண்டாம். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்..' மறுமுனையில் அழுத்தமாக ஒலித்தது குரல்.

'எல்லாரும் தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க.' காமெராக்களை பார்த்து கையெடுத்து வணங்கினாள் அவள். நான் செஞ்ச தப்பை உணர்ந்திட்டேன். இனிமே நான் அவளை பத்திரமா பார்த்துப்பேன். என் பொண்ணை என் கிட்டே கொடுத்திடுங்க. ப்ளீஸ்..... ' அவள் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. குரல் நடுங்கியது. அந்த கைதேர்ந்த நடிகை மிக அழகாக நடித்துக்கொண்டிருந்தாள் அங்கே.

அந்த நிருபரின் கண்ணசைவில் மடியிலிருந்த குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு எழுந்தான் அவன். திட்டமிட்டுக்கொண்டு வந்த காட்சி அப்படியே திசை மாறிப்போனதில் கொஞ்சம் தடுமாற்றத்துடன் நடந்து அவள் அருகில் வந்தான் அவன். கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு குழந்தையை நோக்கி கை நீட்டினாள் அவள்.

குழந்தை அவள் கைசேர அதன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள் அவள். உறங்கிக்கொண்டிருந்த பிஞ்சை தன்னோடு இறுக்கிக்கொண்டவள் அவள் அருகில் விழித்துக்கொண்டு நின்றவனை பார்த்து சொன்னாள் 'ரொம்ப நன்றி சார். உங்களாலே தான் எனக்கு புத்தி வந்தது. என் குழந்தையை என்கிட்டே கொண்டு வந்து சேர்த்ததுக்கு நன்றி.'

இந்த களேபரங்கள், எல்லார் முகத்திலும் தொற்றிக்கொண்டிருந்த பரபரப்புகள் எதை பற்றியும் அறியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது அந்த குட்டி தேவதை. அதனிடம் சென்று விட்ட பார்வையை திரும்ப எடுக்க ரிஷி மிகப்பெரிய முயற்சி செய்ய வேண்டி இருந்தது.

'மேடம்.....' அவளை நோக்கி நீண்டது ஒரு மைக் இந்த குழந்தையோட அப்பா....'

'அது என்னோட பெர்சனல் விஷயம். அதை நான் இங்கே சொல்ல விரும்பலை. ஆனால் ஒரு விஷயம் மட்டும்  தெளிவா சொல்லிடறேன். இந்த குழந்தையோட அப்பா நிச்சியமா சினிமா சம்மந்த பட்டவர் இல்லை. இதிலே தயவு செய்து வேறே யாரையும் இழுத்துவிடாதீங்க ப்ளீஸ்...' தெளிவாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

'மறுபடியும் சொல்றேன் நான் செஞ்சது பெரிய தப்புதான். நான் மனசார மன்னிப்பு கேட்டுக்கறேன் இனிமே இந்த தப்பு நடக்காது. இந்த விஷயத்தை இதோட விட்டுடுங்க. நன்றி...' மறுபடியும் காமெராக்களை பார்த்து வணங்கிவிட்டு அவள் கிளம்ப , அங்கிருந்து  நகர்ந்து விட எத்தனித்தான் அந்த குழந்தையுடன் வந்தவன்.

சட்டென அவன் தோளில் விழுந்தது ரிஷியின் கரம். அவன் தோளை அணைத்தபடியே அவன் கண்களை ஊடுருவினான் ரிஷி. இவ்வளவு நெருக்கத்தில் ரிஷியின் கண்கள்!!!!  அவை அவனை என்னவோ செய்தன.

'ரி... ரி... ரி...ஷி... ரி....ஷி....' ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தான் அவன். அவன் உடல் நடுங்குவதை ரிஷியால் நன்கு உணர முடிந்தது. ஆனால் ஏனோ சுள்ளென கொதித்து பொங்கவில்லை ரிஷியின் கோபம். 'இவன் வெறும் பொம்மை, இவனை ஆட்டுவிக்கும் விசை வேறெங்கோ இருக்கிறது, என்பதாலோ என்னவோ, அவன் மீது கொஞ்சம் இரக்கம் கூட பிறந்தது.

'உங்க பேரென்ன??.' நிதானமான தொனியில் கேட்டான் ரிஷி.

'தி தி...வாகர்.....'  ரிஷியை விட்டு விலக மறுத்தன பிரமிப்பும் தவிப்புமாக அலைபாய்ந்த அவனது விழிகள்.

'உள்ளே வாங்க திவாகர்.'....... நாம உள்ளே போய் பேசுவோம்' சொன்னான் ரிஷி.

'அங்கே கூடி இருந்தவர்களின் ஆராய்ச்சி பார்வைகள், ரகசிய கிசுகிசுப்புகள், ஒன்றிரண்டு கேலிச்சிரிப்புகள் எல்லாவற்றையும் கடந்து, மூவரும் உள்நோக்கி நடந்தனர். திவாகரின் தோளை விட்டு கையை விலக்கவில்லை ரிஷி. அந்த அணைப்பில் கட்டுண்டவனை போலத்தான் நடந்தான் திவாகர். அவன் ரிஷியை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.