(Reading time: 16 - 32 minutes)

மனதோர மழைச்சாரல்... - 14 - வத்ஸலா

HAPPY NEW YEAR EVERYONE!!!!! HAVE A GREAT YEAR AHEAD!!!!

ங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்!!!!! யாருமே எதிர்பார்த்திராத வகையில் சட்டென எங்கெங்கும் சந்தோஷ அலைகள் பொங்கின.!!!!! வந்திருந்த பெரிய பெரிய நடிகர்கள் உட்பட எல்லார் முகத்திலும் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்து போனது.

'எங்கள் சஞ்சாவுக்கு திருமணம்' என்ற சந்தோஷம், பாரபட்சம் இல்லமல் எல்லார் மனதிலும் பரவியது.. திரை உலகிலும், நண்பர்கள் மத்தியிலும் அவன் சம்பாதித்து வைத்திருக்கும் அன்பு அத்தனையும் வாழ்த்துக்களாக அவன் மீது பொழிந்து கொண்டிருந்தது அங்கே!!!

மணக்க மணக்க இரண்டு பூ மாலைகள் அவர்களை நோக்கி வந்தன. அஹல்யாவின் பார்வை அவசரமாக தனது அம்மாவை தேடியது. எங்கே இருக்கிறார் அவர்???

Manathora mazhai charal

அவள் மனதை படித்தவளாக 'இரு நான் அம்மாவை மேலே கூட்டிட்டு வரேன்' என்றபடி கீழே இறங்கினாள் அருந்ததி.. சில நிமிடங்களில் அவளது அம்மா  மேடைக்கு வந்துவிட்டிருந்தார். நிஜமாகவே இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை அவர் எதிர்பார்த்திருக்கவில்லைதான்.

சில நிமிடங்கள் கழித்து மேடை மெது மெதுவாக மேடை ஏறி வந்து மகளின் அருகில் நின்றார் அரவிந்தாட்சன். அவர் பார்வை சஞ்சாவை சேர திவாகரை தடுத்து விட்டேன் என்பதை அவனுக்கு சொல்லும் விதமாக ஒரு தலை அசைப்பு அவரிடம்.

பல நாட்களுக்கு பிறகு அவரை பார்த்து நட்பாக நிறைவாக புன்னகைதான் சஞ்சா. சந்திரிக்காவும், ராமனும் மகிழ்ந்து போய் நின்றிருக்க நண்பனின் மலர்ந்த முகத்தை ரசித்தபடியே நின்றிருந்தான் ரிஷி.

மாலையை கையில் வாங்கினான் சஞ்சா. அவள் கையை சேர்ந்தது இன்னொரு மாலை. மாலையை அவளுக்கு அணிவிக்கும் முன் அதன் வழியாக அவள் முகம் பார்த்தான் அவன்.. உணர்ச்சி கலவைகளின் மொத்த உருவமாக அவள்.

சற்றுமுன் வரை அவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும் என்ற மனநிலையில் தானே இருந்தாள் அவள்.???? இப்போது அவன் கையால் பூ மாலை என்றால்??? அவள் நிலையும் தவிப்பும் புரிந்தவனாக பூமாலையின் வழியே அவள் முகம் பார்த்து கண்சிமிட்டி இதமாக சிரித்தவன் அவளுக்கு அணிவித்தான் அந்த மலர் மாலையை.

வெட்கம், நாணம், பரவசம் இவை எல்லாம் அவளிடத்தில் போட்டி போடாவிடினும் அடித்த காற்றில் கூட்டை விட்டு திசைமாறிப்போன பறவை, மறுபடியும் கூட்டை அடையும் ஆறுதலும், நிம்மதியும் அவளிடம் பிரதிபலிக்க தவறவில்லை. அவளும் அழகான புன்னகையுடன்  மாலையிட்டாள் அவனுக்கு.

அடுத்து அங்கே பொழிந்துகொண்டிருந்த பூ மழைக்கும், மங்கல வாத்தியங்களுக்கும் நடுவே அவன் அவளுக்கு தாலி கட்டிக்கொண்டிருக்க அங்கே நின்றிருந்த இன்னொரு ஜோடி மணமக்கள் உட்பட அத்தனை பேரும் இந்த திடீர் திருமண சந்தோஷத்தில் மிதந்துக்கொண்டிருந்தனர்  

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

கண்களில் கொஞ்சமாக நீர் கோடிட மெதுவாக உச்சரித்தாள் அஹல்யா 'சஞ்சா...'

தனது நண்பன் தாலி கட்டி முடிக்க, அவனை வாழ்த்தும் முதல் ஜீவனாக அவனை தோளோடு அணைத்துக்கொண்டான் ரிஷி.

'சந்தோஷமா இருக்கனும்டா நீ. எப்பவும் என்னைக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும்' சொல்லிவிட்டு, அஹல்யாவையும் வாழ்த்திக்கொண்டிருந்தான் அவன்.

கைகுலுக்கல்கள், வாழ்த்துக்கள், புன்னகைகள் சந்தோஷங்கள் எல்லாமே சூழ்ந்திருந்தன சஞ்சாவை. மண்டபத்தின் வாசலில் வெடி சத்தமும் கொண்டாட்டமும் களைகட்டி இருக்க, அவனது திருமண விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஊரில் பரவிக்கொண்டிருக்க, தோளில் மாலை அசைந்தாடிக்கொண்டிருக்க எல்லாருடனும் மலர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தவனின் இடக்கரம் அஹல்யாவின் கரத்தை விடாமல் பற்றி இருந்தது.

விழி அகற்றாமல் அவன் முகத்தையே தான் பார்த்திருந்தாள் அவள். அன்றொரு நாள் கழுத்தில் இருந்த சங்கிலியை அவள் தூக்கி எறிந்து விட்ட காட்சியே அவள் மனதில் திரும்ப திரும்ப ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருந்தது.

அவனுக்கும் அவள் எண்ணங்கள் புரிந்திருக்கவேண்டும். அவனை வாழ்த்திக்கொண்டிருந்த ஒரு இசை அமைப்பாளரிடம் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தபடியே அவள் கையை இதமாக அழுத்திக்கொடுத்தான் சஞ்சா.

அவர் விலகியதும் அவள் முகம் பார்த்தான் அவன். 'என்ன கொசுவத்தி சுருள் சுத்தி பிளாஷ் பேக் நினைச்சுட்டிருக்கியா? 'இரு இப்போ பாரு உனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் ஃபிளாஷ் பேக் எல்லாம் மறந்திடும் ....' என்றவன் அவள் தோள் அணைத்து அவளை தன்னருகில் கொண்டு வந்து..

'சஞ்சா... ப்ளீஸ்... எல்லாரும் பார்க்கறாங்க... .'உனக்குன்னு இண்டஸ்ட்ரீலே ஒரு மரியாதை இருக்கு'' அவனை தள்ளிவிட்டு. விலகினாள் அஹல்யா. முகத்தில் வெட்க சிரிப்பு பரவுவதை அவளாலேயே தடுக்க முடியவில்லை.

'அப்போ சிரிச்சிட்டு சந்தோஷமா இரு. நீ வெட்கப்பட்டா எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா. இப்படியே இரு எப்பவும். பழசு எதையும் யோசிக்காதே. எல்லாம் முடிஞ்சு போச்சு சரியா.? வா... ' அவள் கரம் பற்றி அழைத்துக்கொண்டு அருந்ததியின் அருகில் வந்து அவள் அருகில்  நின்றிருந்த  குழந்தையை அள்ளிக்கொண்டு  பத்திரிகையாளர்கள் முன்னால் சென்று நின்றான் சஞ்சா.

கேமரா பிளாஷ்கள் மின்னின. அவள் தோளை அணைத்துக்கொண்டு புகைப்படங்களுக்கு புன்னகைதான் சஞ்சா. பின்னர் மைக்கை கையில் எடுத்துக்கொண்டான். அங்கே மௌனம் நிலவியது. பேசத்துவங்கினான் சஞ்சா.

'என்னை இவ்வளவு தூரம் மதிச்சு என் வீட்டு கல்யாணத்துக்கு நீங்க எல்லாரும் வந்ததுக்கு ரொம்ப நன்றி. இதோ!!!! என்னோட புது வாழ்க்கையையும் இந்த நிமிஷத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். இந்த நாட்டோட எல்லா மூலையிலிருந்தும் என்னை வாழ்த்திட்டிருக்கிற எல்லா ரசிகர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் எங்களை வாழ வெச்சிட்டிருக்கிற தமிழ் மக்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும் சந்தோஷ சிரிப்புடன் எல்லாவற்றையும் மாறி மாறி பார்த்திருந்தது குழந்தை.

'சந்தோஷமான இந்த நேரத்திலே என்னோட இன்னொரு வேண்டுகோளையும் எல்லாரும் எத்துபீங்கன்னு நம்பறேன். அஹல்யா என் மனைவி. தீக்ஷா என் குழந்தை. எப்பவுமே நாங்க தீக்ஷாவை தவிக்க விட்டதில்லை. பல நாட்களா அவ என் பாதுகாப்பிலே தான் இருந்தா. அதுதான் உண்மை. அவ எனக்கு உயிர் சார்.' அவன் சொல்லி முடிக்க என்ன தோன்றியிருக்க வேண்டுமோ??? அவன் சொல்வது உண்மை என்று சொல்வதை போலவே அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டது தீக்ஷா.

நெகிழ்ந்து போனான் சஞ்சா. படபடவென மின்னின கேமரா பிளாஷ்கள். குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மாறி மாறி முத்தமிட்டான் சஞ்சா. எல்லாரிடமும் சந்தோஷ புன்னகை.

மறுபடியும் காமெராக்களை நோக்கி நிமிர்ந்தான் சஞ்சா. 'இனிமேல் எங்களை பற்றியும் எங்க வாழ்கையை பற்றியும் யாரும் தவறா விமர்சனம் செய்யறதை நான் விரும்பலை. நாங்களும் மனுஷங்க தான் சார். உங்க வீட்டிலே இருக்கறவங்களை பத்தி நாங்க விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ, அதே கோபம் தான் எங்களுக்கும் வரும்.' அவன் சொல்ல கண்களில் நீர் பளபளக்க அவனையே பார்த்திருந்தாள் அஹல்யா.

'இனிமே என் மனைவியை யாரும் தப்பா விமர்சனம் செய்ய மாட்டீங்கன்னு நம்பறேன் அப்படி யாரவது செஞ்சா அவங்க மேலே சட்டபடி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன்.' அழுத்தமான குரலில் சொன்னான் சஞ்சா. அவன் கண்களில் கொஞ்சம் தீவிரம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.