05. ஐந்து - பார்த்தி கண்ணன்
வினோத் காரை அந்த குறுகிய வளைவில் படுவேகமாக திருப்பினான். சாலையின் இடது புறத்தில் பள்ளத்தாக்கிற்கு சில அடிகள் முன்னாள் ,காரின் காதைக் கிழிக்கும் உறுமல் சத்தம் கேட்காமல் அரவிந்தும்,அஞ்சலியும் செல்போன் கேமிராவில் கண்பதித்திருந்தனர். காரினுள்ளே நால்வரும் வினோத் அடுத்த சில நொடிகளில் செய்யப்போகும் சாகசத்தைக் காண ஆவலோடு காத்திருந்தனர். வினோத் ஹார்னை அழுத்திப்பிடித்துக்கொண்டு, ஸ்டியரிங் வீலை இடப்புறம் சுழற்றினான். கார் படுவேகமாக அவர்கள் இருவரை நோக்கிப் பாய்ந்தது.
அஞ்சலி செல்போனிலிருந்து கண்ணெடுத்துப் பார்க்கும்போது கார் பத்தடி தூரத்தில் இருந்தது. அதன் வேகமும், ஹார்னின் பிளிறலும் ஒரு நொடியில் உடலை நடுங்கவைத்தது.
“ஹேய்..ஸ்டாப்..” அரவிந்தின் கையைப்பற்றிக் கொண்டே அந்த காரை நோக்கி கத்தினாள். கார் ஐந்தடி தூரத்தில்.
கார் கிட்டத்தட்ட அவர்களைத் தொட்டு விட்டது. வினோத் அடுத்த அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் சரியாகத் திருப்ப வேண்டும். பிரேக்கை மிதித்தான். காரை வலப்பக்கம் திருப்ப முயல்கையில், திடீரென அவன் கவனம் பிசகியது. கார் அவர்களை உரசும் தூரத்தை அடைந்துவிட்டது. அடுத்த நொடி அங்கே நடந்தவை அனைத்தும் ஏதோ ஸ்லோ மோஷனில் நிகழ்வது போல இருந்தது.
பதறிப்போன வினோத் காரை அவர்களை இடிக்காத வகையில் மேலும் இடது பக்கம் விலக முயல, கார் வலது பக்கம் போகுமென நினைத்து அவர்கள் இருவரும் தங்களுக்கு இடதுபுறமாகக் குதிக்க, காரினுள்ளே ஐவரும் அலற, கார் இருவரையும் அடித்துத் தூக்கியெறிந்தது. அவர்களை அடித்தத் வேகத்தில் திசைமாறி "ஸ்க்ரீச்" என்ற கதறலோடு திருகிப் போய் பள்ளத்தாக்கின் விளிம்பில் போய் நின்றது. அஞ்சலியும் அரவிந்தும் அந்த மோதலின் வலிமையில் இருபதடி தொலைவிலிருந்த பெரிய பாறை மீது சுழற்றியடிக்கப்பட்டு, நொறுங்கி விழுந்தனர்.
காருக்குள்ளே ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடந்தான் வினோத். மீதம் நால்வரும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதிருந்தனர். இப்படி நடக்குமென்று கனவிலும் அவர்கள் எண்ணியிருக்கவில்லை. முகுந்த் இருங்கி ஓடினான். அடுத்தடுத்து ஒவ்வொருவராய் இறங்கி ஓடினர்.
அங்கே இருவருக்கும் தலை முதல் பாதம் வரை தசைகள் கிழிந்து குருதி ஆறாய் பொங்கியது. அரவிந்த் தனது வாழ்வின் கடைசி சில நொடிகளை வாழ்ந்துகொண்டிருந்தான். அவன் உடல் முழுமையாக செயலிழந்திருந்தது. அவன் கண்முன்னே அஞ்சலி அரைகுறை உயிரோடு ஏதோ உளறிக்கொண்டிருந்தாள். இவன் அவளுக்கு கை கொடுக்க நினைத்தான். கை எழவில்லை. கூப்பிட முயன்றான். குரல் எழவில்லை. அவள் உடல் திடீரென உதறலெடுத்தது. ஏதோ உளறினாள். கண் திறந்து இவனைக் கண்டாள். அந்தப் பார்வை ஏதோ சொல்ல முயன்றது. ஒருவேளை அவளது கடைசி Good Byeஆக இருந்திருக்கலாம். அவள் அந்த பிரம்மாண்டமான பள்ளத்திலிருந்து மிகச்சில அங்குல இடைவெளியில் கிடப்பதை உணர்ந்திருக்கவில்லை. அவளின் உடல் மேலும் நடுங்கி, தானாகப் புரண்டது. அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பள்ளத்தாக்கிற்குள் அவள் புரண்டு விழுந்தாள். கண்ணிலிருந்து மறைந்து போய்விட்டாள். இவன் மனம் அமைதியாய் இருந்தது. எந்த வலியையும்,எந்த உணர்வையும் அவனால் உணர இயலவில்லை. கண்கள் தானாக மூடிக்கொண்டன.
You might also like - Nesam niram maaruma.. Cute family drama
முகுந்த் ஓடிப்போய் அரவிந்தின் அருகில் மண்டியிட்டு விழுந்தான். அரவிந்த் கண்களை மூடியிருந்தான். லேசாக சுவாசம் ஓடிக்கொண்டிருந்தது. நால்வரும் வந்து இவர்களைச் சுற்றி நின்றனர்.
“மை காட்..என்ன பண்ணிட்டோம் நாம.. அய்யோ" நித்யா கண்ணீர் விடத் தொடங்கினாள்.
“எங்க அந்தப் பொண்ணு?” என கேட்டபடியே சாரா கீழே எட்டிப்பார்த்தாள். பார்வைக்கெட்டிய ஆழம் வரை ஒன்றும் புலப்படவில்லை. தலைசுற்றியது.
“அவ விழுந்துட்டா" என்றாள் சாரா.
“எனக்கு பயமா இருக்கு..அய்யோ..கொலை பண்ணிட்டோம்,,கொலை பண்ணிட்டோம்" என தலையில் கைவைத்து அழுதான் ஜேம்ஸ்.
“இவன் இன்னும் சாகல. மூச்சு இருக்கு. சீக்கிரம் கொண்டு போனா பிழைக்க சான்ஸ் இருக்கு" என்றான் முகுந்த்.
“பயமா இருக்கு முகுந்த். யாராவது பாக்குறதுக்குள்ள இங்க இருந்து இவன எடுக்கணும் டா. சீக்கிரம்..நா வண்டிய எடுக்கிறேன்" என கண்களை அவசரமாகத் துடைத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான் வினோத்.
“தூக்குங்க. தலைல அடிப்பட்டிருக்கு. காதுல ரத்தம் வருது. ரொம்ப கஷ்டம். ஜீசஸ்" என பிரார்த்தித்துக் கொண்டே அரவிந்தின் கையைப் பிடித்தாள் சாரா.
ஐவரையும் குற்ற உணர்ச்சி துளைதெடுத்தது. பயமும் பற்றிக்கொண்டது. சாராவும், முகுந்தும் அரவிந்தின் கைகளைப்பிடித்துகொள்ள, வினோத்தும்,ஜேம்ஸும் இருகால்களைப் பிடித்துத் தூக்கினர். காரை நோக்கி வேகமாக அவனை எடுத்துச் சென்றனர். நித்யா அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.
அவர்கள் காரின் அருகே சென்றுவிட்டனர். அப்போது நித்யா அழைத்தாள்.
“ஸ்டாப். நில்லுங்க" என்று கத்தினாள்.
நால்வரும் ஒரு நொடி அப்படியே நின்றனர்.
“நித்யா..அங்க என்ன பண்ற? “ என கோபத்தில் கத்தினான் முகுந்த்.
“அவன ஹாஸ்பிடல் கொண்டு போக வேண்டாம்"
“இவனுக்கு இன்னும் மூச்சு ஓடிட்டு இருக்கு. சீக்கிரம் போனா காப்பாத்தலாம். பேச நேரம் இல்ல வா" என்றான் வினோத்.
நித்யா ஓடி வந்தாள்.
“ஹாஸ்பிடல் போய்? என்ன பண்ண போறீங்க? இவன பொழைக்க வைப்பிங்களா? அப்புறம்? நாம எல்லாரும் ஜெயிலுக்கு போறோமா?
யாரும் பதில் சொல்லவில்லை. இந்த கேள்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
“நாலு பேரும் குடிசிருக்கிங்க. ஹாஸ்பிடல் போனதும் முதல் வேலையா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க. இவன காப்பாத்தினாலும் அந்த பொண்ன கொன்னதுக்காக ஜெயிலுக்கு போவோம். நாமா வாழ்க்கை அழிஞ்சுது அதோட" என்றாள்.
“நித்யா,,பாவம் நித்யா. உயிரோட இருக்கான் நித்யா" என்றாள் சாரா.
“பைத்தியாமா நீ? சொல்றது புரியல. ஒரு கொலை பண்ணினாலும் ரெண்டு பண்ணினாலும் பாவம் ஒன்னு தான். இப்போ இவன காப்பாத்தப் போய் நம்ம அஞ்சு பேர் வாழ்கையும் நாசமாகுறத விட, இந்த ரெண்டு பேரோட போறது தான் நல்லது. தப்பு பண்ணியாச்சு. இப்போ தப்பிக்க வழி பாப்போம்"
இவள் பேசியது தான் சரியாகப்பட்டது. கொலை வழக்கு,போலிஸ்,ஜெயில்,ஐந்து பேர் எதிர்காலம் எல்லாம் நினைக்கவே பீதியாக இருந்தது.
“அப்போ...இப்படியே விட்டுட்டுப் போகப் போறோமா?” முகுந்த் கேட்டான்.
நித்யா அவன் கண்களையே பார்த்தாள். நால்வரும் இவளையே பார்த்தனர். இவள் இல்லை என்பது போல் தலையாட்டினாள்.
“அப்போ என்ன பண்ணப் போறோம்?”
நித்யா ரோட்டில் நின்று இரண்டு புறமும் பார்த்தாள். எந்த நடமாட்டமும் அருகில் தென்படவில்லை. “ம்ம்ம்" என்று அவர்களை நோக்கி தலையசைத்தாள்.
மூன்றாயிரம் அடி ஆழப் பள்ளத்தாக்கு இன்னொரு உயிரை விழுங்க ஆவலாய் இருப்பது போல் காற்றை அதன் பாறைகளிலும்,மரங்களிலும் சுழற்றியடித்து மர்மான ஒலி எழுப்பியது. இருளிலும் அதன் பிரம்மாண்டம் அச்சமடையச் செய்தது. அதன் உச்சியிலிருந்து நால்வரும் அரவிந்தை தூக்கி எறிந்தனர். காற்றுவெளியில் அவன் புரண்டபடியே செல்வதைக் கண்டனர். ஒரு நூறு அடிகளுக்குப்பின் அமைதியாக அவன் இருளில் இவர்களின் கண்களிலிருந்து அமைதியாய் மறைந்து போனான்.