04. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ
காலை பரப்பரப்பாக வேலை செய்து கொண்டிருந்த வளர்மதி வேலைகளை பாதியிலே விட்டுவிட்டு வந்து சுஜாதாவிடம் பேசிய பின் மீண்டும் வேலைகளை தொடராமல் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
சுஜாதா இந்தியா வந்ததும் அவளிடம் என்ன பதில் கூறுவது??? என்று கவலையாக இருந்தது வளர்மதிக்கு...
யுக்தா பிறந்ததில் இருந்தே சுஜாதாவின் மனதில் இந்த ஆசைதான், யுக்தாவுக்கும் பிருத்விக்கும் திருமணம் செய்யவேண்டும், நாம் இருவரும் உறவுக்காரர்கள் ஆக வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.
சுஜாதா ஆசைப்படி நடந்தால் அது வளர்மதிக்கும் சந்தோஷமே.. அதனால் சுஜாதா இதைப்பற்றி பேசிய போதெல்லாம் இவளும் சுஜாதாவுடன் இணைந்து கொள்வாள், சுஜாதா நியூயார்க் சென்ற பின்பு கூட இந்த திருமணத்தை பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் செந்தில் இவர்கள் இப்படி பேசிக் கொள்வதை விரும்பவில்லை, நமக்குள் இப்படி ஒரு ஆசை இருந்தால் அதை நம் மனதோடு வைத்து கொள்ள வேண்டும்... அதை இப்படி பேசி பேசி சிறியவர்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடாது... அதுமட்டுமல்ல நம் ஆசையை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது... அவர்கள் திருமண வயது வரும்போது அப்போது நம் ஆசையை கூறுவோம் அவர்களுக்கும் விருப்பம் இருந்தால் இந்த திருமணத்தை சந்தோஷமாக நடத்தலாம் என்று சொல்லி இவர்களின் பேச்சுக்கு தடைப் போட்டார்.
அதன்பிறகு இந்த திருமணத்தை பற்றி சில வருடங்களாக இவர்கள் பேசிக் கொள்வதில்லை... ஆனால் சுஜாதா இதைப்பற்றி இன்று பேசும் போது எப்போதும் இருக்கும் மனநிலை இப்போது இல்லை வளர்மதிக்கு. மூன்று வருடங்களாகவே இவளுக்கு தெரியும் சுஜாதாவின் ஆசைப்படி இந்த திருமணம் நடக்கப் போவதில்லை என்று
ஆனால் அதை சுஜாதாவிற்கு தெரியப்படுத்த இவளால் முடியவில்லை... இதைப்பற்றி சொல்லி சுஜாதாவின் மனதை கஷ்டப்படுத்த ஏனோ வளர்மதிக்கு மனம் வரவில்லை.
இதற்கெல்லாம் காரணம் பிருத்வி தான்... ஆனால் அது அவன் தவறில்லையே...
பிருத்வியை போன்ற ஒரு பிள்ளையை பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பாள் வளர்மதி, சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மா மனதை புரிந்து கொண்டு நடப்பவன் அவன்... எதற்கும் அடம்பிடிக்க மாட்டான், சொல்லாமலேயே நன்றாக படித்து விடுவான் அவனைப் பார்த்து பிரணதியும் கூட அப்படியே நடந்துக் கொள்வாள்.
இப்போதெல்லாம் பிள்ளைகளை காலேஜ் அனுப்பிட்டு பெத்தவங்க வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்காங்க.... பசங்க என்ன கெட்டப் பழக்கங்களை கத்துக்கிட்டு வருவாங்களோன்னு... ஆனால் அந்த பயம் கூட இவனால் இவர்களுக்கு ஏற்பட்டதில்லை.
You might also like - Oru kootu kiligal... A family drama...
செந்திலுக்கு மனதில் ஒரு ஆசை... தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனியை தனக்குப் பிறகு பிருத்வி பார்த்து கொள்ள வேண்டும் என்று... ஆனால் அதை அவனிடம் அவர் கூறியதில்லை. ஆனால் அவனே அதைப் புரிந்துக் கொண்டு சிவில் இஞ்சினியரிங் படித்து இப்போது இந்த கம்பெனியை நல்லபடியாக நடத்தி வருகிறான்.
என்ன அவனுக்கு இருக்கும் ஒரே கெட்டப் பழக்கம் கோபப்படுவது தான்... அதை அவன் ஏனோ மாற்றிக் கொள்வதில்லை...
இப்படி எல்லாவிதத்திலும் பெற்றவர்களுக்கு நல்ல மகனாக இருப்பவன்... தனக்கு ஒரு விருப்பம் என்று இவர்களிடம் கேட்டு வந்தால் இவர்களால் எப்படி அதை மறுக்க முடியும்.
அவன் படிப்பு முடிந்ததும் நேராக வந்து இவங்கக் கிட்ட ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் கூறிஅவளை காதலிக்க இவர்களிடம் அனுமதியும் கேட்டான்.
இப்பத் தான் படிப்பு முடிஞ்சிருக்கு... நீங்க ஆசைப்பட்டது போல நான் அந்த கம்பெனிய இன்னும் பெரிய லெவல்க்கு கொண்டு போகனும்... அது வரைக்கும் லவ் பண்ண பர்மிஷன் கொடுங்கப்பா... என்று அவன் கேட்கும்போது...
பெற்றவர்களுக்கே தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிக்கிட்டு வரும் பசங்க மத்தியில் காதலிக்கவே... அனுமதிக்கு வந்திருக்கும் மகனுக்கு இவர்களால் மறுப்பு சொல்ல முடியுமா..??
அதுவும் இவர்களே காதலித்து மணம் முடித்தவர்கள் தானே.... இவர்களும் சம்மதித்து விட்டனர்.
இப்படி இருக்க... சுஜாதாவிற்கு என்ன பதில் கூறுவது... இப்படி இவள் குழம்பிக் கொண்டிருக்க... காலையிலேயே மனைவி சோர்வா உட்கார்ந்திருக்கிறாளே என்ன என்று தெரியாமல் வளர்மதியின் அருகில் வந்தார் செந்தில்.
"என்ன மதி காலையிலேயே ரெஸ்டா.... ஆமா ஃபோன் வந்துச்சே யார் பேசினது...??"